டேட்டா எண்ட்ரி: ஏமாற வேண்டாம்...
-செந்தழல் ரவி
சமீபகாலமாக டேட்டா எண்ட்ரி புராஜெக்ட் தருகிறோம், "ஒரு நாளைக்கு இரண்டாயிரம் சம்பாதிக்கலாம் மூவாயிரம் சம்பாதிக்கலாம்" என்று ஆசை வார்த்தை சொல்லும் இணைய தளங்கள் ஏராளம் வருகின்றன.
பிடிஎப் கோப்பில் இருப்பதை வேர்டு டாக்குமெண்டில் டைப் செய்து தாருங்கள். ஒரு பக்கத்துக்கு 500 ரூபாய் என்று ஒரு விளம்பரத்தில் இருக்கும்.. டாக்குமெண்டில் இருப்பதை எக்ஸெல் ஷீட்டில் டைப் செய்ய வேண்டும். ஒரு லைனுக்கு இரண்டு டாலர் என்று டாலர் கனவும் காட்டுவார்கள்...
உங்கள் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணை கொடுத்தீர்கள் என்றால், முதலில் ஐந்தாயிரம் அட்வான்ஸ் கொடுத்திருங்க... அதுக்கப்புறம் டாலர்ல வந்து கொட்டும் என்று தொலைபேசியில் ஆசை வார்த்தை காட்டுவார்கள்... நீங்களும் ஏமாந்து அவர்களின் அக்கெளண்டில் பணத்தை போட்டீர்கள் என்றால் முடிந்தது... அதற்கு பிறகு, புராஜெக்ட் இதோ வருது, அதோ வருது என்று இழுத்தடித்து, உங்கள் டவுசரை கிழித்துவிடுவார்கள்...
டாலர் கனவில் மிதந்து கணிப்பொறி, பிரிண்டர் என்று வாங்கிப் போட்டீர்கள் என்றால் கடைசியில் உங்களுக்கு முருகன் டாலர் கூட கிடைக்காது...
முதலில் தெளிவாக சிந்தியுங்கள்...நாம் வேலை செய்வதற்கு நாம் ஏன் பணம் தரவேண்டும்??
ஒரு வடிவேலு-பார்த்திபன் காமெடியில்,
"சுலபமாக பணக்காரன் ஆவது எப்படி", ஐடியா சொல்லும்படி பார்த்திபனை நச்சரிப்பார் வடிவேலு..
"இதையே விளம்பரமா குடுறா", தலைக்கு நூறு ரூபாய் வாங்கிக்கிட்டு ஐடியா சொல்லு...!!! என்பார் பார்த்தி...
அப்புறம் கல்யாண மண்டபத்தில் வந்து உட்கார்ந்திருக்கும் நூறு ரூபாய் கொடுத்தவர்களிடம் ஐடியா சொல்ல முடியாமல், சுப்பிரமண்ய சுவாமி புகழ் முட்டையடி பெற்று ஓடுவார் வடிவேலு..
தலைக்கு ஆயிரம் என்று நூறு பேரிடம் வசூலித்தால் என்ன ஆகிறது ? என்று கூட்டி கழித்து பாருங்கள்..(நீங்க விளம்பரம் கொடுக்க கிளம்பிடாதீங்க)
இன்னும் சில போலி ஆசாமிகள், உங்களிடம் வேலையையும் வாங்கிக்கொண்டு, பணத்தையும் தராமல் டாட்டா காட்டிவிட்டு சென்றுவிடும் சம்பவங்களும் உண்டு...
ஆகவே இதுபோன்ற போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்...
Guru.com, Elance.com, Getafreelancer.com, Project4Hire.com, Odesk.com போன்ற தளங்களில் சென்று புராஜெக்ட் எடுங்கள், செய்யுங்கள்... இந்தத் தளங்களில் எஸ்க்ரோ போன்ற வசதிகள் இருக்கும்...
நமது பணி ஆரம்பிக்கும் முன்பே பணி வாய்ப்பை வழங்குபவர் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும்...பணி நிறைவடைய நிறைவடைய, நாம் அந்த தொகையில் குறிப்பிட்ட பகுதியை அளிக்குமாறு கேட்கலாம்...பணியை வழங்குபவரும் குறிப்பிட்ட தொகையை திறந்துவிடுவார்...அதனை பெற்றுக்கொண்டு மேற்கொண்டு நமது பணியை தொடரலாம்...
நீண்ட கால அடிப்படையில் பணி வாய்ப்பை தேடுபவர்கள் எஸ்குரோவை கண்டிப்பாக பயன்படுத்துதலின் மூலம், நமக்கு வரவேண்டிய பணம் இருப்பதை உறுதி செய்துகொண்டு மன நிம்மதியுடன் பணியாற்றலாம்...
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள், அந்த ஏமாறுபவர்கள் லிஸ்டில் நீங்கள் இருந்திடாமல் இருக்கவே இந்த கட்டுரை...!!!