குவைத் மீது குண்டு மழை.. எல்லை மீறிய அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த பதிலடி! உச்சக்கட்ட பதற்றம்!
துபாய்: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழலில் பெரும் திருப்பமாக, ஈரான் நாட்டின் 10 முக்கிய இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக, குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது.
ஈரான்-அமெரிக்காவுக்கு இடையேயான பஞ்சாயத்து இப்போதுதான் முடிந்ததை போல இருந்தது. இப்படி இருக்கையில் தற்போது மீண்டும் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்திருக்கிறது.

அமெரிக்காவின் தாக்குதல்
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற 'கிகு' என்ற வணிகக் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகக் கூறி, அமெரிக்கா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்பு நிலையங்கள், கடற்கரை ரேடார் மையங்கள் உள்ளிட்ட 10 இடங்களை அமெரிக்கப் போர் விமானங்கள் தாக்கி அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தளம் தெரிவித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை
இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீறியுள்ளது. அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கையை முழுமையாகத் தொடர நேர்ந்தால், ஈரான் என்ற நாடே இல்லாமல் போய்விடும்" என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் பதிலடி
அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) குவைத்தில் உள்ள 'அலி அல் சலேம்' விமானத் தளம் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5-வது கடற்படைத் தளம் ஆகியவற்றின் மீது கூட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும், இதற்குப் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
அதிகரித்த பாதிப்புகள்
ஈரானின் இந்தத் தாக்குதலால் குவைத் சர்வதேச விமான நிலையம் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பஹ்ரைன் வான்பரப்பிற்குள் ஈரானிய ட்ரோன்கள் நுழைந்ததை அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் திடீர் மோதலால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த சூழலில், இந்தத் தாக்குதல்கள் மேற்கு ஆசியாவில் மீண்டும் ஒரு முழு அளவிலான போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளன.












Click it and Unblock the Notifications