ரூ.2 லட்சத்தை தாண்டும் தங்கம்.. நிலைமை கைமீறும்? 'கோல்ட் குரு' சாந்தகுமார் உடைக்கும் ரகசியங்கள்!
சென்னை: நகைப்பிரியர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ் என்னவென்றால், 2026-ம் ஆண்டு இறுதியில் தங்கம் விலை ஒரு சவரன் ₹1.35 லட்சம் முதல் ₹1.40 லட்சம் வரை உயர வாய்ப்புள்ளதாக பிரபல நிபுணர் கோல்டு குரு சாந்தகுமார் கணித்துள்ளார்.
தங்கம்... இது இந்தியக் குடும்பங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் கௌரவம். ஆனால், இன்றைய சூழலில் நகைக்கடை வாசலில் நின்றாலே தங்கம் வாங்குவதா அல்லது வேண்டாமா என்று யோசிக்க வைக்கிறது அதன் அதிரடி விலை உயர்வு. நேற்று ஒன்இந்தியா (Oneindia) ஊடகத்திற்கு 'கோல்ட் குரு' சாந்தகுமார் அளித்த நேர்காணலில், தங்கத்தின் எதிர்கால விலை மற்றும் அதன் பின்னால் இருக்கும் உலக அரசியல் குறித்து அதிரடியான பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

விலையைத் தீர்மானிப்பது யார்?
நம்மூரில் தங்கம் விலையை யாரோ ஒரு தனிநபர் அல்லது ஒரு கடை மட்டும் முடிவு செய்வது கிடையாது. இந்தியாவில் தங்கம் விலையை இரண்டு முக்கிய சங்கங்கள் நிர்ணயிக்கின்றன. வட இந்தியாவில் 'இப்ஜா' (IBJA) அமைப்பும், தென்னிந்தியாவில் 'மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் அண்ட் டைமண்ட் ட்ரேடர்ஸ் அசோசியேஷன்' (MJDA) அமைப்பும் தான் அன்றாட விலையை அறிவிக்கின்றன.
ஆனால், இவர்களுக்கும் அடிப்படை லண்டனில் உள்ள 'எல்.பி.எம்.ஏ' (LBMA) எனப்படும் சர்வதேச அமைப்புதான். அங்குள்ள 100-க்கும் மேற்பட்ட ஜாம்பவான்கள் நிர்ணயிக்கும் டாலர் மதிப்பை வைத்து, நம் ஊர் வரி மற்றும் ஜி.எஸ்.டி-யைக் கூட்டித்தான் விலை கணக்கிடப்படுகிறது.
2026-ல் தங்கம் ஒரு லட்சத்தைத் தாண்டுமா?
நகைப்பிரியர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ் என்னவென்றால், 2026-ம் ஆண்டு இறுதியில் தங்கம் விலை ஒரு சவரன் ₹1.35 லட்சம் முதல் ₹1.40 லட்சம் வரை உயர வாய்ப்புள்ளதாக சாந்தகுமார் கணித்துள்ளார். சர்வதேச வங்கிகளான ஜே.பி.மார்கன் மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் ஆகியவற்றின் கணிப்புகளும் இதையே வழிமொழிகின்றன.
போர் வந்தால் விலை குறையுமா?
ஈரான் - இஸ்ரேல் பதற்றம் போன்ற உலகப்போருக்கான சூழல்கள் நிலவும்போது, கச்சா எண்ணெய் விலை ராக்கெட் வேகத்தில் உயரும். "ஆயில் விலை உயர்ந்தால் தங்கம் விலை குறையும்" என்பது ஒரு பொதுவான கணக்கு. ஆனால், அதுவும் 6% முதல் 7% வரை மட்டுமே குறைய வாய்ப்புள்ளதே தவிர, மக்கள் எதிர்பார்ப்பது போல ஒரு கிராம் தங்கம் 10,000 ரூபாய்க்கு எல்லாம் கீழே போகாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் சாந்தகுமார்.
ஏன் இவ்வளவு ஏறுமுகம்?
டாலர் பலவீனம்: அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்தால் டாலர் மதிப்பு குறையும், அப்போது தங்கம் பலம் பெற்று விலை ஏறும்.
மத்திய வங்கிகளின் கொள்முதல்: இந்தியா, சீனா போன்ற நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தைத் தங்களது கையிருப்பில் அதிகம் சேமித்து வருகின்றன. டிமாண்ட் அதிகமாகும்போது விலை தானாகவே உயருகிறது என்று கணித்து உள்ளார்.
தங்கம் விலை நாளைக்கு ஒருவேளைக் குறையலாம். ஆனால், நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் தங்கம் உங்களை ஒருபோதும் கைவிடாது. "இன்னைக்கு யோசிச்சு தள்ளிப்போடுற தங்கம், நாளைக்கு எட்டாக்கனியா மாறிடும்" என்பதுதான் கோல்ட் குரு சாந்தகுமார் தரும் தாரக மந்திரம்!












Click it and Unblock the Notifications