கோவையில் கார், பைக் ஓட்டும் போது.. எக்காரணம் கொண்டும் இந்த தவறை பண்ணிடாதீங்க.. வந்தது 3வது கண்!
கோயம்புத்தூர்: கோவையில் கார், பைக் ஓட்டும் நபர்களுக்கு முக்கியமான அறிவுரை ஒன்று மாநகர போக்குவரத்து போலீசார் சார்பாக வழங்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகளில் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. போக்குவரத்தை சரி செய்வதற்காகவும், பாதுகாப்பான சாலை போக்குவரத்தை மேற்கொள்வதற்காகவும் பல்வேறு முக்கியமான விதிகள் அமலில் உள்ளன.

சென்னையில் கூட குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் வாகனம் ஓட்டினால் வழக்கு பாயும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் பகலில் 40 கி.மீ. வேகத்திற்கு மேல் ஓட்ட கூடாது. அதேபோல் இரவில் 50 கி.மீ. வேகத்தை கடந்து வாகனம் ஓட்ட கூடாது என்று விதி உள்ளது. மீறி ஓட்டினால் அதிவேக பயணம் என வழக்கு பதியப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில்தான் கோவையில் கார், பைக் ஓட்டும் நபர்களுக்கு முக்கியமான அறிவுரை ஒன்று மாநகர போக்குவரத்து போலீசார் சார்பாக வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி கோவையில் 6 இடங்களில் தானியங்கி வேக அளவீடு கருவிகளை கோவை மாநகராட்சி பொருத்தி உள்ளது. அவினாசி சாலை, சத்தியமங்கலம் சாலை மற்றும் பாலக்காடு சாலையில் என்று மொத்தம் 6 முக்கிய சாலைகளில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
அதன்படி வாகனங்கள் 40 கிமீ வேகத்தை தாண்டி சிட்டிக்கு உள்ளே சென்றால் அந்த வாகனங்களின் நம்பர் பிளேட் மூலம் வாகனம் ரிஜிஸ்ட்டர் செய்யப்பட்ட நபருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கண்காணிப்பு எப்படி: போக்குவரத்து விதி மீறுபவர்களை ஏஐ ரேடார் கேமரா வைத்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. வேகமாக செல்பவர்களை இந்த கேமராவில் இருக்கும் ஸ்பீடு ரேடார் எளிதாக கண்டுபிடிக்கும்.
அதன்மூலம் போக்குவரத்து விதி மீறல்கள் ரெக்கார்ட் செய்யப்படும். இதனால் வேகமாக செல்லும் வாகனங்கள் கண்டுபிடிக்க முடியும். மேலும் இரவு நேர ரோந்துகளில் போலீஸ் முக்கிய விஷயங்களை ரெக்கார்ட் செய்ய, குற்றங்களை களைய இந்த கேமரா உதவியாக இருக்க முடியும்.
இந்த அபராதத்தை போலீசார் கட்டுப்பாட்டு அறையில் இருந்தே விதிக்க முடியும். உங்களை அவர்கள் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதாவது நீங்கள் சாலையில் ஹெல்மெட் இன்றி செல்கிறீர்கள். போலீசார் சாலையில் இல்லை என்றால் கேமரா உங்களை பதிவு செய்யும். பின்னர் பைக் நம்பரை வைத்து உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மெயில், போன் மெசேஜ் மூலம் இந்த அபராத செல்லான் செலுத்தப்படும்.
விதி மீறல்கள்: தமிழ்நாட்டில் பல்வேறு குற்றங்களுக்கான, விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் இருப்பது மிகப்பெரிய குற்றம். இது எந்த வாகனமாக இருந்தாலும் அந்த அபராதம் பொருந்தும்.
தீயணைப்பு வண்டி, அவசர வாகனங்களுக்கு வழிவிடவில்லை என்றாலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தேவையின்றி ஹார்ன் அடித்தால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆபத்தான முறையில் வண்டி ஓட்டினால் 10000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சரக்கு ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு வாகனங்களும் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே சரக்கை ஏற்றிச்செல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications