Oneindia Special: விஜய் ஆண்டனி மாதிரி செருப்பு போடாமல் நடக்காதீங்க! ரத்த சோகை வரலாம்: டாக்டர் ப்ரூனோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: செருப்பு போடாம நடந்து பாருங்கள், அதோட அருமை உங்களுக்கு தெரியும் என நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தெரிவித்த கருத்துக்கு டாக்டர் ப்ரூனோ மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மக்கள் பரவலாக செருப்பு அணிய ஆரம்பித்த பிறகு ரத்த சோகை குறைந்துள்ளதாக கூறும் ப்ரூனோ, யாரும் அதிகம் கவனிக்காத ஒரு டே்டடாவை நம்மிடம் முன்வைத்தார்.

சமீபத்தில் ஒரு இசை வெளியீட்டு விழாவிற்கு செருப்பு போடாமல் வந்த நடிகரும், இசையமைப்பாளருமான, விஜய் ஆண்டனி பேசுகையில், செருப்பு இல்லாம நடந்து பாருங்கள், அதோட அருமை உங்களுக்கு புரியும். சீரியஸ்ஸா சொல்றேன், 1 மாதம் செருப்பு போடாமல் நடந்து பாருங்க. அதோட பயன் உங்களுக்கு தெரியும், செமையா இருக்கும் என தெரிவித்திருந்தார்.

health vijay antony

இதற்குத்தான் டாக்டர் ப்ரூனோ எதிர் கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மூளை மற்றும் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ப்ரூனோ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதையடுத்து மேலதிக விளக்கத்திற்காக ஒன்இந்தியா தமிழ் சார்பில் அவரை தொடர்பு கொண்டோம். இதோ அவர் தெரிவித்த கருத்துக்கள்..

குடல் புழுக்கள் ஆங்கிலத்தில் Hook Worm என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் பல வகைகள் இருந்தாலும் Ancylostoma duodenale மற்றும் Necator a mericanus என்பவை மனிதர்களை தாக்கும் வகைகள். இவை குடலினுள் இருந்து கொண்டு, தினமும் சிறிது சிறிதாக இரத்தத்தை உறிஞ்சும். எனவே குடல் புழுக்கள் உள்ள நபருக்கு இரத்த சோகை (Anemia) வரும். நமது உடலில் நுரையீரலில் இருந்து உடலின் பிற பகுதிகளுக்கு பிராணவாயுவை எடுத்து சென்றால் தான் அனைத்து பகுதிகளில் உள்ள திசுக்களும் உறுப்புகளும் ஒழுங்காக வேலை செய்ய முடியும்.

இரத்த சோகை இருந்தால் இப்படி பிராணவாயுவை எடுத்து செல்வது குறைவாக இருக்கும். எனவே உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பிராணவாயு (ஆக்சிஜன் Oxygen) போதிய அளவு செல்லாது. எனவே உறுப்புகளால் ஒழுங்காக வேலை செய்ய முடியாது. இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட நபர்கள் எளிதில் சோர்வடைவார்கள். கண் எரிச்சல் இருக்கும். ஆனால் கண் பரிசோதனை செய்தால் கண் சரியாக இருக்கும். தலைவலி, முதுகுவலி என்று இருக்கும். ஊடுகதிர் (எக்ஸ் ரே) எடுத்து பார்த்தால் எலும்பு சரியாக இருக்கும். இது போல் பல பிரச்சனைகள் இருக்கும்.

இரத்த சோகை அதிகரித்தால் அதனால் இதயத்திற்கு கூட பாதிப்பு வரலாம். (Anemia causing Heart Failure). மேலும் இரத்த சோகை உள்ள பெண்கள் கர்ப்பமடையும் போது பல பிரச்சனைகள் வரும். குழந்தைக்கு போதிய வளர்ச்சி இருக்காது. பிரசவத்தில் சிக்கல் வரும். பேறுகால மரணங்கள் (Maternal Mortality) மற்றும் பச்சிளம் குழந்தை மரணங்களுக்கு (Infant Mortality) இரத்த சோகை என்பது மிகவும் முக்கியமான காரணம் ஆகும்.

அதே போல் குழந்தைகள் வயிற்றில் புழுக்கள் இருந்தால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.(Stunted Growth). எனவே கொக்கி புழுக்கள் பாதிப்பு என்பது வயிற்றில் புழு உள்ளது என்று எளிதாக கடந்து செல்லக் கூடிய பிரச்சனை அல்ல. பேறுகால மரணம், பச்சிளம் குழந்தை மரணம், குழந்தை வளர்ச்சிக் குறைபாடு என்று பல சமூக பிரச்சனைகளின் மூலம் குடற்புழுக்கள் ஆகும் அதே போல் இரத்தச் சோகையினால் உடலில் இருக்கும் இரும்பு சத்து குறைந்தால் முடி உதிர்வது போன்ற பிரச்சனைகளும் வரும்.

சரி இந்த குடற்புழுக்கள் எப்படி உடலினுள் வருகின்றன என்றால் அதில் ஒரு சுவாரசியமான விஷயம் உள்ளது. காலரா, டைப்பாயிடு போன்ற கிருமிகளும் குடலினுள் வந்து பிரச்சனை செய்கின்றன. ஆனால் காலரா கிருமி என்பது நீங்கள் சாப்பிடும் உணவு அல்லது குடிக்கும் நீர் மூலம் உங்கள் குடலினுள் வரும். டைப்பாயிடு கிருமியும் அப்படியே, எனவே நீங்கள் நீரை காய்ச்சி குடித்தால் காலரா, டைப்பாயிடு ஆகியவற்றை தடுக்க முடியும்.

ஆனால் குடற்புழுக்கள் அப்படி அல்ல. இந்த Necator americanus புழுக்களின் சிறுவடிவங்கள் உங்கள் காலில் முதலில் தொற்றுகின்றன. பிறகு காலில் இருந்து இரத்தம் மூலம் நுரையீரல் செல்லுகின்றன. நுரையீரலில் இரத்தக்குழாயில் (venules) இருந்து காற்றுப்பைகளுக்குள் (Alveoli) வருகின்றன. நுரையீரலில் இருந்து மூச்சுக்குழாய் (Trachea) மூலம் வெளிவந்து அப்படியே உணவு குழாய் (Esophagus) மூலம் வயிற்றினுள் சென்று குடலுக்குள் செல்கின்றன

ஒருமுறை குடலினுள் சென்ற Necator americanus புழுக்கள் 15 வருடங்கள் வரை உள்ளிருந்து உங்கள் இரத்தைத்தை உறிஞ்சுகின்றன. (காலரா, டைப்பாயிடு எல்லாம் சில நாட்களே, வருடக்கணக்கில் அல்ல என்பதையும் நினைவில் வையுங்கள்). காலரா டைப்பாயிடு ஆகியவற்றை தடுக்க நீரை காய்ச்சி குடித்தால் போதும். ஆனால் இரத்தச்சோகையை தடுக்க நீரை காய்ச்சி குடித்தால் மட்டும் போதாது, உங்கள் காலில் இந்த புழுக்களின் சிறுவடிவம் (இளம் புழு, லார்வா, larva) தொற்றுவதை தவிர்க்க வேண்டும்.

எப்படி தவிர்க்க முடியும்: சிம்பிள் , செருப்பு அணியுங்கள், இது போன்ற அரைவேக்காடுகளின் முட்டாள்தனமாக உளறல்களை நம்பி இரத்த சோகைக்கு உள்ளாகாதீர்கள். எனக்கு இரத்த சோகை வந்தால் உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா . குடற்புழுக்களில் இரண்டு வகை மனிதர்களை தாக்கும் என்று பார்த்தோம் அல்லவா.. இதில் Necator americanus என்பது கால்வழியாக மட்டுமே ஒருவரை தாக்கும். எனவே நீங்கள் செருப்பு போடவில்லை என்றால் உங்களுக்கு மட்டுமே பாதிப்பு. ஆனால் Ancylostoma duodenale என்பது கால் வழியாகவும் தாக்கும், வாய் வழியாகவும் தாக்கும். எனவே நீங்கள் செருப்பு போடவில்லை என்றால் உங்களுக்கும் பிரச்சனை, மற்றவர்களுக்கும் பிரச்சனை.

பள்ளி சிறுவர்களுக்கு காலணி வழங்கிய பிறகு இரத்தச்சோகை பாதிப்பு குறைந்தது. பேறுகால மரணங்களை குறைத்ததில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா காலணியும் பங்கு வகிக்கிறது என்பது உங்களுக்கு ஆச்சரியம் தரலாம். ஆனால் அது தான் அறிவியல். இவ்வாறு தெரிவித்த ப்ரூனோவிடம், சில கேள்விகளையும் முன்வைத்தோம்.

1. செருப்பு போடாமல் நடந்தால் அக்குபஞ்சர், மாதிரி காலுக்கு நல்லது என்ற கருத்து இருக்கிறது உங்கள் கருத்து என்ன? 2. செருப்பு போடாமல் நடந்து விட்டு கால்களை நன்கு கழுவி விட்டு வீட்டுக்குள் வந்தால் இந்த கிருமி பரவாது அல்லவா ? என்று டாக்டர் ப்ரூனோவிடம் கேட்டபோது, அக்குபஞ்சர் சிகிச்சை போல் கால்களுக்கு நன்மை கிடைக்க செருப்பு இல்லாமல் நடக்க வேண்டும் என்றால் வீட்டுக்குள்ளேயே நடந்து கொள்ளலாம். உங்களை யாரும் தடுக்க மாட்டார்கள். கால்களை நீங்கள் நன்கு கழுவதற்கு முன்பே இந்த லார்வா உங்கள் உடம்பில் ஊடுருவிச் சென்றுவிடும். எனவே கால் கழுவுவதால் தப்ப முடியாது. செருப்பு அணிவதே நல்ல வழிமுறை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+