திருப்பரங்குன்றம் மலை சர்வே.. 4 வாரம் அவகாசம் கோரிய தமிழக அரசுக்கு மதுரை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
மதுரை: ''திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்ததில் சில இடங்களில் முரண்பாடுகள் இருப்பது போல் தோன்றுகிறது. இதனால் மலையை மீண்டும் அளவீடு செய்ய 4 வாரம் காலம் அவகாசம் வேண்டும்'' என்று தமிழக அரசு சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று வாதம் முன்வைக்கப்பட்டது. அதனை கேட்ட நீதிமன்றம் 4 வாரம் காலம் அவகாசம் வழங்கியதோடு, புதிய கட்டமைப்புகள் ஏதேனும் இருந்தால் அதுபற்றிய விவரங்களை அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் சமீபத்தில் பெரும் சர்ச்சையாக மாறியது. மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரியதற்கு மதுரை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியும், அதனை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. இதனால் திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் பெரும் விவாதத்தை கிளப்பியது.

இந்நிலையில் தான் திருப்பரங்குன்றம் கோவில் மலையை முழுவதுமாக தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும். தொல்லியல் துறையிடம் அனுமதி பெற்ற பிறகே இந்த மலை மீது ஏறிச்செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த கேகே ரமேஷ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி ஸ்ரீமதி அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது அதிகாரிகள் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தான் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த கேகே ரமேஷ் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், ''திருப்பரங்குன்றம் கோவில் மலையை அளவீடு செய்ததில் சில இடங்களில் முரண்பாடுகள் இருப்பது போல் தோன்றுகிறது. இந்த இடங்களில் மீண்டும் சர்வே செய்ய வேண்டும். சுமார் 5 ஏக்கர் பரப்பளவை சர்வே செய்ய வேண்டும். இதனால் மலையை மீண்டும் அளவீடு செய்ய 4 வாரம் வரை காலஅவகாசம் வேண்டும்'' என்று அனுமதி கோரப்பட்டது.
இதனை மதுரை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. திருப்பரங்குன்றம் மலையை மீண்டும் அளவீடு பணியை 4 வாரத்தில் முடிக்க மாநில அரசு உறுதியளித்துள்ளது எனக்கூறிய உயர்நீதிமன்றம் மலைப்பகுதியில் புதிதாக கட்டுமான விரிவாக்க பணி நடந்து இருந்தால் அதுபற்றிய விவரங்களை அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டது. அதன்பிறகு வழக்கு விசாரணையை ஆகஸ்ட்14ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.














Click it and Unblock the Notifications