5% சரிவு.. சில நாட்களில் ரூ.5,448 சரிந்த தங்கம் விலை.. எதிர்பார்க்கவே இல்லையே.. வல்லுநர்கள் வார்னிங்
சென்னை: பங்குச் சந்தையில் ஏற்பட்ட முன்னேற்றம், சர்வதேச அளவில் ஏற்பட்ட போர் அபாயங்கள் குறைந்தது, காரணமாக, முதலீட்டாளர்கள் மீண்டும் டாலரை நோக்கி செல்ல தொடங்கி உள்ளனர். தங்கம்தான் ஒரே பாதுகாப்பான முதலீடு என்ற எண்ணம் இனியும் இல்லாத காரணத்தால் தங்கத்தின் விலை குறைய தொடங்கி உள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 5,448 குறைந்து ரூ. 95,630 ஆகக் காணப்பட்டது. சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தின.
தங்கம் விலை சரிவுக்கான காரணங்கள் மற்றும் போக்குகள்
பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவும் காலகட்டத்தில், முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுகின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான்-இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்ததாக அறிவித்ததைத் தொடர்ந்து, தங்கத்தின் விலை குறையத் தொடங்கியது. கடந்த மாதம் போர் காரணமாக கச்சா எண்ணெய் சந்தை மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளின் விளைவாக தங்கம் விலை உயர்ந்தது. ஆனால் இனி அப்படி இல்லை.
MCX சந்தையில் தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் கடந்த 2 வாரங்களில் 5% வரை , அதாவது 10 கிராமுக்கு ரூ. 5,448 வரை குறைந்துள்ளது. ஜூன் 16 அன்று, MCX சந்தையில் தங்கத்தின் விலை அதிகபட்சமாக ரூ. 1,01,078 ஐ எட்டியது. அதன் பிறகு, தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. தங்கத்தின் மீதான முதலீடுகள் தற்போது குறைந்து காணப்படுகின்றன.
எல்.கே.பி செக்யூரிட்டீஸின் ஆராய்ச்சி ஆய்வாளர் ஜதின் திரிவேதி கருத்துப்படி, Comex சந்தையில் தங்கம் விலை ரூ.96,000க்கு கீழ் சென்றது. சர்வதேச அளவில் போர்கள் முடிந்துவிட்டன. அதேபோல் வர்த்தக போர் முடியும் சூழல் ஏற்பட்டுவிட்டது. இதனால் தங்கம் மீதான மதிப்பு குறைய தொடங்கிவிட்டது, என்றுள்ளார்.
இந்தியா புல்லியன் மற்றும் நகை வியாபாரிகள் சங்கத்தின் துணைத் தலைவரும், ஆஸ்பெக்ட் குளோபல் வென்ச்சர்ஸின் நிர்வாகத் தலைவருமான அக்ஷா கம்போஜ் தெரிவித்ததாவது: "மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் தணிந்து வருவதும், வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த நம்பிக்கையான சூழலும், பாதுகாப்பான முதலீடுகளுக்கான தேவையை குறைத்துள்ளது. இதனால், தங்கத்தின் விலை வாராந்திர சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் மத்திய வங்கிகளின் தொடர்ச்சியான கொள்முதல் மற்றும் பண்டிகை காலம் நெருங்குவது போன்றவை விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தக்கூடும். ஆனால், உடனடி விலை உயர்வுக்கு வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன".
சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம்
சீனாவுடன் அரிய கனிமங்கள் தொடர்பான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்தியாவுடன் ஒரு பெரிய ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். இதன் மூலம் அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக போர் முடிவிற்கு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவும் தங்கம் விலை குறைய காரணமாக மாறி உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை அன்று சீனாவுடன் அமெரிக்கா ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்தியாவுடன் "மிகப் பெரிய" ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும் சூசகமாக தெரிவித்தார்.
பிக் பியூட்டிஃபுல் பில் நிகழ்வில் உரையாற்றிய டிரம்ப், வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பேசியபோது, " நாங்கள் நேற்று சீனாவுடன் ஒப்பந்தம் செய்தோம். மிகச் சிறந்த ஒப்பந்தங்கள் இதில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அடுத்து இந்தியாவுடன் ஒரு பெரிய ஒப்பந்தம் வரவுள்ளது.. இது மிக முக்கியமானதாக இருக்கும். எங்களின் வர்த்தகம் இதில் புதிய நிலையை அடையும்.
ஆனால் நாங்கள் ஒவ்வொரு நாட்டுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ளப் போவதில்லை. சில நாடுகளுக்கு ஒரு கடிதம் அனுப்பி, மிக்க நன்றி என்று கூறி, 25, 35, 45 சதவீதம் செலுத்த வேண்டும் என்று கூறுவோம். அவர்களிடம் கண்டிப்பாக இருப்போம். அதுதான் சுலபமான வழி. எல்லோரிடமும் எங்களால் இறங்கி செல்ல முடியாது என்று டிரம்ப் கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications