அடியோடு சரிந்த அதிமுக கோட்டை.. மண்ணைக் கவ்வ வைத்த மதுரை! தவெகவுக்கு தாவும் தலைகள்! எடப்பாடிக்கு ஷாக்
மதுரை: தென் தமிழக அரசியலில் அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் மதுரையில், அதிமுகவுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் அதிர்ச்சியில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்கள் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவது, மதுரை அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மதுரையைச் சேர்ந்த டாக்டர் சரவணன் மற்றும் குமார் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதையடுத்து, செல்லூர் ராஜூவின் தீவிர ஆதரவாளர்களாக அறியப்படும் எம்.எஸ். பாண்டியன், கிருஷ்ணன் ஆகியோரும் தவெகவில் இணைந்தனர்.

கடந்த சில வாரங்களாகவே முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் தவெகவில் இணையக்கூடும் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரவி வந்தது. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், "நான் என்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில்தான் பயணிப்பேன்" என்று செல்லூர் ராஜூ வெளிப்படையாக தெரிவித்தார்.
மதுரை அரசியல்
இருப்பினும் அவரது ஆதரவாளர்கள் அடுத்தடுத்து கட்சியை விட்டு வெளியேறி வருவது, அதிமுக நிர்வாகிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் மதுரையில் அதிமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. ஒரு காலத்தில் கட்சியின் வலுவான கோட்டையாக கருதப்பட்ட பல தொகுதிகளில் கூட அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. மதுரை மேற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தோல்வியடைந்ததோடு, மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜு மட்டுமல்லாமல், திருமங்கலம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும் வெற்றி பெற முடியவில்லை. மதுரை வடக்கு தொகுதியில் வி.வி. ராஜன் செல்லப்பா மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். மதுரை மத்தி, மதுரை தெற்கு மற்றும் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளிலும் அதிமுக எதிர்பார்த்த முடிவுகளை பெற முடியவில்லை. குறிப்பாக திமுக மற்றும் அதிமுக என இரு பாரம்பரிய கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி, தமிழக வெற்றிக் கழகம் பல இடங்களில் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது.
தமிழக வெற்றிக் கழகம்
இந்நிலையில், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தவெக அமைப்பை வேகமாக விரிவுபடுத்தும் பொறுப்பு அமைச்சர் நிர்மல்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே அதிமுக மற்றும் பிற கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகளை தவெகவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து, வார்டு, ஒன்றியம், நகராட்சி மற்றும் மாநகராட்சி மட்டங்களில் செல்வாக்கு கொண்ட நிர்வாகிகளை தவெக குறிவைத்து செயல்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
மதுரை
இதன் காரணமாகவே மதுரையில் அதிமுகவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நிர்வாகிகள் பலர் தவெகவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த இணைப்புகள் அனைத்தும் தவெகவுக்கு மகிழ்ச்சியை மட்டுமே உருவாக்கவில்லை. ஆரம்ப காலம் முதல் விஜய் மக்கள் இயக்கத்திலும், பின்னர் தமிழக வெற்றிக் கழகத்திலும் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியும் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிருப்தி
"கட்சி தொடங்கிய நாள் முதல் உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல், தற்போது வேறு கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது" என்ற குற்றச்சாட்டை சில நிர்வாகிகள் முன்வைத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், அதிமுகவில் இருந்து வருபவர்களுக்கு பதவிகள் வழங்கப்படும் என்ற உறுதிமொழி அளிக்கப்படுவதாக தகவல் பரவுவது கட்சிக்குள் அதிருப்தியை அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
உள்ளாட்சி தேர்தல்
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் தான் இந்த நகர்வுகளின் மையமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. உள்ளாட்சி அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்தில் அனைத்து கட்சிகளும் புதிய நிர்வாகிகளை ஈர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. அதில் தவெக மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக மதுரை போன்ற முக்கிய மாவட்டங்களில் அதிமுகவின் அமைப்பு பலவீனமடைந்துள்ளதாக கருதப்படும் நிலையில், அந்த வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியில் தவெக ஈடுபட்டுள்ளது.
தவெக வளர்ச்சி
இதனால், வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக மதுரையில் மேலும் பல அரசியல் திருப்பங்கள் நிகழக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக அதிமுக தனது நிர்வாகிகளை தக்க வைத்துக் கொள்ள என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? தவெக தனது வளர்ச்சியை எந்த அளவுக்கு வளரப் போகிறது? எதிர்க் கட்சியான திமுக என்ன செய்யப் போகிறது? என்பதையே தற்போது அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications