நான் கட்சி மாறி ஓட்டளிக்கவில்லை.. கோவிலில் சத்தியம் செய்து நிரூபித்த கர்நாடகா பாஜக எம்எல்ஏ
பெங்களூர்: கர்நாடகாவில் நடந்த மேல்சபை தேர்தலில் கட்சி மாறி ஓட்டளித்ததாக கட்சி மேலிடம் சந்தேகித்த நிலையில் பாஜக எம்எல்ஏ ஒருவர் கோவிலுக்கு சென்று சத்தியம் செய்து கட்சி மாறி ஓட்டளிக்கவில்லை என்று கூறிய சம்பவம் பெரும் கவனம் பெற்றுள்ளது.
கர்நாடகாவில் சட்டசபை மற்றும் சட்ட மேலவை உள்ளது. சட்ட மேலவை உறுப்பினர்களை எம்எல்சி என்பார்கள். இவர்கள் கட்சியின் எம்எல்ஏக்கள் வாக்களிப்பதன் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்நிலையில் தான் கர்நாடக மேல்-சபையில் 7 எம்எல்சி பதவிகள் காலியாக இருந்தன. இதற்கான தேர்தல் நடந்தது. இதில் சட்டசபை எம்எல்ஏக்களின் பலத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி 4 இடங்களிலும், பா.ஜனதா 2 இடங்களிலும், ஜனதாதளம் (எஸ்) கட்சி கூட்டணியில் உள்ள பாஜக உதவியுடன் ஒரு இடத்திலும் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது.
இதையடுத்து பாஜக 2 வேட்பாளர்களும், ஜனதாதளம் எஸ் கட்சி ஒரு வேட்பாளரையும் நிறுத்தியது. ஆனால் காங்கிரஸ் கட்சி 5 வேட்பாளர்களை நிறுத்தியது. எப்படியாவது பாஜக மற்றும் ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிக்க வைத்து 5வது வேட்பாளரையும் வெற்றி பெற வைக்கலாம் என்று காங்கிரஸ் நினைத்தது. அதன்படி கடந்த 18ம் தேதி ரகசிய வாக்குப்பதிவு நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் 5 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். பாஜகவின் 2 வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஜனதாதளம் எஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர் தோல்வியடைந்தார்.
4 வேட்பாளர்கள் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சியின் 5வது வேட்பாளர்களுக்கு பாஜகவின் 4 எம்எல்ஏக்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த 8 எம்எல்ஏக்களும் வாக்களித்து வெற்றி பெற வைத்தனர். இது பாஜக - ஜனதாதளம் எஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து கட்சி மாறி ஓட்டுப்போட்ட எம்எல்ஏக்களை கண்டறிய தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலா மஞ்சுநாத சாமி கோவிலில் சத்தியம் செய்ய வைக்க பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா திட்டமிட்டார். ஆனால் இதற்கு விமர்சனம் கிளம்பியது. இதையடுத்து அந்த முடிவை விஜயேந்திரா கைவிட்டார்.
இந்நிலையில் தான் கட்சி மாறி ஓட்டு போட்டவர்களில் ஹாசன் மாவட்டம் பேளூர் தொகுதி பா.ஜனதா எம்எல்ஏ எச்கே சுரேசின் பெயர் அடிபட்டது. ஆனால் அந்த குற்றச்சாட்டை எச்கே சுரேஷ் முற்றிலுமாக மறுத்தார். மேலும் அவர் தன் மீதான குற்றச்சாட்டை பொய் என நிரூபிக்க முடிவு செய்தார். இதையடுத்து அவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று கட்சி மாறி வாக்களிக்கவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தர்மஸ்தலா மஞ்சுநாத சாமி முன்பு சத்தியம் செய்தார். கோவில் வைத்து கட்சி மாறி ஓட்டுப்போடவில்லை என கூறி கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்தார்.
இதுபற்றி எச்கே சுரேஷ் கூறுகையில், ''நான் கட்சி மாறி ஓட்டுப்போட்டதாக கூறியதால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தேன். நான் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வருகிறேன். என் தாயை போல் தான் அனைவரையும் பார்க்கிறேன். எனது கட்சியும் எனக்கு தாய் தான். ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவன். இதனால் கட்சிக்கு ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன். நான் மேல் சபை தேர்தலின் போது கட்சிக்கு எதிராக வாக்களிக்கவில்லை. இதுதொடர்பாக என் மீதான குற்றச்சாட்டை பொய் என நிரூபிக்க மஞ்சுநாத சாமி முன்பு சத்தியம் செய்துள்ளேன்.'' என்றார்.












Click it and Unblock the Notifications