அமெரிக்கா - ஈரான் சண்டையில்.. தங்கத்தின் சட்டை கிழியுது! இது தான் சான்ஸ்.. பட்டுனு வாங்கிப் போடுங்க!
சென்னை: சர்வதேச சந்தையில் வர்த்தகத்தின் தொடக்க நாளான இன்று தங்கத்தின் விலை 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்திருக்கிறது. மத்திய கிழக்கில் அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் மீண்டும் தீவிரமடைந்திருக்கும் நிலையில் உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹோர்மோஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்து இருப்பதன் எதிரொலியாகவும், அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்ததால் தங்கத்தின் விலை சரிந்து இருப்பதாக சொல்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
வர்த்தகத்தின் தொடக்க நாளான இன்று ஆசிய வர்த்தகம் தொடங்கிய போது ஸ்பாட் தங்கத்தின் விலை 1.5 சதவீதம் சரிந்து ஒரு அவுன்ஸ் 4059.11 அமெரிக்க டாலராக இருந்தது. அதேபோல ஆகஸ்ட் மாத டெலிவரிக்கான அமெரிக்க தங்க பியூச்சர்ஸ் விலையும் 1.1 சதவீதம் குறைந்து ஒரு அவுன்ஸ் 4067.10 டாலராக சரிந்தது.

தங்கத்தின் இந்த விலை சரிவுக்கு முக்கிய காரணமாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் போர் வெடித்துள்ளது தான் காரணமாக சொல்லப்படுகிறது. இரு நாடுகளும் பதிலுக்கு பதிலாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தீவரப்படுத்தியுள்ளன.
தங்கம் விலை
இந்த நிலையில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் உலகின் மிக முக்கியமான எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதையான ஹோர்மோஸ் நீரிணை மீண்டும் மூடப்படுவதாக ஈரான் அறிவித்திருப்பது உலக சந்தைகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழல் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் சுமார் நான்கு சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
அமெரிக்க டாலர்
அதே நேரத்தில் அமெரிக்க டாலர் மதிப்பும் அமெரிக்க அரசு பத்திரங்களின் வருமானமும் அதிகரித்திருக்கிறது. இதனால் ஆசிய பங்குச் சந்தைகளில் பெரும்பாலான குறியீடுகள் சரிவை சந்தித்தன. இது தொடர்பாக பேசியுள்ள சந்தை ஆய்வாளர்கள்," மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிக்கும் ஒவ்வொரு முறையும் தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்பட்டாலும், எண்ணெய் விலை வேகமாக உயர்வதால் பணவீக்க அழுத்தம் அதிகரிக்கும் என்ற அச்சம் இயல்பாகவே சந்தையில் உருவாகிறது.
அமெரிக்க மத்திய வங்கி
இதனால் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தும் வாய்ப்பும் அதிகமாகிறது. வட்டி விகிதம் உயர்ந்தால் வட்டி வருமானம் தராத சொத்தான தங்கத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறையும். இதனால் தான் தங்கத்தின் விலை சரிவை சந்திக்கிறது என கூறுகின்றனர்.
ஹோர்மோஸ் நீரிணை
ஏபிசி ரீபைனரி நிறுவனத்தின் சர்வதேச நிறுவன சந்தை பிரிவு தலைவர் நிக்கோலஸ் ப்ராஃபில் இது தொடர்பாக பேசுகையில், ஹோர்மோஸ் நீரிணை நீண்ட காலம் மூடப்பட்டால் உலகப் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். அதனால் எதிர்காலத்தில் பொருளாதார மந்த நிலை உருவாகும் பட்சத்தில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்.
வெள்ளி விலை
சர்வதேச சந்தையில், தங்கம் மட்டுமின்றி மற்ற விலைமதிப்புள்ள உலோகங்களின் விலையும் சரிவை சந்தித்தன. ஸ்பாட் வெள்ளி விலை 2.9 சதவீதம் குறைந்து ஒரு அவுன்ஸ் 58.14 டாலருக்கும், பிளாட்டினம் 1.8 சதவீதம் சரிந்து 1,598.48 டாலருக்கும், பலேடியம் 2.3 சதவீதம் குறைந்து 1,247.27 டாலருக்கும் விற்பனையானது. அமெரிக்கா ஈரான் இடையேயான போர் பதற்றம் குறையும் வரை தங்கத்தின் விலை சரிவை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும், முதலீடு நோக்கில் தங்கம் வாங்குபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications