புதுசா கல்யாணம் ஆனவங்களா? குழந்தை பிறப்பை தள்ளி போடணுமா? "சாயா" சாப்பிட்டால் போதும்! டாக்டர் பரூக்
சென்னை: திருமணமானவர்கள் முதல் குழந்தை பிறப்பை தள்ளி போட எந்த வகையான கர்ப்பத் தடை மாத்திரைகளை பயன்படுத்தலாம் என சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: திருமணமானவர்கள் முதல் குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதற்கு எத்தகைய கர்ப்ப தடை முறைகளைப் பயன்படுத்தலாம் ? திருமணமான தம்பதியர் தங்களின் முதல் குழந்தை பிறப்பை தள்ளிப்போட முடிவு செய்தால் ஆண்கள் ஆணுறை அணிந்தும் பெண்கள் பெண்ணுறை அணிந்து கொண்டும் உடலுறவில் ஈடுபடலாம்.

எனினும் உடலுறவில் ஈடுபடுகையில் ஆணுறை கிழிந்து போதல் அல்லது முறையாகப் பயன்படுத்தாமல் போவதால் கருவுற அதிக வாய்ப்புண்டு. பெண்களைப் பொருத்தமட்டில் புதிதாக திருமணமாகி இன்னும் குழந்தை பெறாதவர்கள் மற்றும் அனைத்து வயதினரும் .. ஏன் தாய்ப்பாலூட்டும் அன்னையர் கூட பாதுகாப்பாக உட்கொள்ளக் கூடிய கர்ப்பத்தடை மாத்திரை உள்ளது.
அதன் அறிவியல் பெயர் செண்ட்ரோமன் ஆகும். அரசு மருத்துவமனைகளில், கிராம சுகாதார செவிலியர்களிடம், ஆஷாக்களிடமும் "சாயா" எனும் பெயரில் இலவசமாக இந்த மாத்திரையை பெற்றுக் கொள்ளலாம். இந்த மாத்திரை ஸ்டீராய்டு ஹார்மோன் அல்லாத தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படுவதால் அனைத்து வயது மகளிரும் பாலூட்டும் அன்னையரும் பாதுகாப்பாக உட்கொள்ள முடியும்.
மாதவிடாய் ரத்தப் போக்கு தொடங்கிய நாளில் முதல் மாத்திரையும் அதற்குப் பிறகு நான்காவது நாள் இரண்டாவது மாத்திரையும் உட்கொள்ள வேண்டும். இதே போல முதல் மூன்று மாதங்களுக்கு வாரம் இரண்டு நாட்கள் மட்டும் மாத்திரை போட வேண்டும். மூன்று மாதங்களுக்குப் பிறகு வாரம் ஒரு நாள் மாத்திரை போட்டால் போதும்.
தனியார் மருந்தகங்களில் "சஹேலி" ( SAHELI) எனும் பெயரில் விலை மலிவாகக் கிடைக்கிறது. மாதவிடாயின் போது அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு ரத்த சோகை நிலையில் இருக்கும் மகளிர் இந்த மாத்திரை உட்கொள்ளும் போது மாதவிடாய் உதிரப்போக்கு கட்டுப்படுகிறது. இதனால் ரத்த சோகை நிலையில் முன்னேற்றம் ஏற்படுகிறது. தாய்ப்பாலூட்டும் அன்னைகளும் பாதுகாப்பாக உட்கொள்ள முடியும் என்பதால் இரண்டாவது குழந்தையை உடனே கருவுறாமல் தாயின் நலன் பாதுகாக்கப்படுகிறது.
தாய்ப்பாலின் அளவு, தரம் போன்றவற்றில் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இந்த மாத்திரை உட்கொள்ளும் போது முதல் மூன்று மாதங்களுக்கு மாதவிடாய் சற்று தள்ளிச் செல்லலாம். யாரெல்லாம் இந்த மாத்திரையை தவிர்க்க வேண்டும்?
- சினை முட்டை நீர்க்கட்டி நோய் (Polycystic ovarian disease )
- கர்ப்பபை வாய் கட்டி
- சமீபத்தில் மஞ்சள் காமாலை ஏற்பட்டவர்கள்
- கல்லீரல் நோய் இருப்பவர்கள்
- தீவிர ஒவ்வாமை இருப்பவர்கள்
- காசநோய் , சிறுநீரக நோய்கள் இருப்பவர்கள்
ஏனைய பெண்கள்
வயது பேதமின்றி எந்த வயதிலும் திருமணமான புதிதிலும் ஒரு குழந்தை பெற்று மறுகுழந்தையை தள்ளிப்போடவும். பாலூட்டும் காலத்திலும்
இந்த "சாயா" மாத்திரையை உபயோகிக்க முடியும். மீண்டும் குழந்தை ஈனும் தேவை முற்படின் மாத்திரையை நிறுத்திய சில மாதங்களில் கருவுறுதல் மீண்டும் நிகழும். தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications