சென்னைவாசிகளுக்கு குஷி.. முக்கிய இடத்தில் 10.3 கிமீ பிரம்மாண்ட மேம்பாலம்.. மிரளவைக்கும் திட்டம்!
சென்னை: சென்னை மற்றும் வடசென்னை பகுதி மக்களின் மிக நீண்ட கால கோரிக்கையாக இருந்த மாதவரம் - நல்லூர் டோல்கேட் இடையேயான போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு நிரந்தர தீர்வு காணப்பட்டுள்ளது.
சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், மாதவரம் சந்திப்பில் இருந்து நல்லூர் சுங்கச்சாவடி வரை சுமார் 10.3 கிலோமீட்டர் நீளத்திற்கு பிரம்மாண்டமான "மத்திய தரைவழி" அடுக்கு மேம்பாலம் (Elevated Corridor) அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணைக்குழு (NHAI) தற்போது அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்திற்கும் (MORTH), தமிழ்நாடு மாநில அரசுக்கும் இடையே அண்மையில் நடைபெற்ற உயர்நிலை பேச்சுவார்த்தையின் பலனாக இந்த முக்கிய முடிவு எட்டப்பட்டுள்ளது.
முடங்கிப்போன திட்டம் மீண்டும் உயிர் பெற்றது எப்படி?
இந்த மேம்பாலத் திட்டம் முதன்முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டிலேயே முன்மொழியப்பட்டது. இருப்பினும், தற்போதுள்ள நான்கு வழிச்சாலையை ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்துவது, மழைநீர் வடிகால் அமைப்பது, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது போன்ற பணிகளில் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே போதிய ஒத்துழைப்பு இல்லாததால் இந்த திட்டம் கடந்த சில ஆண்டுகளாக முற்றிலும் முடங்கிக் கிடந்தது.
ஒரு கட்டத்தில், இந்த 10.3 கி.மீ சாலையை தமிழக மாநில நெடுஞ்சாலைத்துறையிடமே ஒப்படைத்துவிடலாம் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைக்குழு (NHAI) முடிவு செய்தது. ஆனால், பிப்ரவரி 13 அன்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளருக்கும், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும் இடையே நடைபெற்ற மிக முக்கியமான கூட்டத்தில் நிலைமை தலைகீழாக மாறியது.
இந்த பேச்சுவார்த்தையின் போது, திட்டத்திற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்துதல், ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றுவது மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில் மாநில அரசு தனது முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று தமிழக அரசு தரப்பில் பலத்த உறுதி அளிக்கப்பட்டது. மாநில அரசின் இந்த சாதகமான முடிவைத் தொடர்ந்து, NHAI இந்த மேம்பாலத் திட்டத்தை மீண்டும் கையில் எடுத்து செயல்படுத்த சம்மதித்துள்ளது.
விதிக்கப்பட்ட நிபந்தனைகள்:
இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு NHAI ஒரு முக்கிய நிபந்தனையை விதித்துள்ளது. இந்த பிரம்மாண்ட மேம்பால கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான மாநில அரசின் ஜிஎஸ்டி (GST) வரியை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில், இதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) மற்றும் நிதி ஒதுக்கீடு முறைகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன. தேவையான அனுமதிகள் மற்றும் ஒப்புதல்கள் கிடைத்தவுடன் இதற்கான பணிகள் மிக விரைவில் தரைமட்ட அளவில் தொடங்கும் என NHAI உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நரக வேதனையாக மாறிய 10 கி.மீ பயணம்!
தற்போதைய திட்ட அறிக்கையின்படி, இந்த 10.3 கிலோமீட்டர் நீளமுள்ள ஆறு வழி அடுக்கு மேம்பாலம் மாதவரம்-சென்னை பைபாஸ் சந்திப்பில் தொடங்கி, நல்லூர் அருகே உள்ள வெளிவட்ட சாலையில் (Outer Ring Road) முடிவடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த குறிப்பிட்ட மாதவரம் - நல்லூர் பகுதியில் தினமும் சுமார் 95,000 வாகனங்கள் (Passenger Car Units) கடந்து செல்கின்றன. இந்திய சாலைகள் காங்கிரஸின் (IRC) விதிமுறைகளின்படி, இந்த பகுதி உண்மையில் ஒரு 10 வழிச்சாலையாக இருக்க வேண்டும். ஆனால், தற்போது அங்கு 4 வழிச்சாலை மட்டுமே உள்ளதால், வாகன ஓட்டிகள் வெறும் 10 கி.மீ தூரத்தை கடக்க 75 முதல் 90 நிமிடங்கள் வரை மிக கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.
இந்தப் பாதையில் சுமார் 11 முக்கிய மற்றும் சிறிய சந்திப்புகள் உள்ளன. ஒவ்வொரு 500 மீட்டருக்கும் இருபுறமிருந்தும் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் நெடுஞ்சாலைக்குள் நுழைவதால், பீக் ஹவர்ஸ்களில் ஒட்டுமொத்த போக்குவரத்தும் முடங்கி விடுகிறது. நல்லூரில் இருந்து தமிழக-ஆந்திர எல்லை வரையிலான 33 கி.மீ சாலை ஏற்கனவே ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில், இந்த 10 கி.மீ பகுதி மட்டுமே பெரும் முட்டுக்கட்டையாக இருந்து வந்தது.












Click it and Unblock the Notifications