டிரேடிங் போர்.. ஹர்திக் பாண்டியாவை வாங்க சண்டை போடும் 7 அணிகள்.. கடைசியாக குதித்த சிஎஸ்கே!
மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை அணி அடைந்த படுதோல்வி மற்றும் பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு, கேப்டன் ஹர்திக் பாண்டியா அணியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரைத் தங்கள் அணிக்குள் கொண்டு வர மிகப்பெரிய 'டிரேடிங் போர்' வெடித்துள்ளது.
மொத்தம் உள்ள ஐபிஎல் அணிகளில் 7 நிர்வாகங்கள் ஹர்திக் பாண்டியாவைத் வாங்க அதீத ஆர்வம் காட்டியுள்ளனர். இந்த ரேஸில் சிஎஸ்கே அணி கடைசியாக குதித்துள்ளது. சிஎஸ்கே, கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் உட்பட 7 அணிகள் மும்பை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆர்சிபி மற்றும் ஐதராபாத் ஆகிய இரு அணிகள் மட்டுமே இதில் ஆர்வம் காட்டாமல் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கின்றன.

சிஎஸ்கே அணி இந்த ரேசில் தாமதமாக நுழைந்தாலும், அவர்கள் ஹர்திக்கை அணுகும் விதம் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. கடந்த சீசனில் சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ரன் ஆகியோரை உள்ளடக்கிய மெகா டிரேடிங்கின் போது சிஎஸ்கே எப்படி பொறுமையாக இருந்து காய் நகர்த்தியதோ, அதே பாணியை இப்போதும் கடைப்பிடிக்கிறது.
தோனிக்கு பின் சிஎஸ்கே அணிக்கு ஒரு வலுவான ஆல்-ரவுண்டர் தேவை என்பதால் ஹர்திக் பாண்டியா மிகச் சரியான தேர்வாக இருப்பார் என நிர்வாகம் கருதுகிறது. இருப்பினும், அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்படுமா என்பதில் எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் அணிகள் அவருக்கு கேப்டன் பதவியோடு, நீண்ட காலப் பொறுப்பையும் வழங்க தயாராக இருக்கின்றன.
இதனிடையே ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரியைப் பகிர்ந்திருந்தார். அதில் அவரது மொபைல் ஸ்கிரீனில் "07:07" என்ற நேரம் காட்டியது. இதைப் பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள், அந்த '7' என்ற எண் தல தோனியின் ஜெர்சி எண்ணைக் குறிப்பதாகவும், ஹர்திக் பாண்டியா சென்னை அணிக்கு வருவதை மறைமுகமாக உறுதிப்படுத்திவிட்டார் என்றும் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்தனர்.
ஹர்திக் பாண்டியாவின் சம்மதம் இதில் மிக முக்கியம் என்பதால், அவர் கேப்டன் பதவி இல்லாத சிஎஸ்கே-விற்கு வருவாரா அல்லது கேப்டன் பதவி தரும் கேகேஆர்-க்கு போவாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதனிடையே மும்பை அணியுடனான போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவுடன் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
ஒரு வீரர் டிரேட்டில் செல்ல வேண்டுமென்றால், அந்த வீரரின் சம்மதமும் மிகவும் முக்கியம். இதனால் என்னதான் மற்ற அணிகள் முயற்சித்தாலும், கடைசி ஹர்திக் பாண்டியா எடுக்கப் போகும் முடிவே இறுதியாகும். ஆனால் சிஎஸ்கே அணி எந்த வீரரை விட்டுக் கொடுத்துவிட்டு ஹர்திக் பாண்டியாவை வாங்கும் என்பதே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.












Click it and Unblock the Notifications