நான் நன்றி மறக்கல! விஜய் கொடுத்த கிப்ட் உடன் வந்த சிவகார்த்திகேயன்.. கையை கவனிச்சீங்களா?
சென்னை: பொங்கல் திருவிழா நெருங்கி வரும் நிலையில், தமிழ் சினிமாவில் வெளியாக இருந்த பெரிய படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சிக்கல்களை சந்தித்து வருகின்றன. அந்த வரிசையில், நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'பராசக்தி' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற 'பராசக்தி' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு சிவகார்த்திகேயன் சென்றிருந்த போது, அவர் அணிந்திருந்த ஒரு வாட்ச் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அந்த வாட்ச், 'Goat' படத்தில் இணைந்து நடித்தபோது நடிகர் விஜய் அன்பு பரிசாக வழங்கிய, சுமார் 7 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள "Breitling Superocean Heritage" வாட்ச் என ரசிகர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, "விஜய் கொடுத்த வாட்சுடன் பராசக்தி புரமோஷனுக்கு சென்ற சிவகார்த்திகேயன்" என்ற தலைப்பில் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சிலர் இதை ரசிகர் உணர்வுடன் பகிர்ந்துகொண்டாலும், மற்றொரு தரப்பில், விஜய்க்கு போட்டியாகவே சிவகார்த்திகேயன் தனது படத்தை ஜனவரி 10ஆம் தேதி வெளியிட வைத்திருக்கிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தன.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், 'பராசக்தி' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், "இது போட்டி அல்ல... இது அண்ணன்-தம்பி பொங்கல்" என்று கூறி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும், விஜய் குறித்து பேசும் போது, அவரிடம் இருந்து தான் கற்றுக்கொண்ட பல விஷயங்கள், அவர் தன்னிடம் காட்டிய அன்பு, மரியாதை மற்றும் ஆதரவு ஆகியவற்றையும் மேடையிலேயே பகிர்ந்துகொண்டார்.
விஜய் நடித்த 'ஜனநாயகன்' படம், சென்சார் நடைமுறை தாமதங்களால் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், 'பராசக்தி' படத்திற்கும் சென்சார் சான்றிதழ் மற்றும் முன்பதிவு தொடர்பான குழப்பங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறு, இரண்டு பெரிய படங்களுமே வெவ்வேறு விதமான சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், ரசிகர்களிடையே தேவையற்ற ஒப்பீடுகளும், போட்டி கருத்துகளும் பரவி வருகின்றன. ஆனால், சிவகார்த்திகேயன் விஜய்யிடமிருந்து பெற்ற வாட்சை பெருமையுடன் அணிந்து, அதே நேரத்தில் விஜய் மீது மரியாதையும் அன்பையும் வெளிப்படையாக தெரிவித்திருப்பது, அவரின் மனநிலையை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
விஜய் படத்தை காலி பண்ண தான் இதெல்லாம்! சிவகார்த்திகேயன் சொன்னது பொய்! பிஸ்மி ஆதங்கம்
போட்டியை விட உறவுதான் முக்கியம், இதுதான் உண்மையான சகோதரத்துவம் என பலரும் சிவகார்த்திகேயனை பாராட்டி வருகின்றனர். மொத்தத்தில், 'ஜனநாயகன்' - 'பராசக்தி' என இரு படங்களும் சந்திக்கும் சிக்கல்கள் ஒருபுறம் இருக்க, சிவகார்த்திகேயன் வெளிப்படுத்திய இந்த அண்ணன்-தம்பி அணுகுமுறை, தற்போதைய சூழலில் தேவையற்ற ரசிகர் மோதல்களை குறைக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications