மதவாத சக்திகளுக்கு துணை போகும் விஜய்? கொந்தளித்த கருணாஸ்! திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ் விவகாரத்தில்
சென்னை: 'திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்' ஆவணப்படம் நேற்று சென்னையில் திரையிடப்பட இருந்த நிலையில், அது கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது. இது தொடர்பாகத் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ள முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், தவெக அரசு மதவாத சக்திகளுக்கு இணக்கமாக செல்வதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாகக் கடந்த சில மாதங்களாகவே சர்ச்சை நிலவி வந்தது. அங்குள்ள பிரச்சினை மற்றும் பல நூற்றாண்டுகளாக இருக்கும் வரும் இந்து-முஸ்லிம் மத நல்லிணக்கத்தை விளக்கும் வகையில் "திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்" (Thiruparankundram Files) என்ற ஆவணப்படத்தை தவம் மற்றும் தமிழ்தாசன் கூட்டாக எடுத்துள்ளனர்.

திரையிடல்
இந்த படம் ஏற்கனவே யூடியூப் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஆவணப்படம் சென்னை நுங்கம்பாக்கத்தில் திரையிடப்பட இருந்தது. இதில் தமிமுன் அன்சாரி, கருணாஸ், நடிகர் சத்யராஜ், சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் உள்ளிட்டோர் பங்கேற்க இருந்தனர்.
அனுமதி மறுப்பு
இருப்பினும், இந்த ஆவணப்படத்தை திரையிட இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். கடைசி நேரத்தில் திரையிடல் ரத்து செய்யப்பட்டது. சட்ட ஒழுங்கு காரணமாகத் திரையிட அனுமதிக்க முடியாது என போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கருணாஸ், தமிமுன் அன்சாரி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
தமிமுன் அன்சாரி
அப்போது பேசிய தமிமுன் அன்சாரி, "நாட்டில் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுவது மிக முக்கியமானது. அந்த நோக்கத்தை வலியுறுத்தும் படைப்புகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டியது அவசியம். 'காஷ்மீர் ஃபைல்ஸ்', 'கேரளா ஃபைல்ஸ்' போன்ற படங்கள் வெளியான நிலையில், மத நல்லிணக்கத்தை மையமாகக் கொண்ட இந்த ஆவணப்படத்துக்கு மட்டும் எதிர்ப்பு எழுவது ஏன் என்பது புரியவில்லை. இதில் தமிழக அரசு தலையிட வேண்டும்" என்றார்.
கருணாஸ்
தொடர்ந்து பேசிய கருணாஸ், "ஆளுநர் உரையில் அரசு அனைவரையும் சமமாக அணுகும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், இந்த சம்பவம் அந்த நிலைப்பாட்டுடன் ஒத்துப்போவதில்லை. இந்த பிரச்சினை குறித்து செய்தித்துறை அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம். ஏற்கனவே பல லட்சம் பேர் பார்த்த ஆவணப்படத்தைத் திரையிட மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது தவெக அரசு மதவாத சக்திகளுக்கு இணக்கமாகச் செல்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இந்த ஆவணப்படத்தை அரசு சுட்டிக்காட்டும் எந்த இடத்திலும் திரையிட இருக்கிறோம். நானும் முருக பக்தர் தான்.. கடவுள் நம்பிக்கை தனிப்பட்ட விஷயமாக இருந்தாலும், கடவுளின் பெயரைப் பயன்படுத்தி சிலர் செய்யும் தவறுகளை மக்கள் விமர்சன பார்வையுடன் அணுக வேண்டும்.. அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை மற்றும் நன்கொடைகள் தொடர்பாக முறைகேடு நடந்ததாக வெளியான தகவல்கள் குறித்து, ஆவணப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அது பற்றியும் கேள்வி எழுப்ப வேண்டும்" என்றார்.














Click it and Unblock the Notifications