இன்ப்ளூயன்ஸா எச்3என்2 வைரஸ் காய்ச்சல்.. அறிகுறிகள் என்ன? டாக்டர் பரூக் அப்துல்லா அட்வைஸ்
சென்னை: தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இன்ப்ளூயன்ஸா வைரல் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் ஏற்படும் அறிகுறிகள் குறித்தும் இந்த காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் சிவகங்கை அரசு பொது நல மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இன்ப்ளூயன்சா ஏ வகை வைரஸின் H3N2 திரிபு வைரஸ் தற்போது நமது நாட்டில் அதிக அளவில் பரவி வருகிறது என்று ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது. அதீத காய்ச்சல் (101 டிகிரி ஃபாரன்ஹீட்களுக்கு மேல்) தொண்டை வலி , விடாத வறட்டு இருமல் , குமட்டல் / வாந்தி , உடல் வலி / சோர்வு, தலைவலி போன்றவை இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக இருக்கின்றன.
ஐசிஎம்ஆர் ஆய்வுகளின் படி இந்த தொற்றினால் எதிர்ப்பு சக்தி குன்றியோருக்கு குறிப்பாக குழந்தைகள் , முதியோர்கள், இணை நோய்கள் இருப்பவர்களுக்கு சற்று தீவிரத்துடன் நோய் வெளிப்பட வாய்ப்பு உண்டு. மேற்சொன்ன அறிகுறிகளுடன் மூச்சுத்திணறல் , மூச்சு விடுவதில் சிரமம், விடாத தீவிர காய்ச்சல் , நெஞ்சுப் பகுதியில் வலி , எதையும் சாப்பிட முடியாத அளவு சுணங்கிக் கிடப்பது, தலைசுற்றல், வலிப்பு போன்றவை அபாய அறிகுறிகள் என்று அறிந்து உடனே சிகிச்சை எடுக்க வேண்டும்.

ஃபிங்கர் பல்ஸ்
மீண்டும் ஃபிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டர் துணை கொண்டு ஆக்சிஜன் அளவுகளை சோதித்து வர வேண்டும். 95% Spo2 க்கு குறைந்தால் உடனடியாக தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். 90% க்கு கீழ் SPO2 சென்றால் ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும். சுய மருத்துவம் ஆபத்தானது. பொன்னான நேரத்தை சுயமருத்துவம் செய்து கழிப்பது தவறு. குழந்தைகள் முதியோர் ஆகியோருக்கு காய்ச்சல் இருமல் தோன்றும் போதே மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெற வேண்டும்.

எதிர்ப்பு சக்தி
அடுத்த சில வாரங்களுக்கு எதிர்ப்பு சக்தி குன்றிய முதியோர் குழந்தைகளை அத்தியாவசியமின்றி வெளியில் கூட்டமான இடங்களுக்கு அழைத்துச் செல்வதை தவிர்ப்பது நல்லது. அத்தியாவசியமற்ற பயணங்களை சற்று தள்ளிப்போடுவது சிறந்தது. பொது இடங்களிலும் மக்கள் கூடும் இடங்களிலும் அனைவரும் முகக்கவசம் அணிவது தொற்றுப் பரவலை தடுக்கும் சிறந்த நடைமுறை. தொற்று ஏற்பட்டு காய்ச்சலுடன் இருப்பவர் காய்ச்சல் குணமாகும் மட்டுமேனும் வீட்டில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டால் தொற்றுப் பரவலை தடுக்க இயலும்.

கைகளை சோப் போட்டு அடிக்கடி கழுவுதல்
கைகளை சோப் போட்டு அடிக்கடி கழுவ வேண்டும். எச்சிலை பொது இடங்களில் துப்பக் கூடாது. இந்த வைரஸுகு எதிராக வேலை செய்யும் வைரஸ் கொல்லி மருந்துகள் குறிப்பாக ஒசல்டாமிவிர் நம்மிடம் இருக்கிறது. எனினும் தீவிர நோய் ஏற்பட்டிருப்பவர்களுக்கு மட்டுமே வைரஸ் கொல்லி மருந்துகள் போதுமானது. சாதாரண தொற்று நிலையில் இருப்பவர்களுக்கு பன்றி காய்ச்சல் எதிர்ப்பு வைரஸ் கொல்லி மருந்து தேவையில்லை. ஆண்டு தோறும் அப்டேட் செய்யப்பட்டு வெளிவரும் ப்ளூ வைரஸ்களுக்கு எதிரான தடுப்பூசி இந்த வைரஸ்க்கு எதிராகவும் செயல்படும்.

எதிர்ப்பு சக்தி குன்றியோர்
எனவே முதியோர்கள், எதிர்ப்பு சக்தி குன்றியோர் ப்ளூ வைரஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு தீவிர தொற்று ஏற்படாமல் தடுக்கலாம். இது வைரஸ் தொற்று என்பதால் பாக்டீரியாக்களைக் கொல்லும். ஆண்டிபயாடிக் மருந்துகள் பரிந்துரைப்பதால் பலனில்லை என்று இந்திய மருத்துவர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. காய்ச்சலைக் குறைக்கும் பாராசிட்டமால் மருந்து மருத்துவரை சந்தித்து அவர் பரிந்துரைக்கும் மருந்துகள், குளிர்ந்த நீரில் உடல் முழுவதும் ஒத்தி எடுப்பது, நீர்ச்சத்து நிரம்பிய ஆகாரங்களை உட்கொள்ளுதல், ஓ.ஆர். எஸ் திரவத்தைப் பருகுதல், நல்ல ஓய்வு , இந்த தொற்றில் இருந்து மீள உதவும்.

இணைநோய்கள்
குழந்தைகள் முதியோர்கள் இணைநோய்கள் இருப்பவர்களுக்கு தொற்று அறிகுறிகளில் அபாய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக செயலில் இறங்கி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். பெரும்பான்மையினருக்கு சாதாரண சீசனல் ஜுரமாகக் கடந்து செல்லும் தொற்று இது. இது குறித்து அதிக அச்சம் தேவையில்லை எனினும் எச்சரிக்கை செய்வதற்கே இப்பதிவு. எச்சரிக்கையுடன் இருப்போம். எதிர்வரும் சவாலை வெல்வோம். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications