Fact Check: உயிரிழந்த அக்னி வீரர் குடும்பத்திற்கு ரூ.98 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டதா? உண்மை இதுதான்
டெல்லி: உயிரிழந்த அக்னிவீரருக்கு ரூ.98 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார். ஆனால் இதனை காங்கிரஸ் கட்சி மறுத்தது. இந்நிலையில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் 18வது நாடாளுமன்றம் கடந்த 27ம் தேதி முதல் முறையாக கூடியது. இதில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். இந்த உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து. அப்போது எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

குறிப்பாக அக்னிபாத் திட்டம் குறித்து ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். நாட்டை காக்கும் பணியில் உயிரிழக்கும் அக்னி வீரர்களின் குடுபத்திற்கு உரிய நிவாரணம் கிடைப்பதில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்திருந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உயிரிழந்த அக்னி வீரரின் குடும்பத்திற்கு ரூ.98 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது என்று பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த அக்னி வீரரின் குடும்பத்தினர், தன்னுடைய மகன் இறந்து 6 மாதம் ஆன பின்னரும் கூட மத்திய அரசிடமிருந்தோ, ராணுவத்திடமிருந்து இதுவரை தங்களுக்கு எந்த இழப்பீட்டு தொகையையும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
லூதியானாவை சேர்ந்த அக்னி வீரர் அஜய் சிங் கடந்த ஜனவரி மாதம் ஜம்மு காஷ்மீரில் ரஜோரி பகுதியில் ஏற்பட்ட கண்ணி வெடி தாக்குதலில் உயிரிழந்தார். இதனையடுத்து கடந்த மே மாதம் பாரத் ஜடோ யாத்திரையின்போது அஜய் சிங்கின் குடும்பத்தினரை ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று உள்ளூர் காங்கிரஸ் தலைவர் அஜய் குடும்பத்தை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போதுதான் மத்திய அரசு மற்றும் ராணுவத்திடமிருந்து இன்னும் கருணை தொகை கிடைக்கவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
அஜய் சிங் குடும்பத்தினர் இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளனர். அஜய் சிங்கின் தந்தை சரண்ஜித் சிங் கலா கூறுகையில்,
“இன்சூரன்ஸ் காப்பீட்டு தொகையிலிருந்து நாங்கள் ரூ.98 லட்சம் பெற்றுள்ளோம். இதில் ராணுவத்திடமிருந்து ரூ. 48 லட்சத்திற்கான காசோலையும் அடங்கும், இது காப்பீட்டுத் தொகையாக இருக்கும், இழப்பீடு அல்ல. மேலும் ரூ.50 லட்சம் தனியார் வங்கியில் இருந்து பெறப்பட்டுள்ளது. அதுவும் எனது மகன் வைத்திருந்த காப்பீட்டு பாலிசியின் தொகைதான்.
பஞ்சாப் அரசு எங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது. மத்திய அரசு எங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கியதாக ராஜ்நாத் சிங் கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இதுவரை மத்திய அரசிடமிருந்தோ அல்லது ராணுவத்திடமிருந்தோ எங்களுக்கு எந்தவித இழப்பீடும் கிடைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
அதேபோல இந்தியா ராணுவம் இது குறித்து விளக்கமளித்திருந்தது. அதில், “பணியின் போது உயிரிழந்த அக்னிவீரர் அஜய் குமாரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என சமூக ஊடகங்களில் சில பதிவுகள் வெளியாகியுள்ளன.
அஜய் குமார் செய்த உன்னத தியாகத்திற்கு இந்திய ராணுவம் தலை வணங்குகிறது. இறுதிச் சடங்குகள் முழு ராணுவ மரியாதையுடன் நடைபெற்றது. மொத்த நிலுவைத் தொகையில், ரூ.98.39 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 'அக்னிவீர்' திட்டத்தின் விதிகளின்படி, ஏறத்தாழ ரூ.67 லட்சம் மதிப்பிலான உதவித்தொகை உள்ளிட்டவை, காவல்துறை சரிபார்ப்புக்குப் பிறகு விரைவில் வழங்கப்படும். மொத்தமாக அவரின் குடும்பத்திற்கு ரூ. 1.65 கோடி வழங்கப்படும்” என்று கூறியிருந்தது.
இதில் இழப்பீடு குறித்து ராணுவம் எதையும் குறிப்பிடவில்லை. எனவே, இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை என்பது தெரிய வருகிறது.

Fact Check
வெளியான செய்தி
பணியின்போது உயிரிழந்த அக்னி வீரர் அஜய் சிங்கின் குடும்பத்தினருக்கு ரூ.98 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டிருப்பதாக ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்.
முடிவு
அஜய் சிங் குடும்பத்திற்கு காப்பீட்டு தொகை மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாக அவரது தந்தை கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications