அடக்கப்பட வேண்டிய அநாகரிகம்!
-சுப வீரபாண்டியன்
பாட்டில் அநாகரிகம் இருந்தது. பேட்டியில் அராஜகம் இருந்தது.- இப்படித்தான் சொல்லவேண்டியுள்ளது, சிம்பு, அனிருத் உருவாக்கியுள்ள பீப் பாடல் குறித்து!
அண்மையில் இணையதளத்தில் வெளியாகியுள்ள ஒரு பாடல், மிகக் கண்ணியக் குறைவான சொல்லோடு தொடங்குகிறது. திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் அப்பாடலை உருவாக்கியுள்ளனர். எனினும், தாங்கள் அதனை வெளியிடவில்லை என்றும், அது தானாகக் கசிந்து வெளி வந்துள்ளது என்றும் கூறுகின்றனர். எப்படியோ, அது தங்களின் பாடல் இல்லை என்று அவர்கள் கூறவில்லை (அனிருத் அப்படிச் சொன்னாலும் சிம்புவும், டி ராஜேந்தரும் இசை அமைத்தவர் அனிருத்தான் என்று தெளிவாகச் சொல்லிவிட்டார்கள்).
நாடு முழுவதும் மழை, வெள்ளத்தால் மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், எந்தவிதமான சமூக அக்கறையும் இல்லாமல், இப்படி ஒரு பாடலை வடிவமைக்கும் வேலையில் அவர்கள் இருந்துள்ளனர் என்பதே வெட்கத்திற்கும், வேதனைக்கும் உரியது.
நடிகர்கள் பலர் நிதி அளித்தும், நிவாரணம் அளித்தும், தெருக்களைக் சுத்தம் செய்தும் தங்கள் கடமைகளை ஆற்றிக் கொண்டிருக்கும் வேளையில், சமூகத்திற்குக் கேடு விளைவிக்கும் வேலையை மட்டுமாவது இவர்கள் செய்யாமல் இருந்திருக்கலாம்.
காமம் வாழ்வின் ஒரு பகுதிதானே என்கின்றனர். ஆம், காதலும், காமமும் வாழ்வின் பிரிக்கப்பட முடியாத பகுதிகள்தாம். ஆனாலும், அறைக்குள் எது, அம்பலத்தில் எது என்ற வரையறை இல்லாத வாழ்வு அநாகரிகமானது. சிறுநீர் கழிப்பது ஆபாசமானதோ, யாரும் அறியாததோ இல்லை. என்றாலும் சாலையின் நடுவில் நின்று எவரும் சிறுநீர் கழிப்பதில்லை. ஒதுக்குப்புறம் நோக்கிச் செல்வது அடிப்படை நாகரிகம்.
இவை எல்லாவற்றையும் தாண்டி, சிம்பு அளித்துள்ள பேட்டி ஆணவத்தின் உச்சமாக உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கேளுங்கள், இல்லாதவர்கள் கேட்க வேண்டியதில்லை என்று சொல்வது அடக்கப்பட வேண்டிய அராஜகம் என்றுதான் சொல்ல வேண்டும்!