தவெக ஆட்சியை கவிழ்க்க சதி.. செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமாரை வலைவீசி தேடும் போலீசார்
சென்னை: தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்ததாக எம்.எல்.ஏ இளையராஜா கொடுத்த புகாரின் பேரில், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முன்னதாக கரூரில் உள்ள அசோக்குமாரின் வீடு மற்றும் சென்னையில் அவர் தங்கியிருந்ததாக கூறப்பட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
யூடியூபர் திருநாவுக்கரசு உள்பட மொத்தம் 6 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரிடமும் அசோக் குமார் சென்னையில் சந்தித்து பேசியதாகவும், அப்போது அவர் தான் குதிரை பேரத்தில் ஈடுபடுமாறு சொல்லியதாகவும் கூறப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனி தொகுதி எம்.எல்.ஏவும், தவெகவை சேர்ந்தவருமான இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் என்னிடம் யூடியூபர், தேர்தல் கருத்துக்கணிப்பை வெளியிடுபவர் என சொல்லி திருநாவுக்கரசர் செல்போனில் பேசினார். அப்போது அவர் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தால் அதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் இதற்காக ரூ.35 கோடி வரை பேரம் பேசியதாகவும் கூறியிருந்தார்.
மேலும் இதில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் யூடியூபர் திருநாவுக்கரசு, கார்த்திக், ரமேஷ், தியாகராஜன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதில் அசோக் குமாருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதால் கரூரில் உள்ள வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு அவர் இல்லை.
இதையடுத்து கரூரில் உள்ள சக்தி மெஸ்சில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்த கார்த்திக் மற்றும் ரமேஷை போலீசார் கைது செய்துள்ளனர். அங்கு பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ரூ.1 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகவும் போலீசார் கூறினர். அசோக் குமாரை பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வருகின்றனர்.














Click it and Unblock the Notifications