AI அமைச்சர் கர்ப்பம்.. அதுவும் 83 குழந்தைகள் ரெடியாம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த அல்பேனியா பிரதமர்
அல்பேனியா: தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியா ஏஐ அமைச்சரை நியமித்திருந்தது. அதாவது இவர் தனிநபர் இல்லை.. முழுக்க முழுக்க ஏஐ! இதற்கிடையே இந்த ஏஐ கர்ப்பமாகி இருப்பதாக.. அதுவும் 83 குழந்தைகளுடன் கருவுற்று இருப்பதாகச் சொல்லி அதிர்ச்சி கொடுத்துள்ளார் அந்நாட்டின் பிரதமர் எடி ராமா.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்தக் காலத்தில் நாம் திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ குறித்தே பேச்சாக இருக்கிறது. எல்லாத் துறைகளிலும் ஏஐ வளர்ந்து வருகிறது. அதேபோல உலக நாடுகளும் கூட ஏஐக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அப்படி தான் தென்கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் அல்பேனியா தனது நாட்டிற்கு ஏஐ ஒன்றை அமைச்சராக நியமித்தது.

ஏஐ அமைச்சர்
இதில் நாம் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது மற்ற நாடுகளுக்கு ஏஐ துறைக்கு ஒரு நபரை அமைச்சராகப் போடுவார்கள். ஆனால், அல்பேனியா ஏஐ டூல் ஒன்றையே அமைச்சராக நியமித்திருந்தது. அதற்கு டயெல்லா என பெயரும் வைத்துள்ளனர். இதுவே வினோதம் என நினைக்க வேண்டாம்.. இதை விட வினோதமான சம்பவம் இப்போது நடந்துள்ளது.
அதாவது நாட்டின் செயற்கை நுண்ணறிவு அமைச்சர் டயெல்லா கர்ப்பமாக இருப்பதாக அல்பேனியா பிரதமர் எடி ராமா அறிவித்துள்ளார். அதுவும் 83 குழந்தைகளுடன் கர்ப்பமாக இருப்பதாக எடி ராமா அறிவித்தார். அவரது அறிவிப்பு பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. உண்மையில் அவர் என்ன சொல்ல வருகிறார்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
83 குழந்தைகள்
அதாவது ஏஐ டூலான டயெல்லாவை அடிப்படையாக வைத்து, அதிலிருந்து அசிஸ்டெண்ட்டை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். அங்குள்ள ஒவ்வொரு எம்பிக்கும் ஒரு ஏஐ உதவியாளரை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனராம். இதைத் தான் எடி ராமா 83 குழந்தைகள் என குறிப்பிட்டுள்ளார்.
பெர்லினில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய எடி ராமா மேலும், "நாங்கள் டயெல்லாவை ஒரு சோதனை முறையில் முயன்றோம். அது சிறப்பாக அமைந்தது. இப்போது முதல் முறையாக டயெல்லா 83 குழந்தைகளுடன் கர்ப்பமாக இருக்கிறார்.. இந்த குழந்தைகள் அல்லது உதவியாளர்கள் நாடாளுமன்றத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்வார்கள்..
என்ன வேலை
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறவிட்ட விவாதங்கள் அல்லது நிகழ்வுகள் குறித்து அவர்களுக்குத் தகவல் விளக்குவார்கள். தேவையான பரிந்துரைகளை வழங்குவார்கள். இந்தக் குழந்தைகளுக்கு அவர்களின் தாயின் அறிவு இருக்கும். வரும் 2026 இறுதிக்குள் இந்த அமைப்பு முழுமையாகச் செயல்படும்" என்றார்.
இந்த AI உதவியாளர்கள் எப்படி செயல்படும் என்பதை விளக்கிய அவர், "உதாரணமாக, அவை நடக்கும்போது ஒருவர் காபி குடிக்குச் சிறிது நேரம் வெளியே போய் வருகிறார் என்றால் அந்த இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்பது அவருக்குத் தெரியாமல் போகலாம்.! ஆனால், இந்த ஏஐ உதவியாளர் நீங்கள் அவையில் இல்லாதபோது என்ன பேசப்பட்டது என்பதைச் சொல்வார்கள் இதுவே எங்கள் திட்டம்" என்றார்.
பின்னணி
அல்பேனியாவை ஊழல் இல்லாத நாடாக மாற்றும் நோக்கில் கடந்த செப்டம்பர் மாதம் டயெல்லா அறிமுகப்படுத்தப்பட்டார். டயெல்லா என்றால் சூரியன் என்று பொருளாகும்.. கடந்த ஜனவரி மாதம் முதலில் டயெல்லா ஒரு உதவியாளராகவே அறிமுகப்படுத்தப்பட்டார். பொதுமக்கள் தேவையான அரசு ஆவணங்களை எளிதாகப் பெற உதவவே இது உருவாக்கப்பட்டது.
இது வெற்றிகரமாக இருந்ததால் டயெல்லா ஏஐ அமைச்சராக நியமிக்கப்பட்டது. இதுபோல ஏஐ டூல் ஒன்றை அமைச்சராக அதிகாரப்பூர்வமாக நியமித்த உலகின் முதல் நாடு அல்பேனியா ஆகும். இந்த AI அமைச்சர் எப்போதும் பாரம்பரிய அல்பேனிய உடையில் இருப்பது போலக் காட்சிப்படுத்தப்படுகிறது. அரசு டெண்டர்கள் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுத்து, அவற்றை 100% ஊழலற்றதாக மாற்றும் பொறுப்பு டயெல்லாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெண்டர் ஊழல் முழுமையாக ஒழிக்கப்படும் என அல்பெனியா அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications