4 ஆண்டுகளுக்கு பிறகு.. எரிபொருள் விலையை ஏற்றிய மத்திய அரசு! சொன்ன வாக்கை காப்பாத்தலையே!
டெல்லி: மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் பதற்றம் காரணமாக, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால் எங்கள் ஆட்சியில் எரிபொருள் விலை உயராது என்று பாஜக தலைமையிலான மத்திய அரசு பிம்பத்தை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும் தற்போது விலை ஏற்றப்பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்தல் பிரச்சாரங்களின் போது, மத்திய அமைச்சர்கள் குறிப்பாக ஹர்தீப் சிங் பூரி உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், இந்தியாவில் விலை உயராமல் அரசு பார்த்துக் கொள்வதாகக் கூறி வந்தனர். "மோடி அரசு மக்களின் நலனை முன்னிறுத்தி விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது" என்ற பிரச்சாரம் தீவிரமாக முன்வைக்கப்பட்டது. இது மக்களுக்கு ஒரு மறைமுகமான உறுதிமொழியாக உணரப்பட்டது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எரிபொருள் விலை உயராது என்று மக்கள் நம்பியிருந்தனர்.

போதாத குறைக்கு சில நாட்களுக்கு முன்னர் தனியார் பெட்ரோல் பங்குகளில் விலை ஏற்றப்பட்டபோது மத்திய அரசு இதனை கூலாக கையாண்டது. அவர்கள் ஏற்றினால் ஏற்றட்டும், நாங்கள் ஏற்ற மாட்டோம் என்கிற டோனில் பதிலளித்திருந்தது.
பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சுஜாதா ஷர்மா, "பல இடங்களில் மக்கள் பீதியடைந்து எரிபொருளை வாங்குவதை பார்க்கிறோம். நாங்கள் மாநில அரசுடன் தொடர்பில் இருக்கிறோம். அனைத்து விற்பனை நிலையங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. எரிபொருள் இருப்பு உறுதி செய்யும் வகையில் அதற்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. வதந்தியை நம்ப வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார். இவ்வளவு சொல்லியும் தற்போது ரேட் ஏற்றப்பட்டிருக்கிறது.
முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடைசியாக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருந்தது. அதன் பின்னர் இடைப்பட்ட 4 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் சரிந்தபோதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. ஆனால், தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி எரிபொருள் ரேட் ஏற்றப்பட்டிருக்கிறது. இது எந்த வகையில் நியாயம்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications