மதங்களை கடந்த மனிதநேயம்.. கைவிடப்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டருக்காக இஸ்லாமிய பெண் செய்த செயல்.. நெகிழ்ச்சி
திருவனந்தபுரம்: கேரளாவில் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஆர்எஸ்எஸ் பிரமுகருக்கு யாரும் உதவாத நிலையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த நிர்வாகி இர்பானா ஃபர்ஹானா அவரை மீட்டு உதவி செய்தார். மருத்துவமனையில் மாஜி ஆர்எஸ்எஸ் பிரமுகர் சிகிச்சை பலனின்றி இறந்தார். குடும்பத்தினர் யாரும் அவரது உடலை வாங்க மறுத்த நிலையில் மதங்களை கடந்து மனிதாபிமான அடிப்படையில் இர்பானா ஃபர்ஹானா மகளாக இருந்து இறுதி சடங்கு நிறைவேற்றி தகனம் செய்த சம்பவம் நடந்துள்ளது.
நம் நாட்டில் அவ்வப்போது மதரீதியான பிரச்சனைகள் நடந்து வருகின்றன. ஆனால் பிரச்சனைகளை கடந்தும் ஆங்காங்கே மதங்களை கடந்த மனிதாபிமான செயல்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. அந்த வகையில் தற்போது கேரளாவில் நடந்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:

கேரளாவின் காசர்கோடு பகுதியை சேர்ந்தவர் இர்பானா ஃபர்ஹானா. இவர் இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றி ஹிஜாப் அணியும் வழக்கம் கொண்டவர். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மகளிர் அணி பிரிவில் நிர்வாகியாக உள்ளார். இவர் உப்பளாவில் 'ஷேக் சையத்' என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்கள் உள்ளனர்.
இந்நிலையில் தான் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு இர்பானா ஃபர்ஹானாவிற்கு ஒரு போன் வந்தது. சிகுருபாடே வார்டு உறுப்பினர் ஷெரீப் சினல் பேசினார். அப்போது அவர் கடையின் திண்ணையில் முதியவர் ஒருவர் ஆபத்தான நிலையில் கிடக்கிறார். ஆதரவற்ற நிலையில் இருக்கிறார் என்று கூறினார். இதையடுத்து இர்பானா ஃபர்ஹானா அங்கு சென்று அந்த முதியவரை மீட்டார்.
விசாரணையில் அவர் மஜேஷ்வர் தாலுகாவில் உள்ள மீஞ்சா கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சிகுருபாடே கிராமத்தை சேர்ந்தவர் நாராயண தொட்டதோடி என்பது தெரியவந்தது. இவருக்கு வயது 64. இவர் கூலி தொழிலாளியாக இருந்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் தீவிர தொண்டராக செயல்பட்டு வந்த அவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த அமைப்பில் இருந்து விலகினார். சமீபத்தில் அவருக்கு வாய் புற்றுநோய் ஏற்பட்டதும் தெரியவந்தது.
இதனால் அவரை அவரது குடும்பத்தினர் கைவிட்டுள்ளனர். இதையடுத்து இர்பானா ஃபர்ஹானா அவரை மீட்டு தனது அறக்கட்டளைக்கு கொண்டு வந்து ஷேவ் செய்து குளிப்பாட்டினார். அதன்பிறகு கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுபற்றி இர்பானா ஃபர்ஹானா, நாராயண தொட்டதோடியின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். ஆனால் நாராயணா தொட்டதோடியின் சகோதரி, 2 மனைவிகள், மகன் - மகள்கள் யாரும் வரவில்லை. இதனால் இர்பானா ஃபர்ஹானேவே அவரை கண்காணித்து வந்தார். இந்நிலையில் தான் கடந்த 25ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி கோழிக்கோடு அரசு கல்லூரியில் நாராயண தொட்டதோடி இறந்தார். இதுபற்றி தெரிவித்தும் குடும்பத்தினர் வரவில்லை.
இதனால் மதங்களை கடந்து மகள் ஸ்தானத்தில் இருந்து இர்பானா ஃபர்ஹானா நாராயண தொட்டதோடியின் உடலுக்கு இந்து முறைப்படி இறுதி சடங்குகள் செய்து செருகோலி மயானத்தில் தகனம் செய்தார். சேவா பாரதி தன்னார்வலர் ரகு மற்றும் சமூக ஆர்வலர்கள் ரியாஸ் பிலாத்தாரா, மஹ்மூத் கைகம்பா ஆகியோரின் உதவியுடன் இந்து மத முறைப்படி இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்ததோடு, மனிதாபிமானத்திற்கு மிக சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.
இதுபற்றி இர்பானா ஃபர்ஹானா கூறுகையில், ''நாராயணா தொட்டதோடியை எங்கள் முதியோர் இல்லத்தில் சேர்க்கலாம் என்று தான் அழைத்து வந்தேன். ஆனால் அவர் 7 நாட்களாக சாப்பிடாமல் இருந்துள்ளது. அவரது உடல்நிலை மோசமாக இருந்தது. வாய் புற்றுநோய் முற்றி இருந்தது. உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலை இருந்தது. இதனால் மருத்துவமனையில் சேர்ந்தேன். அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் இப்படி இறந்திருக்க கூடாது. யாராவது அவரை அன்போடு கவனித்து கொள்ள வேண்டும் என்று மட்டுமே எதிர்பார்த்தார். குடும்பத்தினர் யாரும் அவரது உடலை பெறவில்லை. இதனால் மகளாக இருந்து இறுதி சடங்குகள் செய்து தகனம் செய்தேன்'' என்றார்.
இர்பானா ஃபர்ஹானாவின் 'ஷேக் சையத் முதியோர் இல்லம்' தற்போது 50 பேரை பாதுகாப்புடன் கவனித்து வருகிறது. அதுமட்டுமின்றி உப்பளாவில் ஐந்து ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது. அங்கு 200 டயாலிசிஸ் இயந்திரங்களுடன் இந்தியாவின் மிகப்பெரிய இலவச டயாலிசிஸ் மையத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications