'பறக்கும் பஸ்' நகரங்களில் டிராபிக்கே இல்லாமல் போகலாம்.. நிதின் கட்காரி சொல்றது நடந்தால் வேற லெவல் தான்
டெல்லி: இந்தியாவில் நகர்ப்புற போக்குவரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், பறக்கும் பேருந்து சேவையை கொண்டு வர இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். இந்த திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் காலக்கெடு பற்றி இன்னும் எந்த விவரமும் இல்லை. எனினும், நிதின் கட்காரியின் அறிவிப்பு நடந்தால் இந்தியாவில் போக்குவரத்து துறையில் புதிய அத்தியாயம் ஏற்படும்.
இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கம் ஒரு பக்கம் அதிகரித்துள்ள நிலையில், மக்களிடையே வாகனங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல், விபத்து போன்றவைகள் அதிகரித்து வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்தவும் எதிர்கால போக்குவரத்தை நவீனமயப்படுத்தும் வகையில் பல புதிய திட்டங்களை உலக நாடுகள் ஆலோசித்து வருகின்றன.

பறக்கும் பேருந்து சேவை
இந்தியாவும் இதற்கு சற்றும் சளைக்காமல் போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்குவது பற்றி தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி வெளியிட்ட திட்டம் ஒன்று அமைந்துள்ளது. அதாவது நகர்ப்புற போக்குவரத்து அமைப்பை மாற்றியமைக்கும் வகையில், பறக்கும் பேருந்தை அறிமுகம் செய்ய இந்தியா திட்டமிட்டு வருவதாக கூறினார்.
லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்காரி இதனை கூறினார். இது குறித்து நிதின் கட்காரி கூறியதாவது:- காற்றில் பறக்கும் பேருந்தை நான் கொண்டு வரப்போகிறேன்' என்றார். எதிர்காலத்திற்கு ஏற்ற பொதுப் போக்குவரத்து முறைகளை நோக்கி மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் பற்றியும் பேசிய கட்காரி, இந்த திட்டத்திற்கான டைம்லைன் பற்றியோ அல்லது திட்டம் பற்றிய தொழில் நுட்ப விவரங்களையோ பகிர்ந்து கொள்ளவில்லை.
பெரிய புரட்சியை ஏற்படுத்தும்
எரிபொருள் பயன்பாட்டை குறைகும் வகையில், மின்சார வாகனங்கள் பயன்பாட்டை இந்தியா ஊக்குவித்து வருகிறது. ரோப்வேஸ்கள், கேபிள் கார்கள், நகர்புற வான்வழி போக்குவரத்து ஆகிய திட்டங்களையும் இந்தியா ஊக்கப்படுத்தி வருகிறது. குறிப்பாக, காற்று மாசுவை குறைப்பதோடு, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அமையும் என்பதால், இந்தியா இந்த திட்டங்களின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது.
பறக்கும் பேருந்து பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் நகர்ப்புற போக்குவரத்தில் பெரிய புரட்சியையே ஏற்படுத்தும் என்று தெரிகிறது. பாதுகாப்பு, விரைவான பயணம் ஆகியவை பயணிகளுக்கு பலனை அளிக்கும். தற்போது, மக்கள் அதிகம் வசிக்கும் நகரங்களில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் பெரும் சவாலாக உள்ளது. இது இனி வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கவே செய்யும் நிலை உள்ளதால், பறக்கும் பேருந்துகள் என்றால் இது அப்படியே போக்குவரத்து துறையில் தலைகீழ் மாற்றத்தை கொண்டு வரும்.
கனவு திட்டம்
எனினும், இந்த பறக்கும் பேருந்து என்பது அவ்வளவு எளிதல்ல. மேம்பட்ட விமான தொழில் நுட்பம் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள், ஏர் டிராபிக் மேனேஜ்மெண்ட், இதற்கான உள்கட்டமைப்புகள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து அதன் பிறகே வணிக பயன்பாட்டுக்கு இந்த பேருந்துகள் எல்லாம் கொண்டு வர முடியும். எனவே, இந்த திட்டம் தற்போதைக்கு சாத்தியமில்லாத ஒன்று என்பதே அத்துறை சார்ந்த நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
எனினும், நிதின் கட்காரியின் கருத்தானது, அரசின் போக்குவரத்தின் லட்சிய திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு விரிவாக்கம், நவீன மற்றும் புதுமை, வேகம், தூய்மை, திறன் வாய்ந்த போக்குவரத்து ஆகியவற்றை உருவாக்கும் இந்தியாவின் கனவு திட்டங்களுக்கு வலு சேர்ப்பதாக நிதின் கட்காரியின் கருத்து உள்ளது.















Click it and Unblock the Notifications