மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது குறைக்கப்படுகிறதா.. அமைச்சர் விளக்கம்
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை குறைப்பது தொடர்பாக எந்த திட்டமும் இல்லை என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக, பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துள்ள நிலையில், இது போல ஒரு முடிவை மத்திய அரசு எடுக்கக் கூடும் என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய நிலையில், அமைச்சர் ஜிதேந்திர சிங், இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போது மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உள்ளது. ஆனால் இதை 50 ஆக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் கூறுகையில், அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை குறைப்பதற்கான எந்தத் திட்டமும் இல்லை.
அதுபற்றி விவாதிக்கப்படவும் இல்லை.

மோசமான ஒரு பாதிப்பை உலகம் சந்தித்து கொண்டிருக்கக்கூடிய நிலையில், சில விஷமிகள் இவ்வாறு வதந்திகளை பரப்பி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். மத்திய அரசு தொடர்ந்து, அரசு ஊழியர்களின் நலனை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறது.
இந்த பிரச்சனை ஆரம்பிக்கும் முன்பே ஊழியர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு மிகுந்த கவனம் செலுத்தியது. மிகவும் அத்தியாவசியமாக தேவைப் படும் பணியாளர்கள் மட்டும் அலுவலகம் வந்தால் போதும் என்று நாங்கள் அறிவுறுத்தி உள்ளோம். மார்ச் 31ஆம் தேதி அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியத் தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications