தனுசு ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் செவ்வாய், சூரியன்.. திடீர் அதிர்ஷ்டத்தால் பண மழை கொட்டும்
பங்குனி மாத ராசி பலன்: மாசி மாதம் முடிவடைந்து பங்குனி மாதம் தொடங்குகிறது. இந்த பங்குனி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பங்குனி மாதம் பிறந்தாச்சு. மாதங்களில் அற்புதமான மாதமாக பங்குனி மாதம் குறிப்பிடப்படுகிறது. அதாவது, சூரிய பகவான் தனது குருநாதர், பிரகஸ்பதியாகிய, குருவாகிய மீனத்தில் வந்து அமர்ந்து இதுவரை தான் கற்ற பாடங்களை எல்லாம் தனது குருநாதரிடம் சொல்லி மதிப்பெண்கள் பெற்று தேர்விலே தேர்ச்சி அடையக்கூடிய மாதம் இந்த மாதம் பங்குனி மாதம்.

அதனால் தான், பரவலாக தேர்வு நடைபெறும் மாதமாக இயற்கையாகவே இந்த மாதம் இருக்கிறது. இதுவரை சம்பாதித்த சம்பாத்தியம், அதற்கான வருமான வரிகள், செலவுகள், சேமிப்பு என்ன என்று கணக்குப் பார்க்கும் மாதமாக இந்தப் பங்குனி மாதம் அமைந்திருக்கிறது. 12 ஆவது மாதமாகிய பங்குனி மாதத்தில் கடைசி நட்சத்திரமாக வரக்கூடிய பங்குனி உத்திரப் பெருவிழா இந்த சிறப்பு மாதத்தில் தான் கொண்டாடப்படும்.
விஷேசமான மாதமாகிய இந்த பங்குனி மாதத்தில்தான் ராமநவமி கொண்டாடப்படும். வழிபாட்டு மாதம், வைபவ மாதம், கல்யாண மாதம், தெய்வ திருமணங்கள் கூடிவரும் மாதம், தெய்வ மாதம் என்று அழைக்கப்படுகிறது பங்குனி மாதம். ராமர் சீதா தேவியை மணந்த மாதம், இலைகள் உதிர்ந்து பச்சை இலைகள் துளிர்க்கும் மாதம், ஸ்ரீ தேவேந்திரன் இந்திராணியை மணந்து கொண்ட மாதம், சந்திரன் 27 நட்சத்திரங்களை மணந்து கொண்ட மாதம், திருமாலின் திருமார்பில் ஸ்ரீ மகாலட்சுமி இடம்பிடித்த அற்புதமான மாதமாக இந்த பங்குனி மாதம் திகழ்கிறது.
இந்த பங்குனி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தனுசு ராசிக்காரர்களுக்கு உங்களுடைய யோகாதிபதிகளாக இருக்கக்கூடிய சூரியனும், செவ்வாயும் அமர்ந்திருப்பதால் உங்களுக்கு இந்த பங்குனி மாதம் திடீர் அதிர்ஷ்டங்களை அள்ளித் தரக்கூடிய மாதமாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகளை எல்லாம் நிறைவேற்றும் காலகட்டமாக இருக்கும். தைரியமான முடிவுகள் எடுப்பீர்கள். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும்.
கணவன், மனைவிக்குள் அன்பு, நெருக்கம் அதிகரிக்கும். நீண்டநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். ராசி நாதன் குரு பகவான் பலமாக உட்கார்ந்திருப்பதால் சொந்த ஊரில் இடம் வாங்குவது, வீடு கட்டுவதற்கான வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்வதற்கான விசா கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
உங்களுடைய மகள்களுக்கு திருமண வரன் அமையும். எல்லா வகையிலும் வெற்றியும், சந்தோஷமும் உண்டாகும். வியாபாரத்தில் திடீர் முன்னேற்றம், திடீர் லாபம் உண்டாகும். நல்லவர்கள் பங்குதாரர்களாக சேருவார்கள். புரிந்துகொண்டவர்கள் வேலை ஆட்களாக வந்து சேர்வார்கள். உத்தியோகத்தில் வர வேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வு இப்போது வந்து சேரும்.
உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். விலையுயர்ந்த தங்க நகைகளை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளால் உங்களுக்கு வெற்றி, மகிழ்ச்சி உண்டாகும். ஆரோக்கியம், அழகு இந்த மாதம் முழுக்க உங்களுக்கு அதிகமாகிக் கொண்டே போகும். இந்த பங்குனி மாதம் சிறப்பாக அமைய ஸ்ரீ ரங்கநாத சுவாமியை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். மனநலம் குன்றியவர்களுக்கு உதவுவது நல்லது. கடலைப் பருப்பு தானமாக வழங்குவது நல்ல பலன்களைத் தரும்.












Click it and Unblock the Notifications