Fact Check: கோவை நகை பட்டறையில் துப்பாக்கி முனையில் கொள்ளையா? பரவும் தவறான தகவல்
கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், கோவை சொக்கம்புதூரில் நகை பட்டறையில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது என்றும் சோஷியல் மீடியாவில் வீடியோ ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இது உண்மையில்லை என்று தற்போது தெரிய வந்திருக்கிறது.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை என்ற அளவுக்கு கொலை நகரமாக மாறியுள்ளது. திமுக ஆட்சியில் யாருக்கும், எங்கும் பாதுகாப்பு இல்லை. குறிப்பாக, அரசியல் கட்சியினர் தொடர்ந்து கொலை செய்யப்படும் நிலையில் இதனைத் தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. மக்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது" என்று விமர்சித்திருக்கிறார்.

அதேபோல பாஜகவும் இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறது. இப்படி இருக்கையில், கோவையில் உள்ள நகைப்பட்டறை ஒன்றில், துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக சோஷியல் மீடியாக்களில் வீடியோ வேகமாக பரவியது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் தமிழக அரசை விமர்சித்திருந்தனர். இப்படி இருக்கையில் இது குறித்த உண்மை தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது இந்த கொள்ளை சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது கிடையாது. மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் நடந்திருக்கிறது. கடந்த 28ம் தேதி இங்குள்ள விஷ்ணு மந்திர் சவுக் எனும் பகுதியில் கொள்ளை சம்பவம் நடந்திருக்கிறது. இந்த பகுதியில் பெரும்பாலான நகை கடைகள் செயல்பட்டு வருகின்றன. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகளுக்கு விடுமுறை விடப்படும். ஆனால், கடைகளை ஒட்டியுள்ள நகை பட்டறைகளில் வேலைகள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடக்கும்.
இப்படி இருக்கையில் முகமுடி அணிந்த கொள்ளையர்கள் சிலர் கடைக்குள் புகுந்து கொள்ளையடித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியானது. இதை வடமாநிலத்தை சேர்ந்த ஊடகங்களும் செய்திகளாக வெளியிட்டிருந்தன. இதைத்தான் தமிழ்நாட்டில் நடந்த சம்பவமாக சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

Fact Check
வெளியான செய்தி
கோவையில் நகை பட்டறையில் கொள்ளை நடந்திருப்பதாக சோஷியல் மீடியாவில் வீடியோ வெளியாகியுள்ளது.
முடிவு
கொள்ளை நடந்தது மகாராஷ்டிரா மாநிலத்தில் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications