ரூ.3000 ஃபாஸ்டேக் பாஸ் வாங்கினால்.. நாடு முழுக்க பயணிக்கலாம்.. எப்படி வாங்குவது? வெளியான அறிவிப்பு
சென்னை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தனியார் வாகனங்களுக்கான ஃபாஸ்டேக் அடிப்படையிலான வருடாந்திர பாஸ் முறையை 2025 ஆகஸ்ட் 15 முதல் அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த பாஸின் விலை ₹3,000 ஆகும்.
ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் திட்டம்
இந்த பாஸ் மூலம் 200 பயணங்கள் வரை மேற்கொள்ளலாம் அல்லது ஒரு வருடம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் எது முந்தையதோ, அதுவரை பாஸ் செல்லுபடியாகும். கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற வணிக நோக்கமில்லாத வாகனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும். வணிக வாகனங்களுக்கு இந்த பாஸ் பொருந்தாது.

இந்த பாஸை ராஜ்மார்க் யாத்ரா செயலி மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இந்த புதிய திட்டம், சுங்க கட்டணம் செலுத்துவதை எளிதாக்குவதுடன், போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, நாடு முழுவதும் நெடுஞ்சாலை பயணத்தை எளிமைப்படுத்தும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் பயணத்தை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கைகோள் முறை
அதேபோல் நாடு முழுக்க அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூலை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சாட்டிலைட் அடிப்படையிலான சுங்கச்சாவடி முறை வரும் மே 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தகவல்கள் வந்தன. ஆனால் இந்த திட்டம் அரசிடம் உள்ளது.. ஆனால் மே மாதம் இந்த திட்டம் செயலுக்கு வராது.. அதற்கு இன்னும் காலம் எடுக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதற்கு பதிலாக வேறு திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூலை இயக்க, அனைத்து வாகனங்களுக்கும் ஜிபிஎஸ் (குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்) இருப்பது அவசியம். அரசாங்கம் திட்டமிட்டுள்ளபடி, இது மூன்றாம் தலைமுறை (3ஜி) மற்றும் ஜிபிஎஸ் இணைப்புடன் கூடிய மைக்ரோ-கண்ட்ரோலரின் உபகரணங்களின் மூலமாக இயங்கும்.
எப்படி செயல்படும்?
ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் வாகனங்களின் ஜி.பி.எஸ் ரெக்கார்டுகளை அரசு பெற்று அவற்றை தொடர்ந்து கண்காணிக்க முடியும். எனவே, அவர்கள் பயணிக்கும் வாகனங்களின் வழித்தடத்தையும், அவர்கள் எடுக்கும் சுங்கச்சாவடிகள் ரூட் என்ன என்பதையும் அரசு தெரிந்து கொள்ளும். அவர்கள் எத்தனை டோல் கேட்களைக் கடந்து செல்கிறார்கள் என்பதைச் சரிபார்த்து மொத்த டோல் வரியைக் கணக்கிடலாம். அதாவது வாகனங்கள் எந்த இடத்திற்கு எல்லாம் பயணம் செய்துள்ளது என்பதை கண்டுபிடித்து அதன் மூலம் ஜிபிஎஸ் பயன்படுத்தி நேரடியாக டோல் கட்டணம் வசூலிக்கப்படும்.
புதிய முறை
நாடு முழுக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) விரைவில் புதிய முறையை அறிமுகப்படுத்தும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மார்ச், 2024க்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான கட்டண முறையை NHAI அறிமுகப்படுத்தும் என்று அமைச்சர் நிதின் கட்கரி ராஜ்யசபாவில் தெரிவித்தார். ஆனால் அப்போது செயல்படுத்தப்படவில்லை.
தற்போது பாஸ்ட் டாக் கட்டண முறை உள்ளது. இந்த சாட்டிலைட் முறை வந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக சுங்கச்சாவடிகள் மூடப்பட வேண்டும். அதனால் இந்த முறையை இப்போதைக்கு அரசு கொண்டு வராது என்று அறிவித்துள்ளது. அதனால் மே மாதம் இந்த திட்டம் செயலுக்கு வராது.. அதற்கு இன்னும் காலம் எடுக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications