விருச்சிக ராசியினரே கோபத்தை கட்டுப்படுத்துங்க.. கொட்டும் அதிர்ஷ்டம்.. பணமழையில் நீச்சலடிக்கும் யோகம்
ஆடி மாத பலன் 2025: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கவுள்ளது. சந்திரன் வீட்டுக்கு சூரியன் வரும் இந்த அற்புதமான ஆடி மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றங்களால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் ஏற்படும். ஆனி மாதம் முடிந்து தற்போது ஆடி மாதம் பிறக்கப் போகிறது.

ஆடி மாதம் என்பது அம்மனுக்குரிய மாதமாகும். ஆடித் திருவிழா, குலதெய்வ வழிபாடு, நல்ல காரியங்கள், உணவு தானமாகக் கொடுப்பது, அனைத்து கோயில்களின் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். சூரியனின் நகர்வை வைத்தே ஒவ்வொரு மாதமும் கணிக்கப்படுகிறது. சந்திரன் வீட்டுக்கு சூரியன் வரும் மாதமே ஆடி மாதம். ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பானதாகும்.
மிதுன மனையில் குரு பகவான் இருக்கிறார். கன்னி மனையில் செவ்வாய் பகவான் ஆடி 12 ஆம் தேதி பெயர்ச்சி ஆகிறார். சுக்கிர பகவான் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்கு பெயர்ச்சியாகிறார். சூரிய பகவான் கடக மனையில் இந்த மாதம் முழுதும் அமர்ந்து கொண்டு பலனை கொடுக்கப் போகிறார். கேது பகவான் சிம்மத்திலும், ராகு கும்பத்திலும் உள்ளது. சனி பகவான் வக்கிரமடைந்து மீன மனையில் இருக்கப் போகிறது.
அந்த வகையில், இந்த ஆடி மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், மேன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராசிநாதன் தொழில் ஸ்தானத்தில் கேதுவுடன் இணைந்து இருப்பதால் இந்த மாதத்தில் உங்கள் சிந்தனைகள், செயல்கள், கெளரவம், புகழ் பற்றிய எண்ணங்களாக இருக்கும். செவ்வாய் கடந்த சில மாதங்களாக நீச்சமாக இருந்ததால் மந்தமான காலகட்டமாக இருந்திருக்கும். இனி துணிச்சலோடு, தைரியமாக, அதிகாரத்தோடு வேலைகளை எடுத்துச் செய்வீர்கள்.
தொட்டது துலங்கும்
சுக்கிரன் எனும் சுபக்கிரகம் உங்கள் ராசியைப் பார்ப்பதால் சிந்தனைகள் அருமையாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எதை வேண்டுமானாலும் எடுத்துச் செய்யலாம் என்பது போன்ற தைரியம் ஏற்படும். 2 ஆம் அதிபதியான குரு பகவான் 8 ஆம் இடத்தில் அமர்ந்து 2 ஆம் இடத்தைப் பார்ப்பதால் தன வரவு உண்டாகும். மறைந்துள்ள பணங்கள் உங்களுக்கு கிடைக்கப் பெறும் காலகட்டமாக இருக்கும். காப்பீட்டில் இருந்து பணம் வரும். நீண்ட நாட்களாக கொடுத்து வைத்திருந்த பணம் கிடைக்கக்கூடிய யோகம் உண்டாகும்.
வீடு வாங்கும் யோகம்
திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து சேரும். லாட்டரி மூலமாக உங்களுக்குப் பணம் வரும். 4 ஆம் வீட்டில் ராகு இருப்பதால் பிரம்மாண்டமான சிந்தனை ஓட்டங்கள் உண்டாகும். ஆடம்பரமாக, பெரிதாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். பெரிய வீடுகள் கட்டும் எண்ணம், வாங்கும் எண்ணம் வரும். வீடு பற்றிய சிந்தனை இல்லாதவர்கள்கூட இனி வீட்டைப் பற்றி சிந்திப்பீர்கள். மாற்றங்கள் அனைத்தும் உண்டாகும் காலகட்டமாக இருக்கும்.
முயற்சிகளில் வெற்றி
வேலை விஷயமாக வெளியில் செல்ல வேண்டிய வாய்ப்பு ஏற்படும். முயற்சிகள் அனைத்துமே வெற்றியடையும். இதுவரை முயற்சியில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். கிடப்பில் போட்டிருந்த விஷயங்கள் அனைத்தும் செய்து மகிழ்வீர்கள். அரசாங்கம், வீடு சார்ந்த வேலைகளை எல்லாம் செய்து முடிப்பீர்கள். பெண்கள் குடும்பம் சார்ந்த விஷயங்களில் சந்தித்து வந்த பாதிப்புகள் நீங்கும். நிர்வாகம், வேலை சார்ந்த விஷயங்களில் முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும்.
குழந்தைகள்
பிள்ளைகளால் வருத்தத்தை சந்தித்து வந்த பெற்றோர் அதில் இருந்து மீளுவீர்கள். பிள்ளைகள் தொடர்பான பிரச்சனைகள் நிவர்த்தியாகும். குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்து பிரச்சனை, பாதிப்பு பிரச்சனை அனைத்தையும் தீர்க்கும் காலம் கட்டமாக இருக்கும். 6 ஆம் அதிபதி 10 இல் உள்ளதால் வேலைவாய்ப்பு உண்டாகும். வேலை இல்லை என்று வருத்தப்பட்டவர்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் வந்து சேரும்.
அடுத்தடுத்து யோகம்
10 ஆம் இடத்தில் செவ்வாய் வலுவாக உள்ளதால் ஆடி மாதம் முழுவதும் உங்களுக்கு நல்லதை கொடுக்கும் காலகட்டமாக இருக்கும். ஆடி மாதம் 12 ஆம் தேதிக்குப் பிறகு 11 ஆம் இடமான லாப ஸ்தானத்துக்கு செல்வதால் வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, வேறு இடங்களுக்கு மாற்றலாகிச் செல்வது போன்ற அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும். ஆடி மாதம் 10 ஆம் தேதிக்குப் பிறகு சுக்கிரன், குரு 8 இல் அமர்வதால் பொருளாதாரத்தில் எந்த குறையும் இருக்காது. ஆனால், கணவன், மனைவிக்கு இடையே அந்நியோன்ய குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
அந்நியோன்யம்
குருவும், சுக்கிரனும் எதிர்த் தன்மை உள்ளவர்கள் என்பதால் அந்நியோன்யமாக இருப்பது நல்லது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் அழுத்தம், பளு இருந்தாலும் பெரிய பாதிப்புகள் வராது. 9 ஆம் இடத்தில் பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன் இணைந்துள்ளதாலும், 10 ஆம் இடத்தில் செவ்வாயும் உள்ளதால் தொழில் அருமையாக இருக்கும். கோபம், ஆக்ரோஷத்தைக் குறைப்பது நல்லது. தொழிலில், வேலையில் கோபம் ஏற்படும் என்பதால் நிதானமாகச் செயல்படுவது நல்லது.












Click it and Unblock the Notifications