அமலுக்கு வந்தது ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ்.. எப்படி செயல்படும்? யார் வாங்க முடியும்? ரூ.3000 போதும்
சென்னை: தேசிய நெடுஞ்சாலைகளில் தனிநபர் வாகன ஓட்டிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், புதிய ஃபாஸ்டேக் ஆண்டு கட்டண பாஸ் 2025 இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த பாஸுக்கான விண்ணப்பங்கள் நேற்றிலிருந்தே பெறப்பட்டு வருகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் பலனை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த புதிய ஃபாஸ்டேக் ஆண்டு பாஸ் ₹3,000 விலையில் 200 பயணங்களுக்கு செல்லுபடியாகும். இது தற்போது பயன்பாட்டில் உள்ள ஃபாஸ்டேக் முறையிலேயே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஃபாஸ்டேக் ஆண்டு பாஸ்
இந்த ஆண்டு பாஸ் செயல்படத் தொடங்கிய நாளிலிருந்து ஒரு வருடம் அல்லது 200 பயணங்கள், இதில் எது முன்னதாக வருகிறதோ அதுவரை செல்லுபடியாகும். தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியை ஒருமுறை கடப்பது ஒரு பயணமாகக் கணக்கிடப்படும். இருவழிப் பயணம் (சுற்றுப்பயணம்) இரண்டு பயணங்களாகக் கருதப்படும்.
அமைச்சர் நிதின் கட்கரி இது குறித்து கூறுகையில், "தற்போது, 200 பயணங்களுக்கு ஒரு பயனர் குறைந்தபட்சம் ₹10,000 செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் புதிய பாஸ் மூலம் அது ₹3,000 ஆகக் குறையும். இந்த ஆண்டு பாஸ் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற மற்றும் செலவு குறைந்த பயணத்தை உறுதி செய்யும்" என்று குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு பாஸுக்கான பிரத்தியேக இணைப்பு ராஜமார்க்யாத்ரா செயலி மற்றும் NHAI, MoRTH இணையதளங்களில் கிடைக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த ஆண்டு பாஸ் மாநில நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளுக்குப் பொருந்தாது.
புதிய ஃபாஸ்டேக் ஆண்டு பாஸ் - விண்ணப்பிக்கும் முறை
பயனர்கள் தங்கள் ஃபாஸ்டேக் மூலம் மாநில மற்றும் பிற சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த முடியும். ஆனால், ஆண்டு பாஸ் கணக்கிலிருந்து பணம் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய சாலை அமைச்சகம் வெளியிட்ட கேள்வி-பதில் தொகுப்பின்படி, வாகனம் மற்றும் அதனுடன் இணைந்த ஃபாஸ்டேக்கின் தகுதியைச் சரிபார்த்த பின்னரே ஆண்டு பாஸ் செயல்படுத்தப்படும். சரிபார்ப்புக்குப் பிறகு, பயனர் ராஜமார்க்யாத்ரா மொபைல் செயலி அல்லது NHAI இணையதளம் மூலம் 2025-26 அடிப்படை ஆண்டுக்கு ₹3,000 செலுத்த வேண்டும்.
புதிய ஃபாஸ்டேக் ஆண்டு பாஸ் - எப்படி பெறுவது?
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் சில காலமாக இந்த ஆண்டு பாஸ் அறிமுகம் குறித்துப் பரிசீலித்து வந்தது. தூர அடிப்படையிலான கட்டணங்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டிருந்தது, ஆனால் அது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
ஃபாஸ்டேக் என்பது ரேடியோ அலைவரிசை அடையாள தொழில்நுட்பத்தைப் (RFID) பயன்படுத்தும் ஒரு மின்னணு கட்டண வசூல் அமைப்பு. இது வாகனத்தை நிறுத்தாமல், ப்ரீபெய்ட் அல்லது சேமிப்புக் கணக்கிலிருந்து நேரடியாகக் கட்டணம் செலுத்த உதவுகிறது. ஃபாஸ்டேக் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்பட்டிருக்கும்.
ஃபாஸ்டேக் ஆண்டு பாஸ் - கட்டணம் என்ன?
தற்போது, ஒரு சுங்கச்சாவடியைக் கடக்கும் உள்ளூர் பயணிகளுக்கு மட்டுமே ₹340 விலையில் மாதாந்திர பாஸ் வழங்கப்படுகிறது. இந்த புதிய கொள்கை, இரண்டு சுங்கச்சாவடிகளுக்கு இடையிலான 60 கி.மீ தூரம் தொடர்பான நீண்டகாலக் கவலைகளையும் தீர்க்கும் என்று கட்கரி தெரிவித்தார். நெடுஞ்சாலை சாலை அமைச்சகம் வெளியிட்ட வீடியோ அறிக்கையில், கட்கரி மேலும் கூறுகையில், "தற்போது, ஒரு சுங்கச்சாவடியைக் கடப்பதற்கான சராசரி கட்டணம் ₹50 முதல் ₹100 வரை மாறுபடும். இந்த பாஸ் காரணமாக அது இப்போது ₹15 ஆகக் குறையும்" என்றார்.
இந்த ஆண்டு பாஸ் மூலம் காத்திருப்பு நேரங்கள், நெரிசல், மற்றும் சுங்கச்சாவடிகளில் ஏற்படும் தகராறுகள் குறையும் எனவும், இதன் மூலம் மில்லியன் கணக்கான வாகனங்கள் எளிதாகப் பயணிக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications