சென்னை வாசிகளே உஷார்! டிராபிக் விதிமீறினால் சிக்னல் போர்டில் உங்கள் முகம் தெரியுமா? உண்மை இதுதான்!
சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் நபர்களின் போட்டோ டிராபிக் சிக்னலில் உள்ள திரையில் தெரியும் வகையில் போலீசார் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது. இது உண்மையா? பின்னணி என்ன? என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஆண்டுதோறும் வாகனங்களின் எண்ணிக்கையை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல நகரங்களில் மக்கள்தொகையை விட வாகனங்களின் எண்ணிக்கை இன்னும் சில ஆண்டுகளில் உயர்ந்து விடும் நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் தான் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த அபராதத்தொகை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் போக்குவரத்து விதிகளை மீறும் நபர்களை கண்டுபிடிக்க தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தான் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அதாவது சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் நபர்களின் முகம் டிராபிக் சிக்னல் கம்பங்களில் உள்ள திரையில் தெரியும். அதோடு அவர் எந்த வகையான போக்குவரத்து விதியை மீறினார் என்ற விபரமும் அதில் குறிப்பிடப்படும். இதனால் சென்னையில் வாகன ஓட்டிகள் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும் என வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
இதனை சமூக வலைதளங்களில் பகிரும் நபர்கள், ‛‛சென்னையில் போக்குவரத்து விதியை மீறினால் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் அந்த அபராதத்துக்கான விதிமீறல் விபரங்களுடன் உங்களின் முகம் டிராபிக் சிக்னலில் உள்ள போர்ட்டில் தெரியும்'' என பகிர்ந்து வருகின்றனர். இது பலருக்கும் ஷாக்கை ஏற்படுத்தியது.
இதற்கிடையே சிலர் இதுபற்றி சந்தேகம் கிளப்பி இருந்தனர். இதுபற்றி நாம் விசாரித்தோம். அப்போது சென்னை மாநகர போலீஸ் தரப்பில் இதுபோன்ற எந்த திட்டமும் இல்லை என்பது தெரியவந்தது. அப்படியெனில் இந்த வீடியோ எப்படி இணையதளங்களில் பரவுகிறது? என நீங்கள் கேட்பது புரிகிறது
இந்த கேள்விக்கு விடை என்னவெனில் சென்னை சேர்ந்த ஒருவர் சிஜிஐ தொழில்நுட்பத்தில் இந்த வீடியோவை உருவாக்கி உள்ளதும், இந்த வீடியோ 2022 முதல் இணயைதளங்களில் வெவ்வேறு நகரங்களின் பெயர்களில் பகிரப்பட்டு வருவதும் தெரியவந்தது.

Fact Check
வெளியான செய்தி
சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் நபர்களின் போட்டோ டிராபிக் சிக்னலில் தெரியும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை போலீசார் கையில் எடுத்துள்ளனர்
முடிவு
இப்படி எந்த திட்டத்தையும் சென்னை போக்குவரத்து போலீசார் அறிமுகம் செய்யவில்லை. இணையதளங்களில் பரவும் வீடியோ சிஜிஐ தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட வீடியோ. இது கடந்த 2022 முதல் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications