என்னாது பாமக போட்ட பிச்சையா? அப்ப 2021 இல் விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் தோற்றது ஏன்? இபிஎஸ் கேள்வி
சென்னை: விழுப்புரம் தொகுதியில் கூட பாமக வலிமையாகத்தானே இருக்கிறது, பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சி.வி.சண்முகம் ஏன் தோற்றார் என அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
தமிழக அரசியல் களம் அடுத்தடுத்துப் புதிய திருப்பங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமியிடமிருந்து வெளிவந்துள்ள அதிரடி அறிவிப்பு கோட்டை வட்டாரங்களை உலுக்கியெடுத்துள்ளது.

"திமுகவின் வாரிசு அரசியலைத் தீவிரமாக எதிர்க்கும் அதிமுகவில், அடுத்த தலைமுறையாக இ.பி.எஸ்-ஸின் மகன் மிதுன் குமார் களம் இறக்கப்படுகிறாரா?" என்ற கேள்விக்கு, சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிவில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
மிதுன் குமாருக்குக் கட்சியின் இளைஞரணி அல்லது ஐடி விங்கில் முக்கியப் பதவி கொடுக்கப்படலாம் என்று ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவிய செய்திகளுக்கு, அவர் தனது பாணியில் மிகத் திட்டவட்டமான மற்றும் காரசாரமான விளக்கத்தை அளித்துள்ளார்."என் மகன் அரசியலுக்கு வரமாட்டான்!. அவர் அரசியலுக்கு வரப்போகிறார் எனச் சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை; திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகள். அவர் அதிமுகவில் ஒரு சாதாரண அடிப்படை உறுப்பினராக மட்டுமே உள்ளார். அவர் கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லை, எதிர்காலத்திலும் தீவிர அரசியலுக்கு வரமாட்டார் என்பதை மீண்டும் மிகவும் அழுத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
38 நாட்களில் 130 கொலைகள்!
தவெக அரசு பொறுப்பேற்ற இந்த மிகக் குறுகிய காலத்திற்குள் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார் எடப்பாடி பழனிசாமி. அவர் கூறுகையில், "ஆட்சிப் பொறுப்பேற்ற வெறும் 38 நாட்களில் தமிழ்நாட்டில் 130 கொலைகளும், 150-க்கும் மேற்பட்ட பாலியல் வழக்குகளும் பதிவாகியுள்ளன. பெண்களுக்குப் பாதுகாப்பு தருவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்களின் தற்போதைய லட்சணம் இதுதான்" என்று மிகக் காட்டமாகச் சாடினார்.
தவெக அரசு பெண்களின் பாதுகாப்புக்காகப் பிரம்மாண்டமாக அறிவித்த 'சிங்கப்பெண் சிறப்புப் படைக்கே' தனியாக ஒரு பாதுகாப்பு தேவைப்படும் அவல நிலைதான் இன்று தமிழ்நாட்டில் நிலவுகிறது என்று கிண்டலடித்தார்.
தேர்தல் களத்தில் தவெக கொடுத்த கவர்ச்சிகரமான வாக்குறுதிகளான - ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள், அண்ணன் சீர் திட்டம், மற்றும் தங்க மோதிரம் போன்ற திட்டங்கள் என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பிய அவர், புதிய அரசு மக்களை ஏமாற்றி வருவதாகக் குற்றம் சாட்டினார்.
தமிழக அரசியல் தளம் புதிய தலைமைகளின் வருகையாலும், அதிரடி விமர்சனங்களாலும் பரபரப்பாக மாறியுள்ள சூழலில், எடப்பாடி பழனிசாமியின் இந்த நேர்காணல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் சி.வி.சண்முகம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வரும் தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு எடப்பாடி பழனிசாமி, இந்த கேள்வியை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். அதிமுக தலைமை சரியாக இருந்த காரணத்தால்தான் சி.வி.சண்முகத்தால் வெற்றி பெற முடிந்தது.
பாமக தயவால்தான் தற்போது அதிமுக எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றிருப்பதாக கூறும் அவர் ஏன் 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் தோற்றார்? விழுப்புரம் கூட பாமக வலிமையாக இருக்கிற இடம்தானே! கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தவே சண்முகம் இவ்வாறு பேசியிருக்கிறார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications