புதின் வரும் நேரத்தில்.. பிரதமர் மோடியை அவமானப்படுத்திய காங்... டீ விற்கும் ஏஐ வீடியோவால் சர்ச்சை
டெல்லி: சர்வதேச நிகழ்வில் தலைவர்களுக்கு வழங்கப்படும் சிவப்பு கம்பள வரவேற்பில் பிரதமர் நரேந்திர மோடி கையில் கெட்டில் மற்றும் கிளாஸ் வைத்து கொண்டு டீ விற்பனை செய்வது போன்ற ஏஐ வீடியோவை காங்கிரஸ் தலைவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இன்னும் வீடியோ நீக்கப்படவில்லை.
தற்போது ஏஐ தொழில்நுட்பம் மிகவும் பிரபலமாகி உள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாம் விரும்புவது போல் போட்டோ, வீடியோவை உருவாக்க முடியும். இந்த ஏஐ தொழில்நுட்பத்தை சிலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிலர் தவறான போட்டோ, வீடியோக்களை உருவாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் தான் பிரதமர் மோடியை அவமானப்படுத்தும் வகையில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் ஏஐ வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த தலைவரின் பெயர் ராகிணி நாயக். இவர் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக உள்ளார்.
இந்நிலையில் தான் ராகிணி நாயக் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி சிவப்பு கம்பளத்தில் நடந்து வருகிறார். அவர் நீலநிற கோட் மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்துள்ளார். ஒரு கையில் கெட்டில் மற்றும் இன்னொரு கையில் கப் வைத்து டீ விற்பனை செய்யும் டீ வேண்டுமா? என பிரதமர் மோடி விற்பனை செய்யும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது. மேலும் இது சர்வதேச தலைவர்களின் மீட்டிங் என்பதை குறிக்கும் வகையில் இந்தியா உள்பட பல நாடுகளின் கொடிகள் அங்கு இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த பதிவில், ‛‛இப்போது யார் இதனை செய்வார்?'' என கேள்வியும் எழுப்பியுள்ளார்.
अब ई कौन किया बे 🥴🤣 pic.twitter.com/mbVsykXEgm
— Dr. Ragini Nayak (@NayakRagini) December 2, 2025
பிரதமர் மோடி தனது சிறு வயதில் குஜராத் மாநில ரயில் நிலையத்தில் டீ விற்பனை செய்தார். இதனை பலமுறை பிரதமர் மோடி தனது பேச்சின்போது குறிப்பிட்டு வருகிறார். இதனை அவ்வப்போது காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்வது உண்டு. அந்த வகையில் ஏஐ வீடியோவை பதிவிட்டு பிரதமர் மோடியை கிண்டல் செய்துள்ளார் ராகிணி நாயக்.
மேலும்நம் நாட்டுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வருகை தர உள்ளார். நாளை மாலையில் இந்தியா வரும் விளாடிமிர் புதின் நாளை மறுநாள் வரை இங்கு இருப்பார். இந்த சமயத்தில் எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு உபகரணம் உள்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதற்கிடையே தான் காங்கிரஸின் ராகிணி நாயக் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பாஜகவை சேர்ந்த செய்தி தொடர்பாளர் செஷாத் பூனவாலா கூறுகையில் ‛‛முதலில் ரேணுகா சவுத்ரி (காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி நேற்று முன்தினம் நாடாளுமன்றத்துக்கு நாயை அழைத்து சென்றதால் சர்ச்சையில் சிக்கினார்) நாடாளுமன்றம் மற்றும் ராணுவத்தை அவமானப்படுத்தினார். இப்போது ராகிணி நாயக் பிரதர் மோடியை அவமானப்படுத்தி உள்ளது. ‛எலைட்' காங்கிரஸ் எப்போதும் ஓபிசி சமுதாயத்தில் இருந்து கடினமாக உழைத்து பிரதமரானவரின் பின்னணியை ஏற்றுக்கொள்வது இல்லை. டீ விற்பனை செய்வோர் என்று 150க்கும் அதிக முறை கிண்டல் செய்துவிட்டனர். பீகாரில் பிரதமரின் தாயை குறிவைத்தனர். இப்படியானவர்களை பொதுமக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்'' என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications