பயிற்சி கொடுத்த பெண்ணின் வேலையையே பறித்த AI.. 25 வருடம் பணியாற்றியவரின் வேலை 2 நிமிடத்தில் போச்சு
கான்பரா: ஒரு பக்கம் ஏஐ பயன்பாடுகள் அதிகரித்து வரும் அதேநேரம், மற்றொரு பக்கம் இதனால் ஆபத்துகள் குறித்தும் விவாதங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், ஏஐ டூல் ஒன்றுக்குப் பயிற்சி அளித்திருக்கிறார். அந்த ஏஐ டூல் ரெடியான உடன் இவரை வேலையை விட்டுத் தூக்கிய அந்த நிறுவனம் ஏஐ டூலை முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
இந்த காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ குறித்தே பேச்சாக இருக்கிறது. ஏஐ நமக்கு மிகப் பெரியளவில் உதவினாலும் அதில் பல பிரச்சினைகள் இருப்பதாகவும் பலரும் எச்சரிக்கிறார்கள். குறிப்பாக ஏஐ டூல்கள் வரலாறு காணாத வேலையிழப்புகள் ஏற்படுத்தலாம் எனப் பலரும் எச்சரிக்கிறார்கள். ஏற்கனவே இது ஆரம்பித்துவிட்டதாகவும் கூட பலரும் குறிப்பிடுகிறார்கள்.

வேலை போச்சு
அப்படியொரு மோசமான சம்பவம் தான் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. அங்கு ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய வங்கியான காமன்வெல்த் வங்கியில் 25 ஆண்டுகள் பணிபுரிந்த கேத்தரின் சல்லிவன் என்பவர் வேலை இழந்துள்ளார். தன்னை அறியாமலேயே ஏஐ அமைப்புக்குப் பயிற்சி அளித்தாகவும் அதன் பிறகுத் தனது வேலையையே அந்த ஏஐ அமைப்பு பறித்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம், சல்லிவன் உட்பட 44 ஊழியர்கள் காமன்வெல்த் வங்கியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஏஐ டூல்களை அந்த வங்கி பயன்படுத்த ஆரம்பித்ததால் இந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வங்கியில் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு காரணமாக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது இதுவே முதல் முறை.
ஏஐ-க்கு பயிற்சி கொடுத்த பெண்
இதற்கிடையே சமீபத்தில் ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவில் நடந்த ஏஐ கருத்தரங்கில் பேசிய சல்லிவன் தனக்கு என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார். அதாவது அவர் கடந்த சில மாதங்களாகவே பம்பிள்பீ என்ற வங்கியின் ஏஐ சாட்பாட்டிற்கான ஸ்கிரிப்டுகளை உருவாக்கி வந்திருக்கிறார். ஒவ்வொரு கேள்விக்கும் அது என்ன மாதிரியான பதில்களைக் கொடுக்கிறது என்பதையும் சேகரித்து, அதை டிரைன் செய்து வந்துள்ளார்.. ஆனால், அந்த ஏஐ டூலே கடைசியில் தனது வேலையைப் பறித்துவிட்டதாக அவர் குறிப்பிடுகிறார்.
உலகில் இத்தனை ஆண்டுகள் இருந்த பல்வேறு வேலைகள் ஏஐ ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் எப்படி மாறுகிறது என்பது குறித்து பலரும் பேசி வரும் நிலையில், அதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
என்ன நடந்தது
இது தொடர்பாக அந்த பெண் மேலும் கூறுகையில், "மெசேஜிங் பணிகள் நிச்சயம் சீக்கிரமே வெளிநாடுகளுக்கு அவுட்சோர்ஸிங் செய்யப்படும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். ஆனால் 25 ஆண்டுகள் இந்த நிறுவனத்தில் பணியாற்றிய பிறகும், நான் பணி நீக்கம் செய்யப்படுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. என்னை அறியாமலேயே, எனது வேலையைப் பறித்த சாட்பாட்டிற்கு நான் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தேன்" என்கிறார்.
63 வயதான சல்லிவன் வங்கி வேலையை இழந்துவிட்டார். சாட்பாட்டிற்குப் பயிற்சி அளிக்கும் பணி முடிந்ததும், வேறு பணி ஒதுக்குவார்கள் என அவர் எதிர்பார்த்து காத்திருந்துள்ளார். ஆனால் அதற்குப் பதிலாக, அந்த வங்கி அவரை வேலையை விட்டு நீக்கி அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. முதலில் தன்னை டிஸ்மிஸ் செய்துவிட்டதாக வந்த மெசேஜ்ஜை பார்த்து அதிர்ந்து போய்விட்டதாக அவர் சொல்கிறார்.
கட்டுப்பாடுகள் தேவை
அவர் மேலும் கூறுகையில், "முதலில் அந்த மெசேஜ்ஜை பார்க்கும் போது அதிர்ச்சியாகவே இருந்தது. நான் அதற்காக ஏஐ டூல்களை முழுமையாக எதிர்க்கவில்லை. ஏஐ நமக்கு உதவலாம். ஆனால், காப்பிரைட் மீறல்களைத் தடுக்க வலிமையான விதிமுறைகள் தேவை.. மேலும், முழுமையாக மனிதர்களை நீக்கிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக ஏஐ பயன்படுத்துவதைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications