ஆபாசத்தை கக்கும் க்ரோக் AI.. பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் எலான் மஸ்க் கம்பெனி! வெடித்த சர்ச்சை!
சியாட்டில்: கடந்த சில நாட்களாகவே ஏஐ மூலம் பெண்களை ஆபாசமாகச் சித்தரிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. பெண்களின் போட்டோக்களை இணையத்தில் பகிர்ந்து நிர்வாண அல்லது குறைவான உடைகளில் மாற்றத் தரும்படி கேட்கிறார்கள். இது மிகப் பெரியளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்துள்ளன.
AI என்பது மிகவும் வலிமையான ஒரு டூல் என்பது அனைவருக்கும் தெரியும். ஏஐ மூலம் எந்தளவுக்கு நமக்கு நன்மைகள் நடக்குமோ.. அதே அளவுக்குத் தீய விஷயங்கள் நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே அப்படி சில மோசமான நிகழ்வுகள் சமூக வலைத்தளங்களில் நடந்து வருகிறது.

பெரிய சர்ச்சை
இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மோசேரி சமீபத்தில் தான் டீப்ஃபேக் அச்சுறுத்தல்கள் மற்றும் ஒழுங்குமுறை குறித்து எச்சரித்திருந்தார். அந்த எச்சரிக்கை வந்து சில நாட்கள் கூட ஆகாத நிலையில், எப்போது எலான் மஸ்கின் க்ரோக் செயலி சர்ச்சையில் சிக்கியுள்ளது. அரைகுறை ஆடைகளுடன் இருக்கும் பெண்களின் படங்களோ க்ரோக் ஏஐ ட்விட்டரில் உருவாக்கித் தருகிறது.
ஆபசத்தின உச்சம்
நெட்டிசன்கள் சிலர் பெண் பிரபலங்கள் அல்லது முன் பின் அறியாத பெண்களின் போட்டோக்களை கூட இணையத்தில் இருந்து எடுத்து, க்ரோக் AIக்கு அனுப்புகிறார்கள். அதை நிர்வாண அல்லது குறைவான உடைகளில் மாற்றத் தரும்படி கேட்கிறார்கள். மனிதக் கண்காணிப்பு இல்லாததால், அவர்கள் கேட்கும் அனைத்தையும் க்ரோக் ஏஐ உருவாக்கித் தருகிறது. சம்பந்தப்பட்டப் பெண்களை முறையீட்டாலும் கூட இதைத் தடுக்க முடியவில்லை. இது பிரைவசி தொடர்பான கேள்விகளையும் எழுப்புகிறது. கடந்த சில காலமாகவே இதுவே இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கண்டுகொள்ளாத எலான் மஸ்க்
அதேநேரம் இதை ஒரு முக்கியமான பிரச்சினையாக க்ரோக் ஏஐ ஓனர் எலான் மஸ்க் கருதவில்லை. இதைச் சாதாரண ஒரு விஷயமாகவே கருதுகிறார். அதுவே பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல பெண்களை அவமதிக்கும் போட்டோக்களை உருவாக்க எலான் மஸ்க் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது போலத் தெரியவில்லை. மாறாக நெட்டிசன் ஒருவர் எலான் மஸ்க் பிகினி அணிந்திருப்பது போல போட்டோவை உருவாக்கிய நிலையில், அதை ஆமோதிக்கும் வகையில் கமண்ட் செய்கிறார். இவை எல்லாம் சேர்ந்தே பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தம் வந்த பிறகே ட்விட்டர் ஊழியர்கள் இதில் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தனர். சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளனர். இருப்பினும், அந்தக் கட்டுப்பாடுகள் கூட போதியளவில் இல்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளனர். சக்திவாய்ந்த ஏஐ டூல்களை மிகவும் அலட்சியமாகப் பொறுப்பே இல்லாமல் எலான் மஸ்க் கையாள்வதாகச் சாடியுள்ளனர்.
மத்திய அரசு தலையிடணும்
தாக்ரே சிவசேனா தலைவரான ராஜ்யசபா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி க்ரோக் செயலியைக் கடுமையாகச் சாடியுள்ளார். இதை உருவாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள அவர், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இது குறித்து பிரியங்கா சதுர்வேதி மேலும், "சமூக வலைத்தளங்களில் பெண்களின் படங்களைப் பாலியல் ரீதியாகச் சித்தரிக்கவும், ஆடையை நீக்கவும் தூண்டும் ஏஐ செயலிகளின் அதிகரித்து வருகிறது. இதில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் உடனடியாகத் தலையிட வேண்டும். க்ரோக் போன்ற செயலிகளில் பெண்களின் கண்ணியத்தை மீறாத வகையில் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும். சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் இதற்கான பொறுப்பை ஏற்று கொள்ள வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications