சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது - பக்தர்கள் தரிசனம்
சபரிமலை ஐயப்பனுக்கு மண்டல பூஜை காலத்தில் அணிவிக்கப்படும் தங்க அங்கி இன்று ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டது.
சபரிமலை: சபரிமலை ஐயப்பனுக்கு மண்டல பூஜை காலத்தில் அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் இன்று காலை 6 மணிக்கு ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக வழக்கமாக தங்க அங்கிக்கு பக்தர்கள் கொடுக்கப்படும் வரவேற்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் நடைபெறும் மண்டல பூஜைக்காக கடந்த 15 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்தார்.
கடந்த 16ம் தேதி கார்த்திகை மாதத்தையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 26 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. தினசரியும் 2000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மண்டல பூஜை தினத்தில் 6000 பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

ஐயப்பன் கோவில் மண்டல பூஜை
மண்டல பூஜை தினத்தில் ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். 453 பவுன் எடை கொண்ட அந்த தங்க அங்கி பத்தனம் திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜைக்கு மட்டும் அந்த நகைகள் அங்கிருந்து ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்துவரப்படும்.

ஊர்வலம் புறப்பட்டது
பந்தளம் சித்திரை திருநாள் மகாராஜா காணிக்கையாக வழங்கிய தங்க அங்கி பந்தனம்திட்டா ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து இன்று காலை ஊர்வலமாகப் புறப்பட்டது. இன்று மாலையில் ஓமல்லூர் ரத்தகண்ட சுவாமி கோவிலை வந்தடைகிறது. பின்பு அங்கு தங்கிவிட்டு 23ஆம் தேதி காலை 8 மணிக்கு புறப்படுகிறது.

சன்னிதானத்தில் தரிசனம்
25ஆம்தேதி தங்க அங்கி ஊர்வலம் பம்பா கணபதி கோவிலை வந்தடையும். அங்கு பக்தர்கள் தரிசனத்திற்காக தங்க அங்கி வைக்கப்படும். பின்னர் பிற்பகல் 3 மணிக்கு அங்கிருந்து சன்னிதானத்திற்கு புறப்படும். மாலை 5 மணிக்கு சரங்குத்திக்கு வந்தடையும் தங்க அங்கிக்கு மேள தாளங்கள் முழங்க வரவேற்பு கொடுக்கப்படும்.

தங்க அங்கியில் ஜொலிக்கும் ஐயப்பன்
சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெறும். தங்க அங்கி அணிந்து ஜொலிக்கும் ஐயப்பனை தரிசனம் செய்ய காண கண் கோடி வேண்டும். 26ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. தங்க அங்கி ஊர்வலத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தங்கி அங்கி கொண்டு செல்லப்படும் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications