Fact Check: அதிமுக சீனியர் செங்கோட்டையன்.. பாஜகவில் சேர முடிவெடுத்துள்ளாரா? வதந்தி!
சென்னை: அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே மோதல் உள்ளது எனவும், பாஜகவில் மாநில தலைவர் தந்தால் பாஜகவில் இணைவதாகவும் செங்கோட்டையன் கூறியதாக தகவல்கள் பரவி வருகிறது. இதன் உண்மை என்ன? என்று பார்ப்போம்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் செங்கோட்டையன். முன்னாள் அமைச்சரான இவர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார்.

இவர் தொடக்கம் முதலே அதிமுகவில் செயல்பட்டு வருகிறார். அதிமுகவில் பல அணிகள் உருவானாலும் கூட அவர் தொடர்ந்து அதிமுகவிலேயே நீடித்து வருகிறார். குறிப்பாக கோபிச்செட்டிபாளையம் சட்டசபை தொகுதியில் 1980, 1984, 1989, 1991 முதல் 4 முறை எம்எல்ஏவாக இருந்தார். அதன்பிறகு மீண்டும் 2006, 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் 8 வது முறையாக அதிமுக எம்எல்ஏவாக தொடர்ந்து வருகிறார்.
ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தலைவராக இருந்தார். போக்குவரத்து துறை உள்பட பிற துறைகளின் அமைச்சராக பொறுப்பு வகித்தார். அதன்பிறகு ஜெயலலிதாவில் விலக்கி வைக்கப்பட்டார். ஆனாலும் கூட அவர் அதிமுகவை விட்டு வெளியேறவில்லை. தொடர்ந்து அதிமுகவிலேயே தன்னை நிலைநிறுத்தி வருகிறார். அதோடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு முதல்வர் பதவிக்கு இவரது பெயர் தான் முன்னிலையில் இருந்தது.
அதன்பிறகு தான் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக மாறினார். செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமியுடன் சேர்ந்து செயல்பட்டு வுருகிறார். மேலும் இருவரும் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் தான் அதிமுகவின் கொங்கு மண்டலத்தில் பிரச்சனை உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி உடனான மோதல் காரணமாக செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைய உள்ளார். பாஜக மாநில தலைவர் பதவி கொடுத்தால் கட்சியில் இணைவதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனை நாளிதழில் செய்தியாக வெளியிட்டு இருந்தது.
இது அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் பெரிய அளவில் பேசும்பொருளாக மாறியது. இதையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த செங்கோட்டையன், பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான செய்தியை முற்றிலுமாக மறுத்தார். மேலும் செய்தி வெளியிட்ட நாளிதழுக்கு கண்டனம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக செங்கோட்டையன், ‛‛ 45 ஆண்டு காலமாக அரசியலில் எந்த ஒரு அரசியல் கட்சினரும் சிறு குற்றம்கூட சொல்லமுடியாத அளவிற்கு எனது அரசியல் பயணம் நேர்மையாக தொடர்ந்து வருகிறது.ஆனால் என்னைப்பற்றி அவதூறாகவும் சற்றும் உண்மையில்லாத வகையில் செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த செய்தி குறித்து பத்திரிகையாளர்கள் என்னிடம் கேட்டு தெளிவுப்படுத்தி இருக்க வேண்டும். இப்படி செய்தி வெளியிடுவது பத்திரிகை தர்மம் இல்லை. உணமைக்கு புறம்பான செய்தியை வெளிட்டதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த செய்தியை நான் கண்டிக்கிறேன்'' என தெரிவித்தார்.
மேலும் அந்த வீடியோ அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு தான் பாஜகவில் இணைவதாக வெளியான செய்தியை மீண்டும் பொய் என தெரிவித்தார். அதேபோல் செங்கோட்டையன் பேட்டியளித்த வீடியோவை அதிமுகவின் ஐடி விங்க் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, ‛‛தன் மீது அவதூறு செய்தி வெளியிட்ட தனியார் நாளிதழுக்கு கழக அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கண்டன் தெரிவித்தார்'' என கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பாஜகவில் இணைய இருப்பதாக வெளியான தகவல் வதந்தி என்பது உறுதியாகி உள்ளது.
உண்மை கண்டறியும் அமைப்பான சக்தி கலக்டிவ்-வின் ஒரு அங்கம் newschecker என்பது குறிப்பிடத்தக்கது.

Fact Check
வெளியான செய்தி
மாநில தலைவர் பதவி தந்தால் பாஜகவில் இணைய செங்கோட்டையன் முடிவு செய்துள்ளார்
முடிவு
பாஜகவில் தான் இணைவதாக வெளியான செய்தியை செங்கோட்டையன் முற்றிலுமாக மறுத்தார். செய்தி வெளியிட்ட பத்திரிகையை கண்டித்தார்.












Click it and Unblock the Notifications