"கொலை செய்வது எப்படி?" யூடியூப்பை பார்த்து விவசாயியை கொன்ற நபர்.. அதிர்ந்த போலீஸ்
ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் யூடியூப் வீடியோக்களை பார்த்த 40 வயது மதிக்கத்தக்க நபர், விவசாயி ஒருவரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். நள்ளிரவு நேரத்தில் இரும்பு கம்பியால் அடித்தே கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி சம்பவங்கள் தெரிய வந்துள்ளது.
இந்த நவீனக் காலத்தில் சமூக வலைத்தளம் வந்த பிறகு எல்லா தகவல்களும் நமக்கு இணையதளம் மூலமாகவே கிடைக்கிறது. இதைப் பலரும் நல்லதிற்காகப் பயன்படுத்தினாலும் கூட சில மோசமான செயல்களைச் செய்யவும் பயன்படுத்துகிறார்கள். அப்படியொரு கொடூர கொலை சம்பவம் தான் தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் பகுதியில் நடந்துள்ளது.

கொடூர கொலை
இது தொடர்பாக யூடியூப் வீடியோக்களை பார்த்து கொலை செய்யத் திட்டம் தீட்டிய 40 வயது விவசாயி ஜி மகேஷ் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த 51 வயதான குத்தகை விவசாயி பி. மோகிலி என்பவரைக் கொலை செய்த குற்றத்திற்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோகிலியை கொலை செய்வதற்கு முன்பு... கொலை செய்வது எப்படி, கொலையிலிருந்து தப்பிப்பது எப்படி மற்றும் ஆயுதங்கள் தயாரிப்பது எப்படி என்பது குறித்த வீடியோக்களை விவயாசி மகேஷ் யூடியூப்பில் பார்த்துத் திட்டத்தை வகுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜம்மிகுண்டா மண்டலத்தைச் சேர்ந்த மடிபள்ளி கிராமத்தில் வசிக்கும் மகேஷ், கடந்த ஜூன் 29ம் தேதி இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
என்ன நடந்தது
கடந்த ஜூன் 27ம் தேதி இரவு 11.30 மணியளவில், அங்குசாபூரை சேர்ந்த விவசாயி மோகிலி தனது சைக்கிளில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மடிபள்ளி புறநகரில் உள்ள விவசாய நிலத்தில் மறைந்திருந்த மகேஷ், திடீரென மோகிலியை வழிமறித்துள்ளார். பிறகு இரும்பு கம்பியால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் மோகிலிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சந்தேகம்
இந்தக் கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அப்போது மோகிலியின் மனைவி சாரதா போலீசாரிடம் சில முக்கியமான தகவல்களைக் கூறியிருக்கிறார். அதாவது அங்குசாபூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட புகாரில் மகேஷுக்கும் மோகிலிக்கும் இடையே மோதல் இருந்ததாக போலீசார் கூறினார்.
இதையடுத்து மகேஷை சந்தேக வளையத்திற்குள் கொண்டு வந்த போலீசார், மொபைல் போன் இருப்பிட டேட்டாவை வைத்து அவரை தீவிரமாகக் கண்காணித்தனர். ஒரு கட்டத்தில் கைதும் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையின் போது, அவர் மோகிலியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
பின்னணி
கொலை செய்யப்பட்ட மோகிலி சில மாதங்களுக்கு முன்பு பெண் ஒருவரை வன்புணர்வு செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், மோகிலி சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த பிறகும் அந்தப் பெண்ணை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மகேஷ், மோகிலியை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார்.
இதற்காக அவர் யூடியூப் தளத்தில் கொலை செய்வது எப்படி மற்றும் போலீசாரிடம் இருந்து தப்பிப்பது எப்படி போன்ற வீடியோக்களை தேடிப் பார்த்துவிட்டு, இரும்பு கம்பியால் மோகிலியை அடித்து கொலை செய்துள்ளார். தற்போது குற்றம் சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.














Click it and Unblock the Notifications