குல தெய்வ வழிபாட்டை தடை செய்யவேண்டும் என்று ஆளுநர் ரவி கூறியதாக பரவும் போலி தகவல்
சென்னை: கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ள நிலையில், தமிழர்களை சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குல தெய்வங்கள்தான்.. சாராய சாவுகளுக்கு அடிப்படை காரணமான குல தெய்வ, கிராம கோவில் திருவிழாக்களை தடை செய்ய வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கூறியதாக ஒரு செய்தி பரவியது. தற்போது இந்த செய்தி உண்மையில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 58 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. விஷ சாராய மரணங்கள் மொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளித்த தமிழக அரசு, கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிட்டு இருக்கிறது.

மேலும் விசாரணை ஆணையம் ஒன்றையும் அமைத்துள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவத்தில் ஆளும் கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் சிபிஐ விசாரணையும் கோரி வருகின்றன. தமிழக பாஜக சார்பில் நேற்று முன் தினம் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து சிபிஐ விசாரணை கோரியுள்ளன.
இதனிடையேதான், தமிழக ஆளுநர் குல தெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும் எனக் கூறியதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது. அந்த செய்தியில், தமிழர்களை சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குல தெய்வங்கள்தான்.. சாராய சாவுகளுக்கு அடிப்படை காரணமான குல தெய்வ , கிராம கோவில் திருவிழாக்களை தடை செய்ய வேண்டும் என்று கூறியதாக ஒரு செய்தி பரவியது.
இந்த நிலையில் இந்த செய்தி முற்றிலும் போலியானது என்று உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது. ஆளுநர் ஆர்.என். ரவி இதுபோன்று எங்கேயும் பேசவில்லை என்பது கவனிக்கத்தக்கது. முன்னதாக கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருந்த ஆர்.என். ரவி கூறியதாவது:- "கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பல உயிர்கள் பலியான தகவலை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
மேலும் பலர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் குணம் அடையவும் வேண்டிக் கொள்கிறேன். நமது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவ்வப்போது, கள்ளச்சாராயம் குடிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன.
அவை சட்டவிரோத மதுபான தயாரிப்பு மற்றும் நுகர்வு ஆகியவற்றைத் தடுப்பதில் தொடரும் குறைபாடுகளை பிரதிபலிக்கின்றன. இது தீவிர கவலைக்குரிய விஷயமாகும்" என்று கூறியிருந்தார்.

Fact Check
வெளியான செய்தி
தமிழர்களை சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குல தெய்வங்கள்தான் என்றும், இதனால் குல தெய்வ வழிபாட்டை தடை செய்யவேண்டும் என்றும் ஆளுநர் ரவி கூறியதாக தகவல் பரவியது.
முடிவு
ஆளுநர் ஆர்.என். ரவி இது போன்று எங்கேயும் பேசவில்லை அவர் கள்ளக்குறிச்சி சம்பவம் அறிந்து அதிர்ச்சியடைந்ததாக தான் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications