ஒரு பேப்பரில் விஷம்னு எழுதி ஒட்டினால் சர்க்கரை நோய் குறையும்.. டாக்டர் பரூக்கின் சூப்பர் டிப்ஸ்!
சென்னை: சர்க்கரை நோய் தாறுமாறாக ஏறுவதற்கு என்ன காரணம் என்பது குறித்து சிவகங்கை அரசு பொது மருத்துவமனையின் டாக்டர் பரூக் அப்துல்லா விவரித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த சில வருடங்களாக என்னை நீரிழிவு சிகிச்சைக்காக சந்தித்து வரும் தாய்க்குலம் ஒருவருக்கு நீரிழிவு சமீப நாட்களில் க்ளாசன் போல நின்று அடங்காமல் மிரட்டிக் கொண்டிருந்தது.

டீ, காபி எதிலும் சீனி நாட்டு சர்க்கரை போன்றவற்றிற்கு வாழ்நாள் தடை விதித்து விட்டுத் தான் நான் சிகிச்சையையே ஆரம்பிப்பேன். அந்த விதத்தில் நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு என்பதை உணர்ந்தும் என்ன ஏதென்று கேட்டதற்கு "அரை ஸ்பூன் சீனி போட்டேன். கால் கரண்டி நாட்டு சர்க்கரை போட்டேன்.. என்று கூறிக் கொண்டு இருந்தார்.
இதற்காக ஒரு சின்ன எக்ஸ்பரிமெண்ட் செய்து பார்க்கலாம் என்று தோன்றி அவரது மகளிடம் " சீனி / நாட்டு சர்க்கரை இருக்கும் டப்பாக்களில் மெல்லக் கொல்லும் விஷம் என்று பேப்பரில் எழுதி ஒட்டச் சொன்னேன்" மேலும் அவர் இனிப்பு கேட்டாலோ, சீனி கேட்டாலோ, நாட்டு சர்க்கரை கேட்டாலோ அந்த டப்பாவை அவரிடம் கொடுத்து நீங்களே தேவையானதை போட்டுக் கொள்ளுமாறு கொடுத்து விடவும் கூறினேன்.
இதன் மூலம் இந்த பழக்கத்தை நிறுத்த முடிகிறதா என்ற சோதனை தான். அடுத்த மாதம் தாயும் மகளும் சந்தித்தனர் . கூறியபடியே மகள் அவ்வாறு விஷம் என்று ஒட்டி வைத்து இனிப்பில்லாத டீ போட்டு இந்த டப்பாவையும் கூடவே பக்கத்தில் வைத்து விடுவாராம். கடந்த ஒரு மாதமாக இனிப்பு போட்ட டீயும் கேட்பதில்லை.
அந்த டப்பாவில் இருந்து தானும் போட்டுக் கொள்ளவில்லை என்று கூறினார். எக்ஸ்பரிமெண்ட் சக்சஸ், அதாவது நாம் எத்தனை முறை எடுத்துக் கூறினாலும் மனிதன் தானே கண் முன் ஒரு விஷயத்தைக் காணும் போது எச்சரிக்கை கொள்கிறான் என்பது இதன் மூலம் புலப்படுகிறது.
நீரிழிவு நோயர் அனைவருக்கும் இனிப்பு ( சுக்ரோஸ்) நிறைந்த சீனி, நாட்டு சர்க்கரை , வெல்லம் , கருப்பட்டி, தேன் , பனங்கற்கண்டு, இனிப்பான பழங்கள் , அனைத்துமே "விஷம்" தான். விஷத்தில் என்ன "கொஞ்சூண்டு" "அதிகம்" எல்லாம். விஷம் விஷம் தான். டயாபடிக்கைப் பொருத்தவரை "ஸ்லோ பாய்சன்" என்பது இனிப்பான பொருட்கள் தான்.
டயாபடிக் உள்ள ஒருவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கவெல்லாம் வேண்டாம். அவருக்கு தினமும் இனிப்பு கலந்த டீ காபி கேட்கக் கேட்கக் கொடுத்தால் நாளடைவில் நீரிழிவே அவருக்கு ஸ்கெட்ச் போட்டு விடும். இது தான் உண்மை , இதை உணர்ந்தால் நன்மை. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications