AIஐ நம்பவே வேண்டாம்.. அடிக்கடி பொய் தகவல்களை தருது! எச்சரிப்பது சாட்ஜிபிடி ஓனர் சாம் ஆல்ட்மேன்
சியாட்டில்: இந்தக் காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ தான் அதிவேகமாக வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது. மக்கள் பலரும் இப்போது ஏஐ கொடுக்கும் தகவல்களையே நம்பி வருகிறார்கள். ஆனால், செயற்கை நுண்ணறிவு கருவிகளை ஓவராக நம்ப வேண்டாம் என்று ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைவர் சாம் ஆல்ட்மேன் எச்சரித்துள்ளார்.
ஏஐ தான் இந்தக் காலத்தில் வேற லெவல் வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது. கிட்டதட்ட எல்லாத் துறைகளிலும் ஏஐ வேகமாக வளர்ந்து வருகிறது. ஏஐ பொதுமக்களின் வாழ்க்கையை மொத்தமாக மாற்றியுள்ளது. இது மக்களுக்கு மிகப் பெரியளவில் உதவுகிறது. வேலைகளைக் கணிசமாகக் குறைத்துவிடுகிறது. அதேநேரம் ஏஐ மூலம் பொய்யான மற்றும் போலியான தகவல்கள் பரவும் ஆபத்தும் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

ஏஐ கருவிகளை நம்ப வேண்டாம்
இதற்கிடையே ஏஐ துறையில் லீடராக இருக்கும் சாட்ஜிபிடி நிறுவனத்தின் தலைவரே ஏஐ கருவிகளை ஓவராக நம்ப வேண்டாம் என கூறியிருக்கிறார். சாட்ஜிபிடி உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு கருவியை அளவுக்கு அதிகமாக நம்ப வேண்டாம் என்று சாம் ஆல்ட்மேன் எச்சரித்துள்ளார். ஏஐ தொழில்நுட்பம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டாலும், அவை தவறான தகவல்களை வழங்க வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஓபன்ஏஐ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ போட்காஸ்டில் பேசிய ஆல்ட்மேன், சாட்ஜிபிடியின் திறன்கள் வியக்கத்தக்க வகையில் இருந்தாலும், அது அடிக்கடி தவறான தகவல்களைத் தருவது உண்மை தான் என ஒப்புக்கொண்டார். இதனால் மக்கள் இந்த ஏஐ கருவிகளை அதிகம் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
பொய் தகவல்கள்
அவர் மேலும் கூறுகையில், "மக்கள் சாட்ஜிபிடி மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால், செயற்கை நுண்ணறிவு சில சமயங்களில் தவறான தகவல்களைத் தரக்கூடும். எனவே, இந்தத் தொழில்நுட்பத்தை அவ்வளவாக நம்ப வேண்டாம். லார்ஜ் லேங்குவேஜ் மாடல் (Large Language Models - LLMs) தவறான தகவல்களை உருவாக்கும் இயல்புடையவை. இதுவே அவற்றின் அடிப்படை குறைபாடு. பயனர்கள் சாட்ஜிபிடியை ஒரு புதிய தொழில்நுட்பமாக அணுகும்போது, அதீத நம்பிக்கை வைத்திருக்கக்கூடாது.
சமூக வலைத்தளங்கள் அல்லது கூகுளில் ஒரு விஷயத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் அந்தத் தளங்கள் பெரும்பாலும் வருமானம் ஈட்டுவதற்காகவே வடிவமைக்கப்பட்டிருக்கும். மேலும், உங்களுக்குக் காண்பிக்கப்படும் கண்டெண்டுகள் கூட நிஜமாகவே நீங்கள் தேடியதா இல்லை விளம்பரமா என்பதில் உங்களுக்குக் குழப்பம் வரும். ஆனால், ஏஐ டூல்களில் அது இல்லை.
ஏஐ டூல்களில் விளம்பரம்
வரும் காலத்தில் ஏஐ டூல்களை யூஸ் செய்யக் கட்டணம் வசூலிப்பது அல்லது ஏஐ டூல்களில் விளம்பரங்களை அறிமுகப்படுத்தப்படலாம். அது குறித்து ஆலோசித்தே வருகிறோம். அதேநேரம் விளம்பரங்கள் வந்தாலும் ஏஐ வழங்கும் பதில்களின் நம்பகத்தன்மையைப் பாதிக்காத வகையிலேயே அவை இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
கவனம் தேவை
ஏஐ மனிதக் குலத்தை நிச்சயம் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேநேரம் ஏஐ வந்துவிட்டால் போலிச் செய்திகள் மிக ஈஸியாக பரவும் என்பதை வல்லுநர்கள் தொடக்கம் முதலே எச்சரித்து வந்தனர். இந்தச் சூழலில் தான் ஏஐ பிரிவில் முன்னணியில் இருக்கும் சாட்ஜிபிடி நிறுவனரே அந்தச் சிக்கல் இருப்பது உண்மை தான் என்பதை ஒப்புக்கொண்டார்.
அதேநேரம் வரும் காலங்களில் உண்மை சரிபார்ப்பிற்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் எனத் தெரிகிறது. போலிச் செய்திகள் அல்லது பொய்யான தகவல்கள் புதிய புதிய அப்டேட்களில் குறையவே செய்யும் என்கிறார்கள் துறை சார்ந்த வல்லுநர்கள்!












Click it and Unblock the Notifications