போக 17! வர 17! நீலாங்கரை வீட்டிலிருந்து போயஸ் கார்டனுக்கு ஷிப்டாகிறாரா விஜய்? உளவு துறை பிளான் என்ன?
சென்னை: தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய், தனது தற்போதைய ஈசிஆர் நீலாங்கரை இல்லத்திலிருந்து சென்னை போயஸ் கார்டன் பகுதிக்குக் குடிபெயரத் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
நிர்வாக வசதி, போக்குவரத்துச் சிக்கல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்பு எம்எல்ஏவாக போட்டியிட்டதால் பெரம்பூருக்கே அவர் மாற்றலாகி வருவதாக சொன்ன நிலையில் தற்போது போயஸ் கார்டனுக்கு விஜய் வருவதால் மீண்டும் அதிகார மையமாகிறதா போயஸ் கார்டன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற நாள் முதல் நீலாங்கரை வீட்டிலிருந்து தலைமைச் செயலகத்திற்கு தினமும் வந்து செல்கிறார். இதனால் முதல்வரின் கான்வாய் வரும் போது ஒவ்வொரு சிக்னலிலும் மக்கள் நிறுத்தப்பட்டு அவரது கான்வாய் சென்ற பிறகு மற்ற வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
இதனால் இந்த வழித்தடத்தில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். விஜய்க்கு தனது வாகனத்தால் பொதுமக்கள் பாதிக்கக் கூடாது என்ற எண்ணம் உள்ளது. ஆனால் புரோட்டோகால் என்பதால் இந்த டிராபிக் பிரச்சினையை தீர்க்க முடிவு செய்துள்ளார்.
போக்குவரத்து நெரிசல்: நீலாங்கரையிலிருந்து கோட்டைக்குச் செல்லும் சுமார் 35 கி.மீ தூரப் பயணத்தால், தினசரி அலுவலக நேரங்களில் பொதுமக்கள் 45 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
பாதுகாப்பு சவால்கள்: கடற்கரையை ஒட்டியுள்ள நீலாங்கரை இல்லத்தில், 'ஒய் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு வளையத்தை நிர்வகிப்பதிலும், அமைச்சர்களின் வாகனங்களை நிறுத்துவதிலும் காவல் துறைக்குச் சிரமங்கள் இருந்தன.
நிர்வாக வேகம்: தலைமைச் செயலகத்திற்கு மிக அருகில் இருப்பதால், அவசர காலங்களில் விரைந்து செயல்பட போயஸ் கார்டன் ஏதுவான இடமாகும்.
போயஸ் கார்டன்: விஐபிக்களின் சங்கமம்
தமிழகத்தின் மிகவும் பாதுகாப்பான மற்றும் ஆடம்பரமான பகுதியாகக் கருதப்படும் போயஸ் கார்டன், பல தசாப்தங்களாக அரசியல் மற்றும் சினிமா ஜாம்பவான்களின் புகலிடமாக இருந்து வருகிறது.
முதல்வர் விஜய் அங்கு குடிபெயர்வதன் மூலம், அவர் பின்வரும் முக்கியப் பிரபலங்களின் அண்டை வீட்டார் ஆகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: பல ஆண்டுகளாக போயஸ் கார்டனின் அடையாளமாகத் திகழும் இவரது இல்லம், முதல்வர் விஜய்யின் புதிய இல்லத்திற்கு மிக அருகிலேயே உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா (வேதா இல்லம்): தமிழக அரசியலின் இரும்புப் பெண் வாழ்ந்த இந்த இல்லம், ஒரு வரலாற்றுச் சின்னமாக அப்பகுதியில் அமைந்துள்ளது.
நடிகர் தனுஷ்: சமீபத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்ட தனது புதிய இல்லத்தில் தனுஷ் வசித்து வருகிறார்.
சசிகலா: போயஸ் கார்டன் பகுதியில் இவருக்குச் சொந்தமான புதிய இல்லம் அமைந்துள்ளது.
நயன்தாராவும் போயஸ் தோட்டத்தில் வீடு வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
தொழிலதிபர்கள் , அதிகாரிகள்: இப்பகுதியில் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களின் சி.இ.ஓக்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் வசித்து வருகின்றனர்.
புதிய இல்லத்தின் சிறப்பம்சங்கள்
விஜய் குடியேறவிருக்கும் புதிய பங்களா வெறும் இல்லமாக மட்டுமல்லாமல், ஒரு முகாம் அலுவலகமாகவும் (Camp Office) செயல்பட உள்ளது.
அமைச்சரவை அரங்கம்: அவசர காலங்களில் அமைச்சர்களுடன் ஆலோசிக்கத் தனி அரங்கம்.
ஊடகச் சந்திப்பு மையம்: செய்தியாளர்களைச் சந்திக்கப் பிரத்யேக வசதிகள்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்: மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையம், சிசிடிவி கட்டுப்பாட்டு அறை மற்றும் சிறப்பு அதிரடிப்படை (Security Details) தங்கும் வசதிகள்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகத் தமிழக அரசியலைத் தீர்மானித்த போயஸ் கார்டன், 'வேதா இல்லம்' காலத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு முதலமைச்சரின் வருகையால் அதிகார மையமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் போகிறது. ஜூன் மாதத்திற்குள் இந்த இல்ல மாற்றம் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications