Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மலம் கழிக்கும் போது பீய்ச்சி அடிக்கிறதா ரத்தம்? அப்படின்னா உங்களுக்கு இந்த நோயாக இருக்கலாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூல நோய் எதனால் ஏற்படுகிறது. அந்த நோய்க்கான அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பல லட்சம் மக்களுக்கு அன்றாடம் ஏற்படும் நோயாக மூல நோய் இருக்கிறது. மூல நோய் என்பதை நவீன அறிவியல் மருத்துவத்தில் "குதக் கால்வாய்ச் சுவர் இறக்க நோய்" என்று அழைப்பது சிறந்ததாக இருக்கும். இந்த நோய்க்கான காரணங்களுள் ஒன்றாக மலம் கழிக்கும் போதும் சிறுநீர் கழிக்கும் போதும் அதிக நேரம் சிரமத்துடன் முக்குவது அல்லது மலம் கழிக்கும் இச்சை ஏற்பட்டும் அதை நீண்ட நேரம் அடக்குவது என்று அறியப்பட்டுள்ளது.

Dr Farook Abdulla explains about piles disease

இவ்வாறு தேவைக்கும் அதிகமாக ஒருவர் மலம் /சிறுநீர் கழிக்கும் போது முக்கும் போது அவரது குதக் கால்வாயின் உட்புற மெத்தை போன்ற தசைகள் மீது அளவுக்கு மீறிய அழுத்தம் தரப்படுகிறது. இதனால் குதக்கால்வாயின் உட்புற தசை மெத்தை வெளிப்பக்கமாக பிதுங்குகிறது. இந்த உட்புற சுவர்களில் இருக்கும் சிரைகளும்( VEINS) சேர்த்தே வெளியே பிதுங்குகின்றன.

இந்த சிரைகளின் ரத்த நாள சுவர்களில் பாதிப்பு ஏற்பட்டு நாளடைவில் அதில் இருந்து ரத்தக் கசிவு ஏற்படுகிறது. ரத்தக் கசிவு ஏற்பட்ட இடங்களில் ரத்தக் கட்டிகள் தோன்றவும் செய்கின்றன. ஏன் மலம் கழிக்கும் போது ஒருவர் முக்க வேண்டும்? சிலருக்கு மலச்சிக்கல் காரணமின்றி இருக்கும். ஆனால் பெரும்பான்மையினருக்கு முறையாக அருந்த வேண்டிய நீரை அருந்தாமல் நீர்ச்சத்து குறைபாட்டால் மலத்தின் தன்மை இறுகிப் போய் இருக்கும். அல்லது சிலருக்கு உணவில் நார்ச்சத்து குறைபாட்டால் மலத்தின் தன்மை இறுகும் வாய்ப்பு உள்ளது.

இன்னும் பலர் தேவைக்கும் அதிகமான நேரம் கழிப்பறைகளில் கழித்து தேவையின்றி வேண்டுமென்றே முக்கிக் கொண்டும் இருக்கலாம். இதனால் ஒருவரின் வயிற்றுப் பகுதியில் அதிக அழுத்தம் உண்டாகி ஆசன வாய் வழி மலத்தை வெளியே தள்ளும் பொருட்டு அழுத்தம் உண்டாகும். இந்த அழுத்தம் மலச்சிக்கலில் இருப்பவர்களுக்கு மிக அதிகமாக இருப்பதால் மூல நோய் உண்டாகிறது. மூல நோயின் அறிகுறிகள் என்ன? மலம் கழித்த பின் மலம் கழிக்கும் கோப்பையில் பளிச்சென்று சிவப்பு நிறத்தில் ரத்தம் ஆசனவாயில் இருந்து பீச்சி அடிக்கப்படுவதை முக்கிய அறிகுறியாகக் கூறுவர்.

Dr Farook Abdulla explains about piles disease

பெரும்பான்மையினருக்கு "வலி" இல்லாமலே இந்த ரத்தம் வெளியேறும். ஆசன வாயைச் சுற்றி நமிச்சல் / அரிப்பு ஏந்நேரமும் இருந்து கொண்டே இருக்கும். மலம் கழித்தும் இன்னும் முழுதாக கழிக்காதது போல எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். வெளியே தள்ளப்பட்ட ஆசன வாய் தசைச் சுவரின் ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்படின் திடீரென தீவிரமான வலி ஏற்படும். கடினமான இறுக்கமான மலத்தை தொடர்ந்து கழிப்பதால் ஆசன வாய்ப்பிளவு ஏற்பட்டு அதனாலும் வலி ஏற்படலாம். ஆசனவாயைச் சுற்றி தொற்று ஏற்பட்டு அதனால் தொற்றுச் சீழ் கட்டி உண்டாகி அதில் இருந்தும் வலி ஏற்படலாம்.

மூல நோய் இருப்பவர்களுக்கு விரலை ஆசன வாய் வழி விட்டு செய்யப்படும் பரிசோதனை செய்யப்படும். இதனுடன் ஆசன வாய் வழி குதக் கால்வாய் பரிசோதனை செய்யப்படும். இதன் வழியாக ஏற்பட்டிருப்பது உள் மூலமா? வெளி மூலமா? என்பது கண்டறியப்படும். மூலத்தில் நான்கு நிலைகள் உண்டு. முதல் நிலை- ஆசன வாய் வழி வெளியே வராத நிலை ரத்தம் மட்டும் மலம் கழிக்கும் போது வெளியேறும். இரண்டாவது நிலை - ஆசன வாய் வழி மலம் கழிக்கும் போதும் முக்கும் போதும் வெளியேறும். ஆனால் தானாக உள்ளே சென்று விடும்.

மூன்றாவது நிலை - ஆசன வாய் வழி வெளியேறும் ஆனால் கை கொண்டு உள்ளே தள்ளினால் மட்டுமே உள்ளே செல்லும். நான்காவது நிலை- வெளியே தள்ளப்பட்ட மூலக் கொத்து உள்ளே எக்காரணம் கொண்டும் செல்லாது. திடீரென ரத்த நாளத்தில் கட்டி ஏற்பட்டு அந்த பகுதி ரத்த ஓட்டமில்லாமல் கெட்டுப் போகும் தீவிர வலி இருக்கும்.

Dr Farook Abdulla explains about piles disease

மூல நோய்க்கு இருக்கும் சிகிச்சைகள்: முதல் நிலையில் வருவது வாழ்வியல் மாற்றங்கள், நீர்ச்சத்து குறைபாடு இல்லாமல் தேவையான அளவு நீரை அருந்துவது மலச்சிக்கலுக்கான காரணம் அறிந்து அதை சரி செய்வது , நார்ச்சத்து மிகுந்த உணவு முறையைப் பேணுவது, அதிக மசாலா அதிக காரம் தவிர்ப்பது, மலச்சிக்கலை சரி செய்யும் மருந்துகளை மருத்துவர் பரிந்துரையில் பாவிப்பது. ஆண்களில் சிறுநீர் கழிக்கும் போது சிக்கலை ஏற்படுத்தும் ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கத்துக்கு சிகிச்சை எடுக்க வேண்டும்.

பெண்களில் கர்ப்பபை கீழிறங்கி சிறுநீர்ப்பையை அழுத்தி இதே போன்று மலச்சிக்கலையும் சிறுநீர் கழிப்பதில் சிக்கலையும் ஏற்படுத்தலாம் அதை களைய வேண்டும். இதற்கடுத்த படியாக ஆசன வாய்வழி உள்காயத்தை ஆற்றும் மருந்து தடவலாம்
பிரச்சனைக்குள்ளான ரத்த நாளத்தின் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்படும். உதிரப்போக்கு ஏற்படும் ரத்த நாளத்திற்கு கீழ் ரப்பர் பேண்ட் கொண்டு முடிச்சு போடப்பட்டும். இதன் வழி உதிரப்போக்கு நிறுத்தப்படும். பிரச்சனைக்குரிய ரத்தப்போக்கு ஏற்படும் சிரையை லேசர் கொண்டு / அக சிவப்பு கதிர்கள் கொண்டு சுட்டு ரத்தப்போக்கை நிறுத்த முடியும்.

மிக முற்றிய நோய் நிலையில் அறுவை சிகிச்சை கொண்டு வெளியே தள்ளியிருக்கும் மூலம் நீக்கம் செய்யப்படும். மூல நோய்க்கான காரணங்கள் களையப்படாமல் மீண்டும் தொடரும் போது அவருக்கு மீண்டும் சில ஆண்டுகள் கழித்து மூல நோய் ஏற்படலாம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். மது / புகை போன்ற உடலுக்கும் உயிருக்கும் ஆபத்தான தீய வழக்கங்களை விட்டொழிக்க வேண்டும். மூல நோயில் ஆசன வாய் வழி ரத்தம் வெளியேறுவது போலவே மலக்குடல் புற்றுநோயிலும் வலியின்றி ரத்தம் வெளியேறும். எனவே கட்டாயம் மேற்கூறிய இரண்டையும் பிரித்தரிய முறையான விரைவான மருத்துவ பரிசோதனை அவசியம். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+