Fact Check: என்னது எடப்பாடி பழனிசாமி அயோத்திக்கு போனாரா? பரவும் போட்டோ.. எங்கே இருக்கிறார் ஈபிஎஸ்?
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத் தன்மை குறித்து பார்க்கலாம்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. குழந்தை ராமர் சிலை பிராண பிரதிஷ்டை விழா பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்றது. ராமர் கோவிலில் நடைபெற்ற பிராண பிரதிஷ்டை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், துறவிகள், திரையுலக பிரபலங்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அணில் அம்பானி, சுனில் பாரதி மிட்டல், நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், விவேக் ஓபராய், தனுஷ், கங்கனா ரனாவத், ஹேமமாலினி, மாதுரி தீக்ஷித், ரன்பீர் கபூர், ஆலியா பட், சிரஞ்சீவி, ராம் சரண், அனுபம் கெர், பாடகர் சோனு நிகம், விளையாட்டு வீரர்களான சச்சின் டெண்டுல்கர், மிதாலி ராஜ், சாய்னா நேவால், அணில் கும்ப்ளே உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் அயோத்தி கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்நிலையில் தான், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அயோத்தி ராமர் கோவிலுக்குச் சென்றதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. கால் வலி இருப்பதாகவும், வாய்ப்பிருந்தால் அயோத்தி செல்வேன் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில் முதல் ஆளாக எடப்பாடி பழனிசாமி அயோத்தி சென்றுள்ளதாக திமுக ஆதரவாளர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

ஆனால், இந்தப் புகைப்படம், போலியாக சித்தரிக்கப்பட்டது எனத் தெரியவந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அயோத்தியில் இருந்த படம் வெளியாகியிருந்த நிலையில், அந்தப் புகைப்படத்தில் இருந்து, ரஜினியை நீக்கிவிட்டு அந்த இடத்தில் எடப்பாடி பழனிசாமி படத்தை வைத்து போட்டோஷாப் செய்யப்பட்ட படம் எனத் தெரியவந்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் தரிசனம் மேற்கொண்டுள்ளார். ஏராளமான அய்யா வழி பக்தர்களுடன் சேர்ந்து, எடப்பாடி பழனிசாமி சட்டையை கழற்றிக்கொண்டு, உருமா கட்டி, தரிசனம் மேற்கொண்டார்.
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் இந்த ஆண்டுக்கான தைத் திருவிழா கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. 4ஆம் நாள் தை திருவிழாவான இன்று அய்யா பூஞ்சப்பர வாகனத்தில் வலம் வரும் நிகழ்வில் பங்கேற்று, தரிசனம் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் தான் அவர் அயோத்தி சென்றதாக பொய்யாக சித்தரிக்கப்பட்ட படம் பரவி வருகிறது.

Fact Check
வெளியான செய்தி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்று அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றதாக புகைப்படம் பரவியது.
முடிவு
எடப்பாடி பழனிசாமி அயோத்தியில் இருப்பதாக பரவிய படம் போட்டோஷாப்பில் உருவாக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி இன்று குமரி மாவட்டம் சுவாமிதோப்பு வைகுண்ட பதியில் தரிசனம் செய்தார்.












Click it and Unblock the Notifications