வேலூர் பூட்டிய வீட்டில் வீசிய பயங்கர துர்நாற்றம்.. உள்ளே போய் பார்த்தால் போலீஸுக்கு தலை சுத்திருச்சு
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீட்டின் ஸ்லாப் ஒன்றில் கிடந்தது அந்த பெண்ணின் சடலம்.. அவரது கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், கை மணிக்கட்டுகள் அறுக்கப்பட்ட நிலையிலும் கொடூரமான முறையில் சடலமாக கிடந்தார்... இப்படியொரு சடலத்தை கண்டதுமே போலீசாருக்கு தூக்கி வாரிப்போட்டது.. என்ன நடந்தது? யாரிந்த பெண்?
குடியாத்தம் அருகே பேரணாம்பட்டு நகருக்கு உட்பட்டது கூத்தாண்டவர் நகர் பகுதி.. இங்கு வசித்து வருபவர் விஜயகுமார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

வேலூர் தம்பதி
இவருடைய மனைவி பெயர் தனலட்சுமி. இவர் குடும்ப வறுமையின் காரணமாக, பேரணாம்பட்டு நகரில் உள்ள பல்வேறு வீடுகளுக்கு சென்று வீட்டு வேலைகளை செய்து குடும்பத்தைக் கவனித்து வந்தார். இந்த தம்பதிக்கு 12 வயது, 8 வயது, 5 வயதில் மூன்று குழந்தைகள் உள்ளனர்.
குடும்பத்தினர் அனைவருமே மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.. ஆனால், கடந்த சில காலமாகவே கணவன் மற்றும் மனைவி இடையே கருத்து வேறுபாடு வெடித்துள்ளது.. இதனால் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. எந்த நேரமும் அந்த வீட்டில் சண்டை சச்சரவுமாகவே இருக்குமாம்.
அறுக்கப்பட்ட மணிக்கட்டு
இந்நிலையில், விஜயகுமாரின் பூட்டிய வீட்டிலிருந்து திடீரென பயங்கரமான துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது... இதனால் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு லேசாக சந்தேகம் வந்துள்ளது.. ஆனால் நாளுக்கு நாள் துர்நாற்றம் அதிகரித்ததால் பயந்தே போனார்கள்.. உடனடியாக இது குறித்து மேல்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேல்பட்டி போலீசார், பூட்டியிருந்த வீட்டிற்குள் சென்று சோதனை நடத்தினர்.
வீட்டிலிருந்த ஒவ்வொரு அறைக்கும் சென்று பார்த்தால், எதுவுமே கிடைக்கவில்லையாம்.. பிறகு வீட்டின் மேல் பகுதியிலுள்ள ஸ்லாப்பில் தனலட்சுமி சடலமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அவரது உடலை அருகில் சென்று பார்த்த போது போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
வேலூர் கொடூர மரணம்
தனலட்சுமியின் இரண்டு கால்களும் கயிறால் பலமாகக் கட்டப்பட்டிருந்தன. அவரது இரண்டு கை மணிக்கட்டுகளும் கத்தியால் கொடூரமாக அறுக்கப்பட்டு கிடந்தது.. உறைந்த ரத்த வெள்ளத்தில் அந்த சடலம் மிதந்து கிடந்தது.. தனலட்சுமி கொலை செய்யப்பட்டுப் பல நாட்கள் ஆகியிருக்கலாம் என்பதால் உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியது போலீசாரின் முதற்கட்ட ஆய்வில் தெரியவந்தது.
பிறகு தனலட்சுமியின் உடலை மீட்ட போலீசார், போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்துள்ளனர்.. இந்த பயங்கரமான கொலை சம்பவம் குறித்து மேல்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் தனலட்சுமியின் கணவர் விஜயகுமாரைப் பிடித்து போலீசார் தீவிரமாக விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.
வீட்டின் ஸ்லாப்பில் எப்படி
குடும்பத் தகராறில் கணவரே மனைவியை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, உடலை யாருக்கும் தெரியாமல் ஸ்லாப்பில் மறைத்து வைத்தாரா? அல்லது இந்த கொலையின் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா? தனலட்சுமியின் உடல் எப்படி வீட்டின் ஸ்லாப்பிற்கு மேலே கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
சின்னஞ்சிறிய 3 குழந்தைகளும் தாயை காணாமல் தவித்து கொண்டிருக்கின்றன.. தங்களுடனேயே வசித்து வந்த பெண் ஒருவர், இவ்வளவு கோரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பேரதிர்ச்சியை உண்டு பண்ணி வருகிறது.













Click it and Unblock the Notifications