சீனாவிடம் 11 லட்சம் கோடி இழப்பீடு கேட்டு பில் அனுப்பியதா ஜெர்மனி.. உண்மை என்ன
பெர்லின்: கொரோனா வைரஸ் நோயை உலகிற்கு சீனா பரப்பிவிட்டதாக உலக நாடுகள் எல்லாம் சீனா மீது கடும் கோபத்தில் உள்ளன.இந்நிலையில் ஜெர்மனி மற்ற நாடுகளை காட்டிலும் ஒரு படிமேலே போய் கொரோனாவால் ஏற்பட்ட இழப்புக்காக 11 லட்சம் கோடி தர வேண்டும் என்று சீனாவுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அது முற்றிலும் பொய்யான செய்தி என்பது தெரியவந்துள்ளது.
உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோன வைரஸ் தொற்று நோயால் இதுவரை 25லட்சத்துக்கும் அதிமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1.77 லட்சம் மக்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரஸ் முதன் முதலாக சீனாவில் இருந்து தான் உலகிற்கு பரவியது. உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் தன்னாட்சி பிரதேசங்களை சுக்குநூறாக சிதைத்து வருகிறது.
பொருளாதாரம் பேரழிவு
உலகப்பொருளாதாரமே மொத்தமாக முடங்கி பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு எல்லாம் சீனா தான் காரணம் என்று உலக நாடுகள் கடும் கொந்தளிப்பில் உள்ளன. சீனா மட்டும் ஆரம்ப காலத்திலேயே தடுத்து நோயை பிற நாடுகளுக்கு பரவாமல் தடுத்திருந்தால் இந்நேரம் நோயால் யாரும் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள் என்பது உலக நாடுகளின் எண்ணமாக உள்ளது.
டிரம்ப் கடும் கோபம்
கொரோனா வைரஸ் தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தான். இந்த நாடுகள் எல்லாமே சீனாவின் மீது கடும் கோபத்தில் உள்ளன. நிலைமை சரியான பின்னர் நிச்சயம் சீனாவுக்கு இந்த நாடுகள் கடும் பதிலடி கொடுக்க காத்திருக்கின்றன. சீனாவிற்கு உலக நாடுகள் மிகப்பெரிய அளவில் பொருளாதார தடை விதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் ,சீனாவை ஒரு வழி செய்யாமல் விடக்கூடாது என்ற ரீதியில் தினமும் அனல் கக்கி வருகிறார்.
இழப்பீடு ஜெர்மனி
இந்நிலையில் ஜெர்மனி மற்ற நாடுகளுக்கு எல்லாம் ஒரு படி மேலேபோய், கொரோனா இழப்பீடு என்ற பெயரில் ஒரு பட்டியலை தயாரித்து தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு இழப்பீடு தருமாறு பெரிய பில் ஒன்றை சீனாவுக்கு அனுப்பியதாக செய்திகள் வெளியாகின.. சீனா எங்கள் நாட்டுக்கு கடன் பட்டுள்ளது என்ற தலைப்பில் ஜெர்மனி பத்திரிக்கை வெளியிட்டதாக ஒரு போலியான செய்தில் சுற்றுலா வருவாய் இழப்புக்காக ரூ.2.2லட்சம் கோடி, திரைப்பட துறை வருவாய் இழப்புக்காக ரூ.61 ஆயிரம் கோடி, ஜெர்மனி விமான நிறுவனமான லுப்தான்சாவுக்கு ஒரு மணி நேரத்திற்கு 8 கோடி தர வேண்டும்.
சீனா பதிலடி
ஜெர்மனியில் சிறுகுறு தொழில்கள் பாதிப்புக்காக 4.2லட்சம் கோடி தர வேண்டும். ஜெர்மனியின் உள்நாட்டு உற்பத்தி 4.2 சதவீதமா குறைந்துள்ளது. எனவே நாட்டின் ஒவ்வாரு தனிநபருக்கும் 1.3லட்சம் தர வேண்டி உள்ளது எனவே ஒட்டுமொத்தமாக 11 லட்சம் கோடி ரூபாய் சீனா இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அத்துடன் ஜெர்மனி அதிபர் மார்க்கெல் படமும் செய்தியில் இருந்தது. ஆனால் அப்படி சீனாவுக்கு எந்த நோட்டீசும் ஜெர்மனி அனுப்பவில்லை என்பது தெரியவந்துள்ளது. இப்படி சமூக வலைதளங்களில் வரும் போலி செய்திகளை நம்ப வேண்டாம். இச்சம்பவத்திற்கு பதில் அளித்துள்ள சீனா, எங்கள் நாட்டின் மீது வெறுப்பின் காரணமாக இப்படி செய்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளது.