அலுவலகம் பக்கமே வரலையே.. அதிமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி! தவெகவை நோக்கி நகர்கிறாரா செல்லூர் ராஜூ?
மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தவெக நோக்கி நகர்ந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு பின் அவரின் அலுவலகத்திற்கு கூட வராமல் செல்லூர் ராஜூ அமைதி காத்து வருகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு விஸ்வாசமாக இருந்தாலும், இனி அதிமுகவுக்கு எதிர்காலம் இருக்காது என்று அவரின் ஆதரவாளர்களிடம் பேசத் தொடங்கியுள்ளனர். இதனால் அவரின் ஆதரவாளர்களும் தவெகவை நோக்கி செல்லும் திட்டத்தில் உள்ளனர்.
சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், அதிமுக தரப்பில் சலசலப்புகள் ஓய்ந்தபாடில்லை. ஏற்கனவே அதிமுகவின் 4 எம்எல்ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு முதல்வர் விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்துவிட்டனர். தற்போது அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தவெகவை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிய வந்துள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தரப்பு சந்தித்த பலத்த தோல்விக்குப் பிறகு, மதுரை மேற்குத் தொகுதியில் போட்டியிட்ட செல்லூர் ராஜூ, பொது நிகழ்ச்சிகளைத் தவிர்த்து முற்றிலும் அமைதி காத்து வருகிறார். வழக்கமாகத் தினசரி தனது கட்சி அலுவலகத்திற்கு வந்து நிர்வாகிகளைச் சந்திப்பதையும் வாடிக்கையாகக் கொண்ட அவர், இப்போது தனது அலுவலகம் பக்கமே வரவில்லை எனக் கூறப்படுகிறது.
வீட்டில் இருந்தவாறு வெறும் காரை மட்டும் அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு, அங்கு ஒரு 15 நிமிடங்கள் இருப்பது போல் காட்டிக் கொள்கிறார். ஆனால் செல்லூர் ராஜூ அதிமுக அலுவலகம் பக்கமே வரவில்லை என்று அக்கட்சியினர் புலம்ப தொடங்கியுள்ளனர். இதனிடையே ஆதரவாளர்களிடையே அதிமுகவின் எதிர்காலம் குறித்து செல்லூர் ராஜூ பேசத் தொடங்கியுள்ளார்.
தேர்தல் முடிவுகள் தங்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளன. தற்போதைய அரசியல் சூழலில், இனி அதிமுக தரப்பு பழையபடி எழுச்சி பெறுவது கடினம் என்றும், மாற்று சக்தியாக உருவெடுத்துள்ள தவெகவிற்கு மட்டுமே பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்றும் செல்லூர் ராஜூவின் முக்கிய ஆதரவாளர்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.
அமைதியாக இருந்தாலும், அவரது பின்னால் இருக்கும் தென்மாவட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் தவெக தலைமையுடன் மறைமுகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. சிட்டிங் கவுன்சிலர்கள் பலரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் தவெகவில் இணைய ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் மதுரையில் சீட்டுக்கட்டு போல் அதிமுகவின் கோட்டை சரியத் தொடங்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications