வைகோவை வைத்து போடப்பட்ட ஸ்கெட்ச்! கண்டுகொள்ளாத விஜய்.. திமுகவின் பிளானே வேற!
சென்னை: மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தால், அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று முதலமைச்சர் விஜய் சொன்னதாக, மதிமுக தலைவர் வைகோ கூறியிருந்தார். இது அப்பட்டமான குதிரை பேர அரசியல் என்று ஆளுநருக்கு திமுக புகார் அனுப்பியிருக்கிறது. இந்த புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? தவெக மற்றும் முதலமைச்சர் விஜய்க்கு சிக்கல் வருமா என்பதை பார்ப்போம்.
தங்கள் கட்சியின் எம்எல்ஏக்கள் இருவரை ராஜினாமா செய்ய சொன்னதாகவும், அப்படி செய்தால் இடைத்தேர்தலில் அவர்களை தான் வெற்றி பெற வைப்பது தன்னுடைய பொறுப்பு என்றும் முதலமைச்சர் விஜய் கூறியிருந்ததாக வைகோ பேசியிருந்தார். இதுதான் தற்போது தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

வைகோவுடன் பேச்சு
தவெக ஆட்சி அமைக்க திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள்தான் உதவின. குறிப்பாக காங்கிரஸ் தனது 5 எம்எல்ஏக்களுடன் ஆதரவு கொடுத்தது. இதை தொடர்ந்து இடதுசாரிகள், ஐயுஎம்எல் மற்றும் விசிக கட்சிகளும் ஆதரவு கொடுத்தன. இருந்தாலும் தவெக தற்போது வரை, எப்போது ஆட்சி கவிழுமோ என்கிற பயத்தில்தான் இருக்கிறது. எனவே, ஆட்சியை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகத்தான் வைகோவுடன் தவெக பேசியதாக சொல்லப்படுகிறது.
கூட்டணி விலகல்
மதிமுகவுக்கு 2 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். ஆனால், இவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு ஜெயித்ததால், திமுக கணக்கில்தான் வருவார்கள். எனவே, மேலே சொன்னதை போல.. தவெகவுக்கு மதிமுகவால் ஆதரவு கொடுக்க முடியவில்லை. இருந்தாலும் கூட திமுக கூட்டணியில் தொடர மதிமுக விரும்பவில்லை. எனவே கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தை நடத்திய வைகோ, திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகுவதாக அறிவித்தார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போதுதான், தங்கள் கட்சி எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய முதலமைச்சர் விஜய் சொன்னார் என்று வைகோ கூறியிருந்தார்.
திமுகவின் புகார்
இது குறித்து ஆளுநருக்கு திமுக புகார் எழுதியிருக்கிறது. அதில், "முதலமைச்சர் குதிரை பேரத்தில் ஈடுபட்டதை வைகோ ஒப்புக்கொண்டார். உதயசூரியன் சின்னத்தில் வென்ற ராஜேந்திரன், செந்தில் செல்வனை ராஜினாமா செய்யக்கோரி வைகோ உடன் இணைந்து முதல்வர் கூட்டு சதி செய்திருக்கிறார். குதிரை பேரத்தில் முதல்வரே நேரடியாக ஈடுபட்டதால் அவர் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
என்ன பாதிப்பு ஏற்படும்
இந்த புகார் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏனெனில், இந்த புகாரில் வைகோவின் பேச்சு மட்டுமே ஆதாரமாக காட்டப்பட்டிருக்கிறது. இதனால், இந்த விவகாரம் சட்டப்படி குற்றவியல் ரீதியான குதிரை பேரம் என்கிற வரம்புக்குள் வருவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு. பண பரிமாற்றம், மிரட்டல் தொடர்பான ஆடியோ, வீடியோ, ஆவணங்கள் இருந்தால் உடனடியாக வழக்கு பதிய முடியும். ஆனால், வெறுமென பேச்சை கொண்டு வழக்கு பதிவு செய்ய முடியாது.
திமுகவின் பிளான்
அந்த வகையில் ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட புகார் என்பது, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால், மக்கள் மத்தியில் தவெகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. திமுகவும் இதெல்லாம் தெரிந்தேதான் புகார் கொடுத்திருக்கிறது. தவெகவை உடனடியாக ஆட்சியிலிருந்து அகற்ற முடியவில்லை என்றாலும் அடுத்த தேர்தலில் இக்கட்சியின் பலத்தை குறைப்பதே திமுகவின் நோக்கம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications