'அதன்' மீது அக்கறை காட்டும் இந்திய பெண்கள்! அறுவை சிகிச்சை எண்ணிக்கையும் அதிகரிப்பு! காரணம் இதுதான்
மார்பகங்களை சிறியதாக்க 15,000 இந்திய பெண்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்
சென்னை: சர்வதேச அளவில் மார்பகங்கள் பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் சுமார் 15 ஆயிரம் பெண்கள் இது தொடர்பான அறுவை சிகிச்சைகளை செய்துகொண்டுள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உடல் ஆரோக்கியத்தில் பெண்கள் எந்த அளவு கவனம் எடுத்துக்கொள்கிறார்கள் என்பது தொடர்பான புள்ளி விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. இதில், இந்தியாவில் பெண்கள் சமீப நாட்களாக மார்பக பராமரிப்பு குறித்து அதிக அக்கறை எடுத்துக்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சினிமாக்களில் அல்லது ஆபாச படங்களில் பார்ப்பதை போல பெரிய மார்பகங்கள் இருப்பது சிறந்தது என ஆண்களின் எண்ணங்களில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இது பெண்களை எந்த அளவு பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்பது குறித்து ஆண்கள் அறிவதில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே இது குறித்து பெண்கள் தங்கள் வீடுகளில் பேசும்போது குடும்பத்தில் உள்ள ஆண்கள் இதனை தேவையில்லா விஷயம் என்று கூறி ஒதுக்கி வைத்து விடுகின்றனர். அளவுக்கு அதிகமான எடையில் இருக்கும் மார்பகங்கள் பெண்களின் தோள்பட்டையைதான் அதிகம் பாதிக்கும். ஒவ்வொரு வேலையின் போதும், அளவுக்கு அதிகமான ஆற்றல் உடலிலிருந்து செலவாகும்.

என்ன பிரச்னை?
இது அந்நாள் முடிவில் கடும் அயர்ச்சியை உண்டாக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இது நாளடைவில் பெண்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக உருவெடுத்துவிடும். பலர் இந்த தொந்தரவோடு காலத்தை கடந்துவிடுகின்றனர். ஆனால், தற்போது இந்த பிரச்னைக்கு தீர்வு காண மருத்துவ வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், மாத்திரைகள், மற்றும் தைலம் போன்ற ஆயில் மூலம் இதனை குறைத்துவிட முடியும் என்று பலரும் கற்பனை செய்துகொண்டு அதற்காக பணத்தை வீணடித்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கு அறுவை சிகிச்சை மட்டுமே சரியான தீர்வை கொடுக்க முடியும். அந்த வகையில் தற்போது இந்திய பெண்கள் இதற்கான சிகிச்சையில் இறங்கியிருக்கிறார்கள் என்கிறார் தனியார் மருத்துவனை மருத்துவர் ஒருவர்.

எண்ணிக்கை
இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் 15 ஆயிரம் பெண்கள் தங்கள் மார்பகங்களின் அளவை குறைக்கும் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அதேபோல 11,520 பெண்கள் தங்கள் மார்பகங்களை நேர்த்தியாக மாற்ற சிகிச்சை பெற்றிருக்கின்றனர். இது ஒருபுறம் எனில் மறுபுறம் 31,608 பெண்கள் தங்கள் மார்பகங்களின் அளவை பெரியதாக்க சிகிச்சையெடுத்துள்ளனர். இந்த எண்ணிக்கைகள் பெரியதாக தெரிந்தாலும், சர்வதேச அளவில் இதனை ஒப்பிட்டு பார்க்கும்போது இது மிகக்குறைந்த அளவுதான். இந்தியாவில்தான் உலகின் மிகவும் அதிகமான இளம்பெண்கள் வசித்து வருகின்றனர்.

அறுவை சிகிச்சை
இது தொடர்பாக சிகிச்சை மேற்கொண்ட பெண்கள் கூறுகையில், "எனக்கு 17 வயதிலிருந்து மார்பகங்கள் பெரியதாக இருந்தது. அந்த வயதிலிருந்தே கடுமையான சிக்கல்களை நான் எதிர்கொண்டேன். குறிப்பாக பிரா போன்ற உள்ளாடைகள் அணியும்போது அதனை வழக்கத்திற்கு மாறாக இறுக்கமாக அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. எனவே மார்பகங்களின் அடியில் உள்ள சருமம் கருமையானது. இது தொடர்பாக என்னுடைய கணவரிடம் கலந்துரையாடி, மார்பக அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம் என்று கூறினேன். ஆனால் அவர் இதை புரிந்துகொள்ளவில்லை. மாறாக என்னை கடுமையாக எச்சரித்தார்.

எவ்வளவு செலவாகும்?
ஆனால் ஒரு கட்டத்தில் என்னால் வலியையும், அசௌகரியத்தையும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதனையடுத்து என்னுடைய சொந்த செலவில் அறுவை சிகிச்சையை செய்துகொண்டேன். இப்போதுதான் என்னால் நிம்மதி பெருமூச்சு விட முடிகிறது" என்று கூறியுள்ளார். இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள சிறிய மருத்துவமனைகளில் ரூ.1.5 லட்சமும், பெரிய மருத்துவமனைகளில் ரூ.4 லட்சமும் செலவாகும். அதேபோல இந்த தொகை இன்சூரன்ஸ் நிறுவனம் கணக்கில் கொண்டு வராது. ஏனெனில் அவர்கள் இந்த சிகிச்சையை உடல் அழகுக்கான சிகிச்சை என்று வரையறுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications