"இனியும் ஏமாற்ற முடியாது!" தீயாக பரவும் AI வீடியோக்கள்! கடிவாளம் போடும் மத்திய அரசு! முக்கிய உத்தரவு
டெல்லி: ஏஐ மூலம் உருவாக்கப்படும் வீடியோக்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது ஏஐ வீடியோக்கள் என்றால் அதை மிகத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்றும் ஏஐ வீடியோக்களை நீக்க அரசு அல்லது நீதிமன்றம் உத்தரவிட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீப காலங்களாகவே ஏஐ ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் ஏஐ வீடியோக்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. டீப் பேக், ஏஐ போன்ற தொழில்நுட்பங்கள் அதிநவீனமாக மாறிவிட்டது. இதனால் எந்த வீடியோ உண்மை அல்லது எந்த வீடியோ ஏஐ என்பதையே யூசர்களால் கண்டுபிடிக்க முடிவதில்லை.

முக்கிய உத்தரவு
இந்தச் சூழலில் தான் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களை தெளிவாக அவை ஏஐ மூலம் உருவாக்கப்பட்டவை என்று குறியிட வேண்டும் என்றும் அந்த அடையாள மார்க் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
அரசு அல்லது நீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்பட்டால், அதுபோன்ற AI அல்லது டீப்ஃபேக் வீடியோக்களை மூன்று மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நீக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருமுறை சேர்க்கப்பட்ட ஏஐ மார்க் அல்லது மெட்டா டேட்டாவை நீக்கவோ, மறைக்கவோ தளங்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
டூல்கள்
சட்டவிரோத, பாலியல் சுரண்டல் அல்லது தவறான தகவல் தரும் AI வீடியோ அல்லது கன்டெண்டுகளை கண்டறிந்து, அதைத் தடுக்கும் ஆட்டோமேடிக் கருவிகளைச் சமூக வலைத்தள நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், AI டூல்களை தவறாகப் பயன்படுத்தினால் அல்லது ஏஐ விதிகளை மீறுவதால் ஏற்படும் விளைவுகள் அல்லது சட்ட நடவடிக்கை குறித்து யூசர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும். குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது இது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஏன் முக்கியம்
சமீப காலமாகவே இணையத்தில் டீப்ஃபேக்குகளின் குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் தான் மத்திய அரசின் இந்த புதிய வழிகாட்டுதல்கள் வெளிவந்துள்ளன. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த மாதம் முன்மொழிந்த தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021ன் வரைவுத் திருத்தங்கள் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. AI மூலம் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட வீடியோவை யார் பதிவிட்டாலும் அது ஏஐ வீடியோ என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்பதை இந்த விதி கட்டாயமாக்குகிறது.
இந்த உத்தரவுகளைச் சமூக வலைத்தள நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். முதற்கட்டமாக இந்தியாவில் 50 லட்சத்திற்கும் மேலான யூசர்களை கொண்ட சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிறகு படிப்படியாக இது விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தள நிறுவனங்கள்
அதேநேரம் இதுபோல ஏஐ வீடியோக்களை மார்க் செய்யும் பழக்கத்தை ஏற்கனவே சில சமூக வலைத்தளங்கள் கொண்டு வந்துவிட்டன. உதாரணமாக, உண்மையான நபர்களை வைத்து உருவாக்கப்படும் ஏஐ வீடியோக்கள் குறித்துக் குறிப்பிட வேண்டும் என சேனல்களை யூடியூப் வலியுறுத்தி வருகிறது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலியிலும் சில கட்டுப்பாடுகளை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications