Fact Check: இந்து சமய அறநிலையத்துறை வருமானத்தில் ஹஜ் மானியம் கொடுக்கிறதா தமிழக அரசு? உண்மை என்ன?
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை வருமானத்தை தமிழக அரசு ஹஜ் மானியத்துக்கு செலவு செய்வதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளி, போலியான தகவலை கொண்டது என உரிமை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது.
உள்நோக்கத்துடன் பொய்யான செய்திகளை பரப்பும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. தமிழக அரசின் திட்டங்கள் தொடர்பாகவும் அப்படி ஏராளமான போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன. இதனை பலரும் உண்மை என நம்புவதும் நடக்கிறது.

பரவி வரும் தகவல்: இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை வருமானத்தை தமிழக அரசு ஹஜ் மானியத்துக்கு செலவு செய்வதாகவும், தமிழ்நாடு வக்பு வாரியம் ஒரு தனியார் அமைப்பு என்றும் பேசி ஒருவர் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்தப் பதிவு ஏராளமானோரால் பகிரப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்தக் காணொளி, போலியான தகவலை கொண்டது என தமிழ்நாடு அரசின் உரிமை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை வருமானத்தில் ஹஜ் மானியம் அளிப்பதாக பரப்பப்படுவது வதந்தி என தமிழ்நாடு அரசின் உரிமை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது.
உண்மை என்ன?: தமிழ்நாடு வக்ப் வாரியம், தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறையின் கீழ் வரும் அரசு அமைப்பு. வக்ப் சட்டம் 1995ன் படி இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் பயனாளிகளாக இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் இருக்கலாம் என வக்ப் வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்கள் மூலம் கிடைக்கும் வருவாயை அரசு எடுத்துக் கொள்வதில்லை, கோயில்கள் மூலம் கிடைக்கும் வருவாய் கோவில்களுக்கே செலவிடப்படுகிறது. கோயில்களின் வருமானத்தை ஹஜ் மானியத்துக்கு வழங்கப்படுவதாகக் கூறுவது முற்றிலும் பொய்யானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
இந்து சமய அறநிலையத்துறை வருமானத்தை தமிழக அரசு ஹஜ் மானியத்துக்கு செலவு செய்வதாக வீடியோ பரவியது.
முடிவு
இந்து கோயில்களின் வருமானம் ஹஜ் மானியத்துக்கு வழங்கப்படுவதாகக் கூறுவது முற்றிலும் பொய்யானது என தமிழ்நாடு அரசின் உரிமை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications